Tuesday, July 7, 2026

Disclaimer மனோநிலை

 Disclaimer மனோநிலை 

++++++++++++++++++++++


                முக்கியமான ஒன்றைச் சொல்ல வரும்போது மிகக் குறைந்த விபரங்கள்தான் இருக்க வேண்டும்.

' A Seperation ' என்றொரு இரானிய திரைப்படம் 2011 ல் வந்தது. மறதி நோயால் பாதிக்கப்பட்ட தன் தந்தையை பிரிய மனமில்லாத அந்த மகன் அவருடனே தங்கிவிடுகிறார். அப்படி இருக்கையில் தந்தையை வெற்றுடம்புடன் குளிக்க வைப்பார். எந்த நினைவும் இல்லாத தனது தந்தையை அப்படி பார்க்கும்போது மனமுடைந்து அழும் அந்தக் காட்சி behind the screen ஆக எடுத்தபோது ஒளிப்பதிவாளர், கேமராவை நகர்த்திவிட்டு ஒருகணம் கண்களைத் துடைத்துக் கொள்வார். அந்தக் குழுவே மன அழுத்தத்திற்கு உள்ளாகும்,  இன்னும் சொல்லப்போனால் மகனாக நடித்தவர் மிகுந்த அழுத்தத்திற்கு சென்றுவிடுவார். குறிப்பாக அப்படி ஒரு காட்சியால் உந்தப்பட்டே, அதன் இயக்குநர் அதற்கான முழு திரைக் கதையையும் வடிவமைத்தாக குறிப்புகள் சொல்கின்றன.

எந்த பின்னணி இசையும் பெரிதாக அந்தக் காட்சியில் இருக்காது.

இந்த படம்தான் ஆஸ்கார் விருது வாங்கிய ஆங்கிலமல்லாத முதல் இரானிய பிற மொழி படம்.

இதேபோல பி. வாசு தனது படமொன்றில் (1992) ஒரு காட்சி வைத்திருப்பார். ஆனால் அந்தக் காட்சி ஒரு பாடலாக, அதனுள் ஒரு சிறு துண்டாகத்தான் இருக்கும்.

முக்கியமாக அந்தப் பாடலை படத்தில் வைப்பதற்கே மறுப்புத் தெரிவித்த கதாநாயகனை மிகவும் சிரமப்பட்டுத்தான் சம்மதிக்க வைத்திருந்தனர்.

ஆனால் அந்தப் பாடல் ஓர் அடையாளமாக மாறியது மட்டுமில்லாமல், 90 களில் நான் பணி புரிந்த நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு என்னிடம் பேசியது இன்னும் நினைவிலிருக்கிறது. அப்போது அவருக்கு 20 வயதிற்குள்தான் இருக்கும். அவர் தீவிர இரசிகரானதும் அந்தப் படத்திற்குப் பிறகுதான்.

ஆனால் அதற்குப் பிறகு 1994ல் ஒரு படம் வருகிறது. அது தொடர்ந்து பெண் குழந்தைகளாகப் பிறக்கும் சிசுக்களுக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் ஒரு முக்கியமான விஷயத்தை பேசுவதாக இருந்தது.

அதில் அப்படி கொல்லச் சொல்லும் பாத்திரத்தில் இதுபோன்ற இழி செயல்களுக்கு எதிரான கருத்தியல் கொண்ட முற்போக்கு சிந்தனையாளரான பெரியார்தாசன் நடித்திருப்பார்.

அப்படி கொல்லும் வாய்ப்பிலிருந்து தப்பிய அவரது பெண்ணும், பெண்ணும் பக்கவாதத்தால் முடங்கிக் கிடக்கும் அவருக்கு பணிவிடைகள் செய்யும் விதமாக தென்னந்தட்டி தடுப்புக்குள் குளிக்க வைப்பார்கள். (என்னுடைய நினைவு அப்படித்தான் இருக்கிறது) அந்தத் தட்டிகளை விலக்கி வேடிக்கைப் பார்க்கும் பெண் குழந்தைகளை விரட்டுவார்கள். அப்போது அந்தக் குழந்தைகள் தங்களின் எதிர் வினையாக ஒன்றைச் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓடுவார்கள்.

அது, ' அய்ய, அம்மணக்குண்டி '

இது படத்தில் மிகச் சாதாரணமாக நடந்துவிடும் ஒரு காட்சியாக பார்வையாளன் கடந்துவிடுவான். அல்லது களுக் என்று ஒரு சிரிப்புகூட தோன்றிவிடக்கூடும். ஆனால் இது அந்த ஈரானிய படத்தைவிட பல மடங்கு அழுத்தம் வாய்ந்ததாகவும் நினைத்து பார்க்க முடியாத பரிமாணங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

ஈரானிய படத்தில் அது மனித வாழ்வின் அபத்தத்தையும் மனிதத் தன்மையைக் குன்ற செய்யும் மனித நாகரிக வளர்ச்சியின் தேவைகளையும் அதன் நீட்சியாக உண்டாகும் பொறுப்பு துறப்பு மனோபாவத்தின் நியாயங்களையும் அதற்கு எதிரான தீவிர மனித நேய செயல்பாடுகளைக் கொண்டிருப்பதன் இழப்புகளையும் பேசுகிறது. 

தவிரவும் அப்படி இருக்கும் தன்மையினால் அவர்கள் தங்களையே சிதைத்துக் கொண்டாக வேண்டியவர்களாகவும் தனது மன சாட்சி குறித்த அதீத பிரக்ஞை உள்ளவர்களாகவும் மேலும் இந்த சமூகமும் இயற்கையும் ' தேவை ' கருதும் தன்மையை சகிக்காத, அதே சமயம் இந்த இயற்கைக்கே எதிராகக் களத்தில் இறங்கி, தங்களை மாய்த்துக் கொள்வதன் மூலம் அத்தகைய பொறுப்பு துறப்பின் கொடூரத்தை மையப்படுத்தி சமூகத்தைக் கவனத் திருப்பாலுக்கு உள்ளாகின்றனர்.

ஆனால்

இந்தப் பெண்கள், தங்கள் இனத்திற்கே துரோகம் செய்த ஓர் ஆணைக் குளிக்க வைக்கின்றனர். அவர்கள் அந்த ஆணையும் தங்கள் குழந்தையாகத்தான் பார்க்கின்றனர். அதனால்தான் அந்த அம்மணம். எந்த பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்றாரோ அவரைக் கொல்லாமல் குளிக்க வைப்பதை வேடிக்கை பார்ப்பது அப்படி தப்பிவிட்ட அல்லது அந்த நிலைமாறிய ஒரு காலகட்டத்தின் குறியீடுதான் வேடிக்கை பார்க்கும் அத்தனைக் குழந்தைகளும்.

கள்ளிப்பாலிலிருந்து தப்பிக்கும் குழந்தை மருத்துவராவது ஓர் அசாத்திய கணிப்பு.

அதுவும் குளியல் என்பது ஒரு சரணாகதி. குளிக்க வைப்பார் முன்னால் அமர்ந்திருக்கும் குளிப்பவர் 

பௌதிக ரீதியாகவும் தான் கொண்ட கொள்கையளவிலும் தோற்றுப்போனவர். அல்லது அந்த நிலையின் ஒரு படிநிலை. அதுவும் எதிர் பாலினம் சார்ந்து அது இன்னும் வலுவடைகிறது.

இயக்குநர், இந்த அம்மணத்தை நேரடியாகக் காட்டியிருந்தால் முகச்சுழிப்புதான் சாத்தியம். ஆனால் அந்தத் தட்டிகளுக்குப் பின்னால் ஏதுமில்லாமலும் இருந்திருக்கலாம். எட்டிப்பார்க்கும் குழந்தைகள் மட்டுமே அந்த அபூர்வ தருணத்தை நமக்குக் கடத்துகின்றன. இதுவே கனவுத் தொழிற்சாலையின் தீரம். தீரம் மிக்கவனே உண்மையான படைப்பாளி.

அல்லது இது ஓர் இட்டுக்கட்டல் என்ற நிலையில்கூட இதை வாசிக்கும் எதிர் மனநிலையாளர் நினைக்கக்கூடும்.

ஆனால், எப்படி ஒரு கிராமத்துச் சிறுவன், மழை பெய்த காலையில் சாலையைக் கடந்த ஒரு பேருந்தின் டீசல் சொட்டில் ஒளிரும் வண்ணங்களை, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறாக, ஒளி என்பது பல நிறங்களின் கூட்டு என்பதையும், அதுவே கிழக்கும் மேற்கும் சிவந்து கிடப்பதையும் அண்ணாந்த வானம் நீலமாயிருப்பதையும் தொடர்புபடுத்திக் கொண்டானோ, அவனே இதை எழுதவும் வாசிக்கவும் இயன்றவனகிறான்.

உங்களுக்கு இப்போது அந்தப் பாடலில் வரும் அபிஷேகம் எத்தகைய தட்டையான, சம்பிரதாயமான ஒன்று என்றும் அதற்கும் தீவிர கலைச் செயல்பாடுக்குமான தொடர்பும் புரியும்.

ஒரு படைப்பில் நாம் எவ்வளவு ஏமாந்து போகிறோம் என்பதே அதன் தீவிர கலைத் தன்மையை நிர்ணயிக்கிறது. 

இந்த பொறுப்புத் துறப்பு என்பதைப் பேச சில சமயங்களில் ஒரு மனநிலை வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது தகுதி வேண்டும் என்றும் சொல்லலாம். 

' கடைசியல எல்லோரும் விட்டுட்டு போய்ட்டீங்க இல்ல '

இந்த ஆதங்கத்திற்கு கேவலமான எதிர்வினைகள் சமூக ஊடகங்கள் எங்கும் இருந்தது. ஆனால் இது இந்த ஊடகக்காரர்களால் வந்தது என்று ஒரு தரப்பும் இருக்கத்தான் செய்தது.

இல்லை.

இந்த பொறுப்பு துறப்பு மனோபாவத்தின் மேல் விழுந்த சாட்டையடிதான் இது.  அதனால்தான் சுடுகிறது.

ஏனென்றால் எனக்கு மூன்று சகோதரிகள். ஆனால் ஏழு வருடங்களாக A Seperation படத்தைப்போல என் அம்மாவை பார்த்துக்கொண்டேன். அதுவும் குனிந்திருக்கும் அந்த பழுத்த முதுகை தண்ணீர்விட்டு கழுவும்போது அடைந்த விமல் யாருக்கும் தெரியாது. எதிர் பாலினத்தை எதிர் கொள்வதில் இருக்கும் சிக்கல் சாதாரணமானதில்லை. 

அந்தப் படத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னால் ஓர் உரையாடல் நடக்கும்.

தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தை முன்னிட்டு தனது தந்தையை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல மறுக்கும் தான் கணவனிடம் விவகாரத்து கேட்கும் மனைவி,

' மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் தந்தையை விட்டுவிட்டு இவர் வர மறுக்கிறார். அதுவும் இவர் யார் என்றே அவருக்குத் தெரியவில்லை ' என்பார்.

' ஆனால் எனக்குத் தெரிகிறதே? அவர் என் தந்தை ' என்பார்.

அதேபோல, மனோஜ் இருந்திருந்தால்? என்ற ஒரு தரப்பும் இருக்கிறது. இது மீண்டும் கள்ளிப்பால் விவகாரத்தில்தான் முடியும். 

இங்கே பாலினம் சார்ந்த ஒரு தப்பித்தாலும் நடக்கிறது. இதற்கான சமூக மாற்றம் மிக முக்கியம். மனித வாழ்வின் ஒவ்வொரு இருத்தலுக்கான தார்மீக உணர்வை தக்கவைப்பதே உண்மையான நாகரிக சமுதாயத்திற்கான அடையாளமும் கடமையும்.

நாம் ' எஸ்தர் ' கதையை இங்கே குழப்பிக் கொள்ளக்கூடாது. அதில் இருக்கும் கொடூரம் எது சார்ந்தது என்பதன் புரிதல் வேண்டும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. லீனாவின் ' வெள்ளை வேன் அறிக்கை ' ஆவணப்பட திரையிடலுக்கு சென்றபோதுதான் அவரை மிக நெருக்கமாகப் பார்த்தேன். சட்டென திரும்பிப் பார்க்கையில் எனக்கு நேர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஏனோ தெரியவில்லை, சட்டென சாய்ந்தார்போல் உட்கார்ந்து எனது பார்வையைத் தவிர்த்தார். 

ஒருமுறை வே. பாபு த மு எ க ச மாநாட்டிற்கு சென்றிருந்தபோது, மண்டபத்தின் மாநாட்டு திடலில் மிக நள்ளிரவில் எண்ணிரந்த நாற்காலிகள் நடுவில் தன்னந்தனியாக பாலுமகேந்திரா அமர்ந்திருந்திருக்கிறார். கழிவறை சென்ற பாபு, திடுக்கிட்டு, அங்கேயே நின்றுவிட்டான்.

மணிக்கணக்காக அவன் அந்த மறைவிலிருந்து அவரை பார்த்தபடி இருந்திருக்கிறான். 

இந்தப் பகிர்தலின்போது, யாரோ ஒரு நண்பர், ' பேசியிருக்கலமல்லவா? ' என்று கேட்டார்.

பதிலேதும் சொல்லாத பாபு, என்னைப் பார்த்தான். 

ஏனென்றே தெரியவில்லை, அவரின் மறைவு மிகுந்த அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது. 

இன்று கணினி உலகம் செயற்கை நுண்ணுணர்வு நிலையை அடைந்திருக்கும் நிலையில், எனக்கு C கணினி மொழியை உருவாக்கிய டென்னி ரிச்சி நினைவுக்கு வருகிறார். அவர் தனது அறையில் செத்து கிடந்ததும்,  குர்ஜிப்பை தனது புத்தகத்தின் மூலம் உலகறிய செய்த கணித அறிஞர் உஸ்பெஸ்கி தொடர்ந்து குடித்து, தனது அறையில் செத்து கிடந்ததும் நமக்கு ஏதோ சொல்கிறது.

மாபெரும் அறிஞர்களும் சிந்தனையாளர்களும் அப்பழுக்கற்வர்கள் இல்லைதான்.

அத்தகைய அழுக்கிலிருந்தே அவர்களின் படைப்பும் உருவாகிறது.

ஆனால் அவர்களின் படைப்புகள் எப்போதும் இந்த மனித குலத்திற்கானது அல்லது இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கானதே.

Sunday, May 31, 2026

அலோகாவும் Project Heil Mary-யும்

 

                


       எதோசையாக அலோகாவின் காணொளி ஒன்றைப் பார்த்தேன். 

உலக அமைதிக்கான புத்த பிக்குகளின் நடை பயணத்தில் கொல்கத்தாவின் தெரு நாயொன்று இணைந்து கொண்டது உலகம் முழுவதும் இந்த நடை பயணத்திற்கான கவனத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டு சென்றிருக்கிறது.

அந்தக் காணொளி, அப்படி செல்லும் ஒரு நாள் பயணத்தில், சாலையை ஒட்டி இருக்கும் மைதானத்தில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கும் சில நாய்களைப் பார்த்ததும் அலோகா நின்று விடுகிறது. கண நேரம்தான். நடை பயணக் குழு தொடர்ந்து சென்று கொண்டிருக்க, அலோகா தீர்க்கமான ஒரு முடிவுடன் சிறிய துள்ளலுடன் மீண்டும் குழுவுடன் இணைந்து கொள்கிறது.

புத்த பிக்குகளின் தலைவரான தலாய் லாமா, மக்கள் சந்திப்பில் தன்னை நெருங்கிக் காண வரும் ஒரு சிறுவனை வாழ்த்தியனுப்பாமல் தனது நாக்கை நீட்டி சப்புமாறு சிரித்தார் என்றோ, உற்சாகமான மைதான விளையாட்டின் சந்தோஷம் பற்றியோ, எதற்கும் அது துலா கோலைப் பிடிக்காமல் கீழ்மைகளிலிருந்து மேன்மையான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சாதாரணமானதல்ல. அதே சமயம் அது அன்றாடவொரு நிகழ்வுமல்ல. 

அப்படித்தான் சி. மணியுடன் குப்பை மண்டிய சாக்கடை வீச்சம் உள்ள அந்தத் திண்ணையில் அமர்ந்து கொண்டு இதைக் கேட்டேன்.

சேலம் அம்மாபேட்டை வழக்கமாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. தொண்ணூறுகளில் இவ்வளவு இரு சக்கர வாகனங்கள் இல்லை. எல்லோரும் நடைதான்.

அங்கே பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் ஓயாமல் பேசியபடியேதான் கடப்பார்கள். கூர்ந்து கேட்டால் ஒன்றுமே இல்லாத ஒன்றாக இருக்கும். எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறார்கள்?

" அதை முடிவு செய்வதுதான் ஒரு மனிதனின் ' சாரம் ' என்றார். 

இன்று அதை அனைத்து உயிர்களுக்கும் நாம் பொருத்திக் கொள்ளலாம் போல.

ஆனால் விஷயம் இதுவல்ல.

எனக்கு நவீன இலக்கிய பரப்பு விரிந்தது சுபமங்களாவுக்கு பிறகுதான். தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதன் மேல் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அதில்தான் ஜெயமோகனின் ' ஜெகன் மித்யை ' வந்தது.

சமீபத்தில் கோமல் சைவராக இருந்தாலும் வைணவத்தின் மேல் (வைணவ இலக்கியங்களின் மேல்) பெரு விருப்பம் இருந்ததாகவும் ஆனால் அவர் முற்போக்கு எழுத்தாளராக இருந்ததால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனவும் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். எனக்கு பெரிய அதிர்ச்சியாகவும் கோமல் என்னிடமிருந்து விலகி செல்வதாகவும் உணர்ந்தேன். 

அதுவும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு செயலிழந்த பின்பே சுபமங்களா ஆரம்பித்தார், அதன் பிறகு நாடகம் போடுவதை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் சுபமங்களாவுக்கு பிறகு சேலம் நேரு கலையரங்கில் அவரது நாடகம் ஒன்று நடந்தது. அதற்கு நான் போயிருக்கிறேன். அவரிடம் பேசியும் இருக்கிறேன். நல்ல உற்சாகமாகத்தான் இருந்தார். அவரும் ஒரு கதாபாத்திரத்தில் வந்துபோனார்.

அம்மாவும் அப்பாவும் நமக்குப் போதும். அவர்கள் உடலுறவு கொண்டுதான் நம்மை பெற்றார்கள் என்ற தகவல் தேவையில்லாத ஒன்று. அது தெரிந்தாலும் நாம் அதைக் கருதுவதில்லை.

ஆரம்பக் காலங்களில் ஊட்டியில் நடக்கும் ஜெயமோகன் நிகழ்வுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அவர் அதிகம் பேசமாட்டார். அவரது முறை வரும்வரை ஆழ்ந்து நகம் கடித்தபடி இருப்பார். ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான் பேசுவார்.

அப்படி என்றால் ஒருவரின் சாரம் தன்னை எப்படி மாற்றிக் கொள்ளக்கூடும் என்று என்னால் சி. மணியிடம் மீண்டும் கேட்டு தெளிவடைய முடியாது. 

ஏனென்றால் இன்று அவரது நினைவு நாள். 

ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நானே தெளிவாகிக் கொண்டது என்னவென்றால், 

எப்போதுமே ஒரு நிகழ்வின் அல்லது ஒரு விஷயத்தின் எதிர்மறை தன்மையே அதை பேசு பொருளாக்கிறது. அலோகா போல. 

ஆனால் அதன் ஆரோக்கியமான தேவையை அறிந்து கொள்வதே மெய்யறிவு.

(Heil Mary என்ற பதம் இப்போது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் Project Heil Mary தற்படம்.)

Thursday, January 22, 2026

புத்தம் புது ஆண்டு...

 


காலம்தோரும் ஓர் இரட்டை நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்மாவும் நானும் எம் ஜி ஆர் சிவாஜி என்று மல்லுக்கு நின்றிருந்தபோது நானும் துரையும் ரஜினி கமல் என்றும் மோதிக் கொண்டோம்.

அப்போது கல்லூரிக் காலம்.

1988, கமலின் 'சத்யா' வந்திருந்தது.

அதே வருடத்தில் ரஜினியின் குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கொடி பறக்குது ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோன் என்று அவரது ' ஸ்டைலை' நிலைநாட்டி இருந்தனர்.

விவாதமே இருவரின் ஸ்டைலின் ஒப்பீட்டிலிருந்துதான் ஆரம்பித்தது.

ரஜினியின் முன்னால் தனது தோற்றுப்போன பரிதாபமான பாவனைகளை கமல் தனது  ரசிகர்களுக்கு காட்டி தனது ஸ்டைல் என்று நம்ப வைப்பதாக கேலி செய்ய ஆரம்பித்தான்.

குறிப்பாக சத்யாவில், நயவஞ்சக அரசியல்வாதி கிட்டி, கமலை ஏமாற்றி தனது அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்திக் கொள்வதை கமல் தெரிந்து கொண்டு போராடும்போது அவரை அடித்து துவைத்து அரை உயிராக முள்வேலியில் தூக்கி வீசிவிடுகின்றனர், கிட்டி ஆட்கள்.

இந்த படம், 'அர்ஜுன்' என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும் அதை நாங்கள் பார்க்கவில்லை. அதிலும் இப்படியெல்லாம் இருக்குமா என்பதும் எங்களுக்கு அப்போது தெரியாது.

குடும்பத்தால் காப்பாற்றப்பட்டு மீண்டும் அந்த அரசியல்வாதிகளை பழிவாங்க புறப்படும் கமல், கண்ணாடி முன்னால் தனது மொட்டையடித்து கொஞ்சமாக வளர்ந்த தாடி மீசையோடு கம்பீரமாக ' சட்டை ' போடுவதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதிலும் சிறப்பு, அந்தக் காப்பை தனது கையில் போட்டுக் கொள்வது.

இதுதான் இங்கே தோற்றுப்போன ஸ்டைல் என்று துரை நக்கலடித்தான்.

மற்றொரு விஷயம், அப்போதுதான் நாயகனுக்காக மொட்டை அடித்திருப்பார் கமல். அதன் அடுத்தக் கட்டத்தை தனது அடுத்த படத்தில் பயன்படுத்தியிருப்பது எனக்கு ஒவ்வொரு தொடர்ச்சியையும் பயன்பாடுள்ளதாக்கும் விஷயம் பெரிய திறப்பாக இருந்தது.

குறிப்பாக சட்டை என்பதே மேற்கத்திய வரவுதான். அதுவும் உயர்குடிக்கான ஒரு அம்சம்.

அதில் பட்டன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுவிதமாக அமைத்திருப்பார்கள். ஆண்கள் அவர்களாகவே சட்டை போட இடப்பக்கமாகவும் பெண்கள் அவர்களது தாதிகள் போடுவதால் வலப்பக்கமாகவும் அமைத்திருப்பார்கள்.

அதுவும் சட்டைக்கான பட்டனை ஒருவர் தனக்குத்தானே மேலிருந்து போடுவது எப்போதும் நமது பார்வைக் கோணம் தப்பி, தவறான பட்டனில் தொடங்கி ஏறுமாராக சட்டை நிற்கும்.

அதனால் கீழிருந்து போடுவது இந்தத் தவறு நடக்காமல் தடுக்கும்.

கமலும் இந்தக் காட்சியில் கீழிருந்தே போடுவதாகக் காட்சி இருக்கும்.

அதாவது அவர் மூலமாக நடந்த அந்த தவறை சரி செய்வதாக, அதற்காக புறப்படுவதாகவும் அந்த நுணுக்கத்தை ஒரு மாஸ் ஹீரோவுக்கான காட்சியாக ரஜினி போன்ற ‌‌ஸ்டைலிஸ் ரசிகர்களின் மனநிலைக்கு மாற்றியிருந்தார்கள்.

இதையே துரை கிண்டல் செய்தான்.

மூல இழையின் சாரத்தை ஒரு படம் கொண்டிருக்கும்போது அது எவ்வாறு ஆழ்ந்த மனத்தாக்கத்தை பார்வையாளன் அறியாமலே கடத்திவிடக்கூடும் என்று விளக்கினேன்.

ஆனால் அவன் சிரித்தான்.

எனக்குள்ளாகவே நானும் சிரித்துக் கொண்டேன்.

ஸ்டைலாக இருந்தாலும் அது எவ்வாறு இருக்க வேண்டுமென்ற தெளிவு எனக்கு அப்போது உண்டானது.

அது திரைப்படமாக இருந்தாலும் கவிதையாக, கதையாக எதுவானாலும் ஒரு பொதிக்குள் அடைக்கும் சகலமும் அந்தப் பொதியின்  கட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் இப்படி யோசிக்க வேண்டுமா என்று அப்போது எனக்குத் தெரியாவிட்டாலும் வீம்புக்காகவேணும் இது அப்படி நடந்துவிட்டது என்றே இப்போது தோன்றுகிறது.

இங்கே கமலை உயர்த்துவது எனது நோக்கமல்ல. ஆனால் உயர்ந்த ஒன்றின் அடையாளம் காணுவதே, இது.

இந்தப் புத்தாண்டிலாவது நமது சட்டையை ஒழுங்காக போட்டுக் கொள்வோம். அரசியலும் அரசியலாக்கப்பட்ட அனைத்துமே இரண்டாவது வாய்பிற்காகக் காத்திருக்கின்றன.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2026

Wednesday, January 21, 2026

THE COURAGE TO BE DISLIKED

 

THE COURAGE TO BE DISLIKED 

சீனிவாச ராமானுஜத்தின் பேட்டி என்று சொல்ல முடியாத ஓர் உரை அல்லது கருத்து பகிர்வு காணொளியை தன்னறம் வெளியிட்டு இருக்கிறது.

அது மிக முக்கியமான ஒன்று. 

PENOMIENOLOGY என்ற தத்துவத்தின் ALGORITHM எப்படி புதிய சிந்தனை வெளியையும் மனிதனுடைய தர்க்கத்தின் பலஹீனத்தையும் போகிற போக்கில் நொறுக்கித் தள்ளுவதாக இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மிக எளிமையாக இதை நமக்குச் சொல்லிவிடுகிறார். காந்தியை புரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் அம்பேத்கரின் வழியாகத்தான் அது நிகழும் என்கிறார். அதேபோல அம்பேத்கரையும் காந்தியின் வழியாகத்தான் புரிந்து கொள்ள முடியும். எதிரிடைகளின் செயல்பாடுகள்தான் உண்மையான புரிதலையும் சாந்தியையும் கொடுக்கக்கூடும். 

இயற்பியலில் துகள் கொள்கையும் அலைக் கொள்கையும் வேறுவேறு அல்ல என்பதே குவாண்டம் கொள்கை. இரண்டும்தான் நிகழ்கிறது என்ற புரிதலுக்கு வரும்போதுதான் இயற்கையின் மர்மங்கள் என்று சொல்லப்படுபவை அதன் புதிர் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட(!) இயங்கு நிலைகளை கையாளமுடிகிறது. அந்தக் காணொளியின் இறுதி என்பது அசாத்தியமானது. ஏனென்றால் அது அந்த காணொளிக்கே முரணானதுதான். 

ஆனால் இங்கே எதிரிடைகள், இணையானவை என்று எல்லாவற்றையும் இல்லாமலாக்குவதிலேயே ஒன்று தனது நிலையை நிரந்தரம் ஆக்கிக் கொள்ள முயலுகிறது.

நிற்க.

அப்போதெல்லாம் எனக்குக் கோவில் சேலம் சங்கீத் தியேட்டர்தான்.

எண்பது , தொண்ணூறுகளில் ஆங்கில படங்களை அங்கேதான் பார்த்தேன். குறிப்பாக இடைவேளையில் வருகிற படங்களுக்கான முன்னோட்டம் போடுவார்கள். அப்படி பார்த்த ஒன்றுதான் 1992ல் 'டிராகுலா'. வழக்கமான ஒன்றாக அது இல்லை.

அதில் டிராகுலா ஒரு சிறிய கத்தியை நாக்கருகே வைத்துக்கொண்டு ஒரு இடுங்கிய சிரிப்பு சிரிக்கும். அது என்னை விசித்திர மனநிலைக்குக் கொண்டு சென்றது என்றாலும் எண்பதுகளிலேயே மைக்கேல் ஜாக்சன் தனது Thriller பாடலின் இறுதியில் வெடித்த சிரிப்பொன்றை வைத்திருப்பார். இதன் பாதிப்பிலேயே Dracula வில் அந்தச் சிரிப்பும் உருவாகியிருக்கலாம்.

ஆனால் இரண்டும் ஒன்றல்ல. 

Thriller சிரிப்பு நிறவெறிக்கும் அதன் மூலம் அடையும் Mortality - க்குமானது. Dracula சிரிப்பு Mortality - க்கும் வஞ்சகத்திற்கும் ஏன், அதன் குற்றவுணர்வுக்குமான ஒரு அழுத்தமான சிரிப்பாக்கக்கூட சொல்லலாம்.

இங்கே வேறு விஷயத்திற்கு வருவோம்.

Missed Movies என்ற காணொளி வலைத்தளம் ஒரு வருடத்திற்கு முன்பே சீனிவாச ராமானுஜத்தின் இரண்டு பேட்டிகளைப் போட்டிருக்கிறது. அது மிகக் கவனமாக கேள்வி கேட்கப்பட்டு மிக கவனமாக நெறிப்படுத்தபட்டிருந்தது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசியல், அறிவியியல், கலை இலக்கியம், தத்துவம் என்று சகலத்தையும் அதன் எதிரிடைகளைக் கொண்டு புதிய திறப்பைக் காட்டியிருக்கிறது.

இந்த பேட்டியினிடையே ஒருமுறை சீனிவாச ராமானுஜம் சிரிக்கிறார்.

ஆனால் தன்னறம் காணொளியில் இடையிடையே அடிக்கடி தேவையில்லாத ஒன்றாக அல்லது எடிட் செய்திருக்க வேண்டிய ஒன்றாக அந்தச் சிரிப்பு நமக்கு தோன்றினாலும் இறுதியாக அவர் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, மேற்சொன்ன இரண்டு சிரிப்புகளைப்போல அந்தக் காணொளி முடிந்துபோகிறது. அதேபோல மிக அதிக அழுத்தத்தையும் அது அடைந்துவிடுகிறது. 

இந்த இடம்தான் ஏன் தன்னறம் அந்த சிரிப்புகளை காணொளி முழுக்க அனுமதித்தனர் என்பதற்கான தீவிர எண்ணம் புரிகிறது. 

மேலும் மேற்சொன்ன இரண்டு சிரிப்புகளைப்போல இல்லாமல் இது குழந்தையின் சிரிப்பைப்போல மிக அதிக திறம் வாய்ந்ததாக, யாராலும் புறந்தள்ள முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. 

நாமும் சிரித்தே ஆகவேண்டும். 

அது 'குணா' வில் குண்டடிப்பட்டு கடைசியில் குணாவின் மடியில் உயிர்விடும் 'அபிராமி' யின் ஒருகண சிரிப்பாகத்தான் இருக்கக்கூடும்.

அடுத்து, 

நேற்று 2026 சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டிற்கு ஒருவரும் வராததால்  

'தழல்' கிருஷ்ணமூர்த்தி (யாவரும் இணைய இதழாசிரியர்) மிகுந்த மனவேதனையுடன் தனது முகநூல் பக்கத்தில் அதைப் பகிர்ந்திருந்தார்.

ஓரளவுக்கேனும் மேற்சொன்ன சீனிவாச ராமானுஜத்தின் பேட்டியில் இதற்கான மன வலு நம்மெல்லொருக்கும் கிடைக்கக்கூடும்.

இது நம்மை வேறுவொரு இடத்திற்குக் கூட்டிச் சொல்வதை தவிர்க்கவும் முடிவதில்லை.

இப்போதெல்லாம் காணொளிகளில் Podcast என்பது மிகுந்துவிட்டது. குறிப்பாக தன்னம்பிக்கை சார்ந்தவைகளில் 'கிருஷ்ணா' வின் Karkakasadara காணொளிகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

அதில் ஒன்றுதான், 'The Courage to be Disliked' பற்றிய Book summary.

ஜப்பானிய அட்லேரியன் தத்துவ எழுத்தாளரான Fumitake Koga ன் பிரபல நூல் இது. இதைப்பற்றி ஓரிரு வரிகளில் சொல்ல வேண்டுமானால், 

1. பிராய்ட் - ஒரு மனிதனின் கடந்த காலமே அவனை வழிநடத்துகிறது.

2.  யூங் - நமது ஆழ்மனமே எல்லாமுமாக இருக்கிறது.

3.  அட்லர் - நீயே தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருக்கிறாய்.

ஆனால் இந்த புத்தக அறிமுகத்தில் ஏதோ ஒரு மூலையில் மட்டுமே இந்த, 'விரும்பப்படாதிருக்க கொள்ளும் தைரியம்' இருக்கிறது. 

ஆனால் jonathan Haidt ன் ' Anxious Generation' புத்தக அறிமுகம் மிக முக்கியமானதாக இருக்கிறது. 

ஒரு காணொளியில் கிருஷ்ணாவே சொல்வதைப்போல ஒரு கட்டத்தில் அவர் தேடிப்போடும் புத்தகங்கள் அதிக விருப்பங்களையும் வெகுசன தீனியாகவும் இல்லாமல் ஆனால் மிக முக்கியமான ஒன்றை பேசுவதாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வந்ததே அவர் காணொளி போடுவதற்காக படித்த நூல்கள்தான் என்றால் அது எவ்வளவு மேன்மையானது? இந்த தைரியத்தைப்போல?

நண்பர்களே, சிரிப்பு என்ற ஒன்றை கொண்டிருக்கும் ஒரே இனம், நாம்தான். ஆனால் ஒரு சிரிப்பு சந்தோஷத்தை மட்டுமா குறிப்பிடுகிறது?

இந்த பொங்கல் நன்னாளில் நமது உழவுக்கு துணையாயிருக்கும் சூரியனும் மாடுகளும் இந்தப் பண்டிகையை எதிர்ப்பார்த்தா இருக்கின்றன?

இல்லை. நாம்தான். 

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.


( இணைப்பு சுட்டிகள்)

1. https://youtu.be/MINp1XjLqB8?si=ruXmx5e3gS-MW-ek

2. https://youtu.be/R2jMZbonDWQ?si=wT50z9_yQPQQ2b3b

3. https://youtu.be/4OXXaljtRlY?si=qwvq06U-9O7FOBdm

4. https://youtu.be/KbWHs80-FXI?si=6r6LPG-OP8rehaIy

Saturday, October 4, 2025

சி. மணியும் ஜேன் குடாலும்

 


EVERY INDIVIDUAL MATTERS.

EVERY INDIVIDUