எதோசையாக அலோகாவின் காணொளி ஒன்றைப் பார்த்தேன்.
உலக அமைதிக்கான புத்த பிக்குகளின் நடை பயணத்தில் கொல்கத்தாவின் தெரு நாயொன்று இணைந்து கொண்டது உலகம் முழுவதும் இந்த நடை பயணத்திற்கான கவனத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டு சென்றிருக்கிறது.
அந்தக் காணொளி, அப்படி செல்லும் ஒரு நாள் பயணத்தில், சாலையை ஒட்டி இருக்கும் மைதானத்தில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கும் சில நாய்களைப் பார்த்ததும் அலோகா நின்று விடுகிறது. கண நேரம்தான். நடை பயணக் குழு தொடர்ந்து சென்று கொண்டிருக்க, அலோகா தீர்க்கமான ஒரு முடிவுடன் சிறிய துள்ளலுடன் மீண்டும் குழுவுடன் இணைந்து கொள்கிறது.
புத்த பிக்குகளின் தலைவரான தலாய் லாமா, மக்கள் சந்திப்பில் தன்னை நெருங்கிக் காண வரும் ஒரு சிறுவனை வாழ்த்தியனுப்பாமல் தனது நாக்கை நீட்டி சப்புமாறு சிரித்தார் என்றோ, உற்சாகமான மைதான விளையாட்டின் சந்தோஷம் பற்றியோ, எதற்கும் அது துலா கோலைப் பிடிக்காமல் கீழ்மைகளிலிருந்து மேன்மையான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சாதாரணமானதல்ல. அதே சமயம் அது அன்றாடவொரு நிகழ்வுமல்ல.
அப்படித்தான் சி. மணியுடன் குப்பை மண்டிய சாக்கடை வீச்சம் உள்ள அந்தத் திண்ணையில் அமர்ந்து கொண்டு இதைக் கேட்டேன்.
சேலம் அம்மாபேட்டை வழக்கமாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. தொண்ணூறுகளில் இவ்வளவு இரு சக்கர வாகனங்கள் இல்லை. எல்லோரும் நடைதான்.
அங்கே பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் ஓயாமல் பேசியபடியேதான் கடப்பார்கள். கூர்ந்து கேட்டால் ஒன்றுமே இல்லாத ஒன்றாக இருக்கும். எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறார்கள்?
" அதை முடிவு செய்வதுதான் ஒரு மனிதனின் ' சாரம் ' என்றார்.
இன்று அதை அனைத்து உயிர்களுக்கும் நாம் பொருத்திக் கொள்ளலாம் போல.
ஆனால் விஷயம் இதுவல்ல.
எனக்கு நவீன இலக்கிய பரப்பு விரிந்தது சுபமங்களாவுக்கு பிறகுதான். தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதன் மேல் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அதில்தான் ஜெயமோகனின் ' ஜெகன் மித்யை ' வந்தது.
சமீபத்தில் கோமல் சைவராக இருந்தாலும் வைணவத்தின் மேல் (வைணவ இலக்கியங்களின் மேல்) பெரு விருப்பம் இருந்ததாகவும் ஆனால் அவர் முற்போக்கு எழுத்தாளராக இருந்ததால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனவும் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். எனக்கு பெரிய அதிர்ச்சியாகவும் கோமல் என்னிடமிருந்து விலகி செல்வதாகவும் உணர்ந்தேன்.
அதுவும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு செயலிழந்த பின்பே சுபமங்களா ஆரம்பித்தார், அதன் பிறகு நாடகம் போடுவதை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் சுபமங்களாவுக்கு பிறகு சேலம் நேரு கலையரங்கில் அவரது நாடகம் ஒன்று நடந்தது. அதற்கு நான் போயிருக்கிறேன். அவரிடம் பேசியும் இருக்கிறேன். நல்ல உற்சாகமாகத்தான் இருந்தார். அவரும் ஒரு கதாபாத்திரத்தில் வந்துபோனார்.
அம்மாவும் அப்பாவும் நமக்குப் போதும். அவர்கள் உடலுறவு கொண்டுதான் நம்மை பெற்றார்கள் என்ற தகவல் தேவையில்லாத ஒன்று. அது தெரிந்தாலும் நாம் அதைக் கருதுவதில்லை.
ஆரம்பக் காலங்களில் ஊட்டியில் நடக்கும் ஜெயமோகன் நிகழ்வுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அவர் அதிகம் பேசமாட்டார். அவரது முறை வரும்வரை ஆழ்ந்து நகம் கடித்தபடி இருப்பார். ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான் பேசுவார்.
அப்படி என்றால் ஒருவரின் சாரம் தன்னை எப்படி மாற்றிக் கொள்ளக்கூடும் என்று என்னால் சி. மணியிடம் மீண்டும் கேட்டு தெளிவடைய முடியாது.
ஏனென்றால் இன்று அவரது நினைவு நாள்.
ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நானே தெளிவாகிக் கொண்டது என்னவென்றால்,
எப்போதுமே ஒரு நிகழ்வின் அல்லது ஒரு விஷயத்தின் எதிர்மறை தன்மையே அதை பேசு பொருளாக்கிறது. அலோகா போல.
ஆனால் அதன் ஆரோக்கியமான தேவையை அறிந்து கொள்வதே மெய்யறிவு.
(Heil Mary என்ற பதம் இப்போது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் Project Heil Mary தற்படம்.)

No comments:
Post a Comment