Thursday, April 14, 2022

மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும்

இன்று அம்பேத்கர் ஜெயந்தி. 
(14-02-2022)

பா. ஜ.க வினர் தென் அழகாபுரம் பகுதி காவாத்துத் திடலில் அம்பேத்கரின் பேனருக்கு மாலையிட்டு மரியாதை செய்து கொண்டிருந்தனர். எனக்குக் கொஞ்சம் புரியாமல் இருந்தது. அம்பேத்கருக்கும் பா.ஜ.க விற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. 

ஏனென்றால் சேலம் தென் அழகாபுரம் என்பது தலித்துகள் பகுதி. அதை ஒட்டித்தான் காவல்துறையின் காவாத்துத் திடல் இருக்கும். வலைக்கட்டி எப்போதும் குழுக்களாக விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ இரங்கல் பேனர்கள் தொங்கும். 

தீண்டாமை மிக்க இந்து மதமே வேண்டாம் என்று பெளத்தத்திற்கு மாறிய, நூறாண்டுகள் ஆன அம்பேத்கரை மீண்டும் இந்துத்துவா சக்திகள் தங்களில் ஒருவராக அவரைக் காட்டிக் கொள்வதில்தான் பா.ஜ.க வின் அரசியல் வியூகத்தின் நுட்பம் அடங்கியிருக்கிறது. 

அரசியல் தலைவர்கள் தவிர்த்து பெரிதாக தலித்துகள் இல்லாத எந்த இனக் குழுவும் அம்பேத்கரின் பிறந்த நாளை பொது வெளியில் கொண்டாடுவதில்லை. இந்த விஷயம்தான் பா.ஜ.க வின் ஆயுதமாக மாறுகிறது. அவர்கள் பல்வேறுபட்ட தங்கள் எல்லைக்கு அப்பால் இருக்கும், அதாவது இஸ்லாமிய, கிருத்துவ விஷயங்களைத் தவிர்த்து, ஏன் வருங்காலங்களில் அதையும் தங்கள் இனமாகக் காட்டுவதன் மூலமாக பொது புத்தியின் நுண்மையை மழுங்கடிப்பார்கள். இதுவே அவர்களின் அரசியல் பலம். இது மற்ற கட்சிகள் செய்யாத எல்லை. 

இந்த செயல்பாட்டை, காங்கிரஸோ, திமுகவோ கையிலெடுத்திருக்க வேண்டும், தமிழ் நாட்டைப் பொறுத்து.
இதுபோன்ற விஷயங்களில் தவறவிடும் அரசியல் கட்சிகள், காங்கிரஸைப்போல பொது கவனத்திலிருந்து துடைத்தெடுக்கப்படும். 

பதிவிட்டிருக்கும் படத்தில் பா.ஜ.வின் பேனருக்குப் பின்னால் அந்தப் பகுதி தலித்துகளின் சிறிய அளவிலான பேனர் மையப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஆபத்து. பூர்வர்களையும் அதாவது உரிமை கோருபவர்களையும் இனி இல்லாமல் செய்துவிடக்கூடிய ஓர் உத்திதான் இந்த பிறந்த நாள் கொண்டாட்ட நாடகம். 

இதன் உப விளைவாக எங்களின் தலைவன் என்ற போர்வையில் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க, அல்லது பெரும்பான்மை அடைந்துவிட்டு, அதன் பிறகு தேர்தலையே புறக்கணிக்கக் கூடிய ஒரு நிலைமையும் வரக்கூடும். 

எந்த நிலை நாட்டிற்கு வரக் கூடாது என்று போராடினார்களே, அவர்கள் உயிரோடிருந்தால் காந்தியைப் போல இல்லாமல் செய்தும், அவர்கள் இல்லாமல் இருந்தால், அவர்களை தம்முடையவர்களாக மாற்றும் இந்த வஞ்சக நாடகம் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டே வருகிறது. மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஓர் அரசியல் கட்டம் இது. 

ஜெய் பீம்.