Tuesday, April 12, 2022

ழ ....

 


            டிப்படை கருத்தாக்கங்களின் அடியாழங்களில் நிகழும் மீயழுத்த வெடிப்புகள் காலத்தின் அடுத்த தலைமுறைக்கான, புதிய வெளிகளுக்கான உந்து சக்தியாக இருக்கிறது என்பதைவிட,  அது இயற்கையின் ஒரு கால இடைவெளியின் சடுதி மாற்றமாக இருந்துவிடுவதையும், அதற்கான திட்டங்களையும் யாரும் கணித்துவிடுவது எளிதல்ல.


     எனக்கு இளையராஜாவின் இசை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஏ. ஆர். ரஹ்மானின் இசையும்.
ஏ. ஆர். ரஹ்மான் இளையராஜாவிற்கு அடுத்ததாக தமிழ் திரை இசையில் ஒரு Trend Setter என்பதில் எந்த எதிர் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இளையராஜாவின் கற்பனை வறண்டபோது அல்லது ஒரு படைப்பாளியின் தரிசன எல்லை ஒரு கால வரையறைக்குள் அடங்குவதுதான அவகாசம் முடியும்போது அடுத்த இசை தரிசன சாத்தியம் ஒன்று உருவாகிறது. அதுதான் ஏ. ஆர். ரஹ்மானின் இசை. இங்கே இவரைப் பொருத்தவரை, இசை மட்டுமல்லாமல், அது அவரது தனிப்பட்ட ஆளுமையையும் சார்ந்ததாக மாறுகிறது. எப்படி என்றால் இளையராஜா இசையில் தனது சாதனை உச்சத்தை அடைந்தார் என்றால், ஏ. ஆர். ரஹ்மான் அதைத் தாண்டி தன்னை நிறுவிக் கொள்வதற்கான தேர்ந்த வழிகளை கையாண்டார் என்பதை கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். வழக்கமாக ஏ. ஆர். ரஹ்மான் தனது அபூர்வமான நேர்காணல்களில் ஆங்கிலத்தில்தான் பேசுவார். தமிழுக்குப் பிறகு அவரது இலக்கு ஹிந்தி. ஆனால் ஹிந்தி என்பது அவருக்கு ஒரு இடைவெட்டுத்தான். அது அவர் ஹாலிவுட்டிற்கு நுழைவதற்கான ஒரு படி.
கிட்டத்தட்ட "கருத்தம்மா"விற்கு கிராமத்துக்கான இசையே அவரது எதிர்காலமும் இளையராஜாவிற்கான அசலான ஒரு மாற்றும் என்ற கருத்து அப்போது நிலவியது. ஆனால் எதிர்ப்பார்ப்பை ஏ. ஆர். ரஹ்மான் சமாளித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த இசை எந்த அளவிற்குத் தாக்குப் பிடிக்கும் என்று யோசிக்கும்போதே, ஹிந்தியில் ஹிட்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அவரது "வந்தே மாதரம்" ஆல்பம் மிக பெரிய எழுச்சியை அடைந்தது. ஆனால் அதற்குப் பின்னால் இருந்த ட்ரம்ஸ் மணி, ரஞ்சித் பரோட் போன்றவர்களின் மாபெரும் உழைப்பு என்பதை இளையராஜா போல ஏ. ஆர். ரஹ்மான் மறைக்கவில்லை. குறிப்பாக "வந்தே மாதரம்" இரண்டாவது ஆல்பம் "ரஞ்சித் பரோடின்" இசையமைப்பில் மிகச் சிறப்பாக வந்திருந்தது. ஏ. ஆர். ரஹ்மானின் "வந்தே மாதரம்" அவரது ஒரு சில திரைப் பாடல்களின் சாயலில் அமைந்ததுதான். இவ்வளவு ஏன்? "ஜெய்ஹோ"வே மற்றொரு அவரது பாடலின் தன்னகல்தான். அப்போதே அவருக்கு வறட்சி வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் "ரஞ்சித் பரோட்டின்" பாடல்கள் வேறு தரத்தில் பாரம்பரிய இசையின் Fusionனில் கலக்கியிருந்தார். அதை சி. மணிக்குப் போட்டுக் காட்டியபோது சாஸ்திரிய இசையின் கட்டட்ற தன்மையை நினைவு படுத்தினார். ஆனால் எனக்கு Fusion இசைதான் ஆகச் சிறந்த சாதனையாகப்பட்டது. நிறைய படங்களுக்கு ஏ. ஆர். ரஹ்மானின் இசைப் பணியை ரஞ்சித் பரோட்தான் பார்த்திருக்கிறார்.

