சி. மணியின் 12 வது நினைவு தினம், 06-04-2022 இன்று.
அவருடனான ஒரு மாலையில் மொழியின் செயல்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அது ஒரு ஞாயிறு. அன்று சர்வராஜ் இல்லை. அவர் திங்கள், வெள்ளி மட்டும்தான் மணியைப் பார்க்க வருவார்.
சிந்தனையே மொழியின் ஒரு உப செயல்பாடுதான். அது எத்தகைய மொழியாக இருந்தாலும். அதாவது சைகை மொழியாக இருந்த போதும். மெளனம் என்பது மற்றுமொரு மொழியாகவே செயல்படுகிறது. எல்லா மொழிக்கும் அது பொதுவான ஒரு கூறாக இருக்கிறது என்று எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது, அந்த பொதுவான மொழியைக் கையாண்டு கொண்டிருந்தார்.
கடைசியாக, விட்கெண்ஸ்டைன் பற்றி ஒரு குறிப்பைப் பற்றிச் சொன்னேன்.
"இதுவரைத் தொகுப்பின் சிந்தித்தல் கவிதையைப் படித்தீர்களா? என்றார்.
" அதை முன்பே வாசித்துவிட்டேன்"
அப்போதுதான் எனக்குப் பொறி தட்டியது.
தத்துவ சிக்கல்கள் மொழிச் சிக்கலால் உருவானவை. மொழியைச் சரியாகப் பயன்படுத்தினால் இந்த சிக்கல்களைக் கடந்துவிடலாம் என்ற சிந்தனையைக் கொண்டவர் விட்கெண்ஸ்டைன்.
தற்போது கிரியாவினால் அவரைப் பற்றிய புத்தகம் வந்திருக்கிறது. வாசிக்க வேண்டும்.
நிச்சயமாக மணி விட்கெண்ஸ்டைனை வாசித்திருப்பார் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு நாளும் அது பற்றி பேசியதில்லை. எனக்குத்தான் எல்லாம் புதிதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தன.
சி மணியின் கவிதையைப் பார்ப்போம்.
சிந்தித்தல்
@@@@@@@
சிந்திப்பதற்கு
மிகச்சிறந்த முறைஎது என்றால்
சிந்திக்காமல்
இருந்து விடுவதுதான்.
சந்தேகமா?
சரி,ஒரு தொடக்கமாக, நீசிந்திக்க முயன்று பார்க்கலாம். மொழியைப் பயன்படுத்தாமல்.
மேலும், மொழியைப் பயன்படுத்த வேண்டுமானால் உனக்குத் தெரியாத மொழியை
உபயோகி.
கணையாழி ஜூன் 94
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மணி விட்கெண்ஸ்டைனை தாண்டி ஓடிவிட்டதாகவே எனக்குப்பட்டது. சிந்தனையின் எல்லையே மொழியின் எல்லைதான் என்று விட்கெண்ஸ்டைன் சொல்லும்போது, மணி அதை பயன்படுத்தாமல் சிந்திக்கச் சொல்வது ஏதோ ஒரு தப்பித்தல் போல முதலில் தோன்றியது.
ஆனால் மணி விட்கெண்ஸ்டைனைக் கடந்து அடுத்தக் கட்டத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தேன். அதுவும் நமக்குத் தெரியாத ஒரு மொழியை எப்படி பயன்படுத்துவது?
இங்கே விட்கெண்ஸ்டைன் சொல்வதுபோல மொழிச் சிக்கலாலேயே தத்துவச் சிக்கல் வருகிறது என்பதை மணி Bypass செய்வது புரிந்தது.
மொழியில்லாமல் அல்லது தெரியாத மொழியில் சிந்திப்பது என்பது மனித மூளையின் சவால். அப்போது மொழியில்லாமலும், சிந்தனை என்ற அடிப்படை phenomena தன்னியல்பாக நடக்கக் கூடியதான ஒன்றுதான் என்று புரிந்தது. மொழிக்கு எல்லை என்ற ஒன்று இல்லை என்றும் புரிந்தது. அப்படியென்றால் சிந்தனைக்கும் எல்லை இல்லை என்றே தோன்றியது. அதற்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸை எடுத்துக் கொள்ளலாம்.
மணி, மூளையில் நடக்கும் வேறு ஒரு நிகழ்வை அர்த்தப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு வந்தேன். அது மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு Enlightenment என்பதாகவேத் தோன்றியது.
அது ஓர் உணர்வு நிலை. இதை கீழைத்தேய மூளையால் மட்டுமே உணர முடியும் என்று புரிந்தது. ஹைடேக்கரின் phenomenon தத்துவத்திற்கும் விட்கெண்ஸ்டைனின் philosophy of language க்கும் சி. மணி விடை கண்டு விட்டார் என்றே அன்று உணர்ந்தேன். அது கவிதையாக மிக்கக் கச்சிதமாக வந்திருப்பதை வியக்காத நாளில்லை. இப்படி தத்துவத்தை கவிதையில் சாதித்தவர்களில் சி. மணி மிக முக்கியமான தத்துவவாதி என்றே இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இது பற்றி நிறைய பேச வேண்டும்.
சி. மணியின் புகழ் ஓங்கட்டும்