Friday, September 1, 2023

நெருக்கமான இடைவெளியைத் தாண்டும் கலை


 Netflixல் The Hunt for Veerappan டாக்குமெண்டரி பார்த்தேன். மிக நுட்பமாக எழுதப்பட்ட Script. முத்துலட்சுமியின் அங்க அசைவிலும் பேச்சிலும் வீரப்பனைப் பார்க்க முடிந்தது. தான் கொண்ட பாவனையை இயல்பாக்கிய வீரப்பனின் முடிவு சிவசுப்ரமணி எடுத்த புகைப்படங்களிலும் காணொளிகளிலும் நிகழ்ந்துவிட்டது தற்செயலானதில்லை. ஆனால் ராஜ்குமாருக்கான பிணையில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுக்க அரசு உடன்பட்டதைக் கேள்விப்பட்டதும், வீரப்பன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரைக் கலந்து அதனுடன் ஏதோ ஒரு காட்டிலையைக் கசக்கி, சாரை அதில் விட்டதும் அந்தத் தண்ணீர் கட்டியாகிவிட்டது என்று சொல்லக் கேட்கும்போது, ஓர் அபூர்வ அனுபவ மூளையை சிதறடித்தது ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. படத்தின் மற்றொரு முகத்தை இப்படிக் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் மற்றொரு பரிமாணத்திற்கான இடத்தைக் கொடுத்து, மாற்றான ஒரு புள்ளியை போகிறபோக்கில் சொல்லிச் செல்வதே கலையின் முன்மாதிரியாக்குகிறது, படம்.


இங்கே ஓர் ஒப்பீடு தானாக உருவாகிறது. மாமன்னன் படம் விக்ரம், KGF போன்ற படங்களின் பாவனையை கலைப் படைப்பாக்க முயன்ற ஒரு போலி முற்போக்குப் படமாகத்தான் இருக்கிறது. குறியீடுகளை படமாக்குதலில் உண்டான பெலஹீனம்தான், மாமன்னன். அரசியல் ரீதியிலான வெற்றுக் கற்பனைக்கூட இல்லை. 


மாரி செல்வராஜே நினைத்தாலும் மற்றொரு பரியேறும் பெருமாளை எடுத்துவிட முடியாது என்பது மாமன்னனிலிருந்து புரிந்து கொள்ளலாம். அகிராகுருவோவாவின் Dreams படத்தின் பனிமலையேறும் கனவின் ஓர் உத்தியை நாயைக் கொண்டு அற்புதமாக தனது படத்தில் பயன்படுத்தியிருப்பார். எந்த படத்தின் சாயலும் இல்லாமல் தன்னியல்பாக ஒரு படம் எடுக்கும்போதுதான், அந்த இயக்குநரின் ஆகிருதி வெளிப்பட்டுவிடுகிறது. மையமான ஒரு சிந்தனையிலிருந்து அந்தப் படைப்பை உருவாக்குவதற்கும், ஒரு Discussionல் உருவான செயற்கைக்கும் இருக்கும் விபத்தே இதுபோன்ற ஆக்கங்கள்.


The Predator படத்தில் கடைசியாக ஒரு யுத்தம் நிகழும். அது தனது அதி நவீன ஆயுதங்களை துறந்துவிட்டு ஒற்றைக்கு ஒற்றையாக, நிராயுத பாணியான கதாநாயகனுடன் சமரிடும் அந்த predator. அது, தான் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையிலிருந்து தவறும்போது, தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். இந்த மனித வீர கற்பனையே உயிரினங்களின் விடாத Servival of the fitness தன்மையின் வெளிப்பாடு. அதுவே யுத்தம். 


ஆனால் மனித அறிவு வித்தியாசமானது. அது இயற்கையை ஏதோவொரு விதத்தில் மறுத்து, தன்னியல்பை பெற்றுவிடுவதிலேயே இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு கட்டுப்படாததது போல தன்னை நிறுவிக் கொள்கிறது. ஆனால் தனது நிலையின்மையின்மேல் அவ்வளவு அசட்டையானது வேறு ஒன்று இல்லவே இல்லை, இந்த பிரபஞ்சத்தில்.


எனவே, கலை என்பது, தன்னை முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்திக் கொள்வதிலேயே, அது எப்போதைக்குமானதாக தன்மை ஒன்றைக் கொண்டதாக இருக்க வேண்டுமாகிறது.