    ஏ. ஆர். ரஹ்மானின் அடுத்த இலக்கான ஹாலிவுட் கனவு என்பது வெறும் இசையமைப்பு என்பதைத் தாண்டி, விருதுகளின் பக்கமே சாய்ந்தது. ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட வேண்டுமானால், அது குறைந்தது 40 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும். ஆஸ்கர் விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளியானதாக இருக்க வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் 7 நாள்களுக்கு ஓடியிருக்க வேண்டும். வெளிநாட்டு மொழித் திரைப்படம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. ஆவணப் படம் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாமல் நியூயார்க்கிலும் ஓடியிருக்க வேண்டும் என்ற கூடுதல் விதி இருக்கிறது. வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான பிரிவில் ஒவ்வொரு நாடும் ஒரேயொரு படத்தை மட்டும் பரிந்துரை செய்ய முடியும். இந்த விருதை சிறப்பு நிபுணர்கள் குழுவினர் அறிவிக்கிறார்கள். எனவே ஆஸ்காருக்காக ஹாலிவுட் பட வாய்ப்புக்கு வழி வகுத்துக் கொண்டார். இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்தார். இந்தியாவே வியந்தது. இதில் பன்னாட்டு நிறுவனங்களின் சதி இருப்பது மறை பொருள். 1994 லில் "ஐஸ்வர்யா ராயி"க்கு உலக அழகிப் பட்டம் வழங்கப்பட்டது, வெறுமனே ஒரு போட்டி நிகழ்வு இல்லை அது. அதற்கு பிறகுதான் இந்தியாவில் அழகுக் கலை குறித்த பெண்களின் அக்கரையும் வீதிக்கு வீதி அழகு நிலையங்களும் அழகு சாதன பொருட்களின் சந்தையும் சூடுபிடிக்கத் துவங்கியது எனலாம். அதே போலத்தான் ஏ. ஆர். ரஹ்மானுக்கான ஆஸ்கர் விருதும். இதை 2011ல் ஹிந்தி இசையமைப்பாளர் இஸ்மாயில் டார்பர், இது "வாங்கப்பட்ட" விருது, ஏ. ஆர். ரஹ்மானின் "ரோஜா"வுக்கோ, "பம்பாயி"க்கோக் கிடைத்திருந்தால் சந்தேகிக்கத் தேவையில்லை. இது ஆஸ்கருக்கான தகுதி இசையே இல்லை என்றார். ஆனால் "வாங்கப்பட்டது" என்பதற்கான விளக்கமளிக்க மறுத்துவிட்டார். இதன் உள் நிகழ்வு என்ன என்று கணிப்பது உலகலாவிய ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் திட்டம்தான்.

      இது இப்படியிருக்க, ஆஸ்கார் விழா மேடையில் எல்லோரும் போற்றும் வகையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்ற வசனத்தோடு நிறுத்திக் கொண்டார். நாமும் ஆஸ்கார் மேடையில் தமிழ் என்று மயிர்க்கூச்செரிந்தோம். அது உலகமே ஒற்றைக் கண் கொண்டு பார்த்த ஒரு நிகழ்வு. அங்கே அவர் இப்போது பேசுவதுபோல தமிழுக்காக, தமிழில் இல்லை, தமிழுக்காக ஆங்கிலத்தில் ஒரு சில வரிகளைப் பேசியிருக்கலாம். அதாவது 45 நொடிகள். அது இலங்கைத் தமிழர்களுக்கான ஓரிரு வார்த்தைகள். ஏனென்றால் "ஸ்லம்டாக் மில்லியனர்"(2008) படம் 2009 பிப்ரவரி மாதம்தான் ஆஸ்கார் அறிவிக்கப்பட்டு விழா நடக்கிறது. அதே காலக் கட்டத்தில்தான் "முள்ளி வாய்க்கால்" இன அழிப்பு 2009 மே மாதம் முடிவுக்கு வருகிறது. போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். இலங்கை இனப் போரின் முழு வடிவமும் உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் முழுமையாகத் தெரியாது. அது ஒரு அற்புதமான சந்தர்ப்பம். மீண்டும் நிகழ முடியாத அறிய வாய்ப்பு. அங்கே, விழா மேடையில் ஏ. ஆர். ரஹ்மான் இலங்கைப் பிரச்சனையை கோடிக்காட்டி, இன அழிப்பை அடையாளங்காட்டி இருக்கலாம். அது சர்வதேச நிலையில் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அவர் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று பிடில் வாசித்துவிட்டார்.

       வறண்டு போன தமிழ் அல்லது இந்திய திரையிசை வெளியில், ஏ. ஆர். ரஹ்மானுக்கான வடநாட்டு ஆதரவும் பாகுபாடும் பார்த்துக் குறைய ஆரம்பிக்கவும், தமிழ், தமிழ் நாடு என்று இப்போது அவருக்கு அக்கரை வந்திருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்புக் குரலாவது அவரின் உண்மையான மொழி உணர்வின் வெளிப்பாடாக இருக்கட்டும்.

      அதே போல மலையாள திரை இசையமைப்பாளரான சேகரின் மகன் திலீப், தனது தந்தையை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார் என்றால், ஆதரவற்ற அந்த மூளை தன்னியல்பாக இப்படித்தான் சிந்திக்கும். அல்லது அந்தத் தலைமுறையின் சாங்கித்யம் அதுதான்.

        இங்கே இளையராஜா தான் இசையமைத்த சிம்பொனியே என்ன ஆனது என்று இன்று வரை சொல்லாமல் இருக்கிறார். அல்லது இது போன்ற விஷயங்கள் பொது வெளிக்கு அப்பால் ரகசியங்களுடையதாக இருந்தாலும் இளையராஜாவும் ஏ. ஆர். ரஹ்மானும் ஜாம்பவான்கள்தான்.

       இப்போது இந்திய திரை இசையில் ஒரு தேக்க நிலை நிலவுகிறது. குறிப்பிட்ட ஒரு ஆளுமை அல்லது Trend Setterக்கான phenomena ஏதும் உருவாகவில்லை. அல்லது இதுதான் அடுத்த ஒரு நிலையோ என்றும் தோன்றுகிறது. ஒரு மையமற்ற நிலை. இந்த நிலை என்பது லட்சிய வாதம் என்பது மறைந்துபோய், Entertaining என்றாகிவிட்டது. அதுவும் உலகத் தகவல் தொடர்பின் சலுகையால் அசல் இசை என்ற ஒன்றுக்கான தேவையே அற்றுப் போய்விட்டது. கற்பனை வற்றிப்போன வெற்று கூச்சலாக இருக்கும் திரையிசை என்பது தன்னுள் தொழில் நுட்பத்தையும் அடக்கிக் கொள்கிறது. இது ஒரு படைப்பாளியை வர்த்தகனாக உற்பத்தியில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

     எனக்கு இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் இசைப்பிடிக்கும். ஆனால் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரைப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

பொருளாதார உலகில் பொருளே பிரதானம்.

(நன்றி : "தமிழணங்கு" சந்தோஷ் நாராயணனுக்கு)