Wednesday, September 13, 2023

சிறந்த சினிமா...

 




சமூக, பண்பாட்டு, தனிமனித கூறுகளை வேறு எப்படியும் பெரும்பாலும் சொல்ல முடியாத ஒரு கோணத்தில் திரைப்படத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே நவீன திரைப்படக் கலை.


பாலுமகேந்திராவின் 'வீடு' படத்தில் ஒரு காட்சி வரும். படத்தின் முக்கிய பாத்திரமான சொக்கலிங்க பாகவதர், ஒரு மழை வரும் மாலை வேளையில் இன்னும் கட்டி முடிக்கப்படாத தனது வாரிசின் வீட்டைப் பார்க்கப் போகிறார்.


இறுதி வேலைகள் முடிக்கப்படாத கட்டியும் கட்டாத செங்கல் அடுக்காக இருக்கும் அவ்வீட்டை அடைந்துவிடுகிறார். சிமெண்ட் பூசப்படாத புழுதி நிறைந்த நடையுடன் கூடிய அந்த வீட்டிற்குள் நுழையும் அவர், தனது செருப்புகளை வீட்டிற்கு வெளியிலேயே கழற்றி விட்டு உள்ளே செல்வார். இது போகிற போக்கில் இளைய ராஜாவின் 'How to Name it' இசைத்தொகுப்பின் ஓர் இசைக்கு மறைந்துபோகக் கூடிய ஒரு காட்சிதான். 


ஆனால், தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனத்தில் 'ஒரு வீடு' பற்றிய பண்பாட்டு ஒழுங்குமுறை காட்சியாக, வேறு எதுமாதிரியும் சொல்லிவிட முடியாத தனிமனித ஒழுங்கை, பாலுமகேந்திரா வெகு அநாயசமாகச் சொல்லியிருப்பார். ஒரு நெடும் இசைக்கு இடையில் சட்டென தோன்றும் கணநேர அமைதிபோல இது பாலுமகேந்திராவின் எந்த குறுக்கீடுமற்ற தன்னியல்பான ஒரு காட்சியை அந்தத் திரைப்படத்தின் ஆன்மாவாக மாற்றும் மிகச் சிலரில் முக்கியமானவராக எனக்கு காட்டியது. 


அந்தப்படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஒரு காட்சிக்கான விருது மட்டும்தானா அது? இல்லைதான்.


இந்திய 69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


சிறந்த பிராந்திய மொழி படமாக 'கடைசி விவசாயி' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்ச்சி.


சொக்கலிங்க பாகவதருக்குப் பின் யாராவது இருப்பார்களா என்று ஏங்கிய எனக்கு, நல்லாண்டி பெரிய ஆற்றுதலை அளித்தார்.


வீடு படத்தின் மையச் சரடாக வரும் அது போன்ற காட்சியே படம் முழுக்க வந்தால் எப்படி இருக்குமோ அதுவே 'கடைசி விவசாயி'. 


ஒரு கலைப்படம் தனக்கான உச்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு காட்சிதான் விஜய் சேதுபதிக்கு உணவு பரிமாறும்போது இல்லாத ஒருவருக்கான மூன்றாவது தட்டு உணவு. பண்பட்ட முதிய ஆன்மாக்கள் இயற்கையின் சகல சாத்தியங்களையும் அவதானிக்கும் ஒரு பக்குவத்தை அடைவதுதான், 'மயிலை யாராவது கொல்லுவாங்களா?' என்ற கேள்வி.


நீதி மன்றத்தின் தேவையையே கேள்விக்குள்ளாக்கும் இந்தக் காட்சி.


சிறந்த திரைப்படத்திற்கான விருது 'ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்' (ஆர். மாதவன்) கிரிஸ்டோபர் நோலனின் 'ஆபன்ஹைமர்' வரிசையில் ஒரு முக்கியமான படத்திற்குக் கிடைத்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியோ அதே அளவு மகிழ்ச்சி வடிந்துபோனது

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது

தி காஷ்மீர் பைல்ஸுக்குக் கொடுத்திருப்பது.


சிறந்த படைப்புகளுக்கான விருது வழங்குவதன் மூலம் மக்களை பண்படுத்துவது அரசின் கடமைகளுள் ஒன்று. இந்திய அரசு எப்போதும் தனது பெலஹீனத்தை அல்லது வாய்ப்பை வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை.

Friday, September 1, 2023

நெருக்கமான இடைவெளியைத் தாண்டும் கலை


 Netflixல் The Hunt for Veerappan டாக்குமெண்டரி பார்த்தேன். மிக நுட்பமாக எழுதப்பட்ட Script. முத்துலட்சுமியின் அங்க அசைவிலும் பேச்சிலும் வீரப்பனைப் பார்க்க முடிந்தது. தான் கொண்ட பாவனையை இயல்பாக்கிய வீரப்பனின் முடிவு சிவசுப்ரமணி எடுத்த புகைப்படங்களிலும் காணொளிகளிலும் நிகழ்ந்துவிட்டது தற்செயலானதில்லை. ஆனால் ராஜ்குமாருக்கான பிணையில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுக்க அரசு உடன்பட்டதைக் கேள்விப்பட்டதும், வீரப்பன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரைக் கலந்து அதனுடன் ஏதோ ஒரு காட்டிலையைக் கசக்கி, சாரை அதில் விட்டதும் அந்தத் தண்ணீர் கட்டியாகிவிட்டது என்று சொல்லக் கேட்கும்போது, ஓர் அபூர்வ அனுபவ மூளையை சிதறடித்தது ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. படத்தின் மற்றொரு முகத்தை இப்படிக் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் மற்றொரு பரிமாணத்திற்கான இடத்தைக் கொடுத்து, மாற்றான ஒரு புள்ளியை போகிறபோக்கில் சொல்லிச் செல்வதே கலையின் முன்மாதிரியாக்குகிறது, படம்.


இங்கே ஓர் ஒப்பீடு தானாக உருவாகிறது. மாமன்னன் படம் விக்ரம், KGF போன்ற படங்களின் பாவனையை கலைப் படைப்பாக்க முயன்ற ஒரு போலி முற்போக்குப் படமாகத்தான் இருக்கிறது. குறியீடுகளை படமாக்குதலில் உண்டான பெலஹீனம்தான், மாமன்னன். அரசியல் ரீதியிலான வெற்றுக் கற்பனைக்கூட இல்லை. 


மாரி செல்வராஜே நினைத்தாலும் மற்றொரு பரியேறும் பெருமாளை எடுத்துவிட முடியாது என்பது மாமன்னனிலிருந்து புரிந்து கொள்ளலாம். அகிராகுருவோவாவின் Dreams படத்தின் பனிமலையேறும் கனவின் ஓர் உத்தியை நாயைக் கொண்டு அற்புதமாக தனது படத்தில் பயன்படுத்தியிருப்பார். எந்த படத்தின் சாயலும் இல்லாமல் தன்னியல்பாக ஒரு படம் எடுக்கும்போதுதான், அந்த இயக்குநரின் ஆகிருதி வெளிப்பட்டுவிடுகிறது. மையமான ஒரு சிந்தனையிலிருந்து அந்தப் படைப்பை உருவாக்குவதற்கும், ஒரு Discussionல் உருவான செயற்கைக்கும் இருக்கும் விபத்தே இதுபோன்ற ஆக்கங்கள்.


The Predator படத்தில் கடைசியாக ஒரு யுத்தம் நிகழும். அது தனது அதி நவீன ஆயுதங்களை துறந்துவிட்டு ஒற்றைக்கு ஒற்றையாக, நிராயுத பாணியான கதாநாயகனுடன் சமரிடும் அந்த predator. அது, தான் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையிலிருந்து தவறும்போது, தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். இந்த மனித வீர கற்பனையே உயிரினங்களின் விடாத Servival of the fitness தன்மையின் வெளிப்பாடு. அதுவே யுத்தம். 


ஆனால் மனித அறிவு வித்தியாசமானது. அது இயற்கையை ஏதோவொரு விதத்தில் மறுத்து, தன்னியல்பை பெற்றுவிடுவதிலேயே இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு கட்டுப்படாததது போல தன்னை நிறுவிக் கொள்கிறது. ஆனால் தனது நிலையின்மையின்மேல் அவ்வளவு அசட்டையானது வேறு ஒன்று இல்லவே இல்லை, இந்த பிரபஞ்சத்தில்.


எனவே, கலை என்பது, தன்னை முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்திக் கொள்வதிலேயே, அது எப்போதைக்குமானதாக தன்மை ஒன்றைக் கொண்டதாக இருக்க வேண்டுமாகிறது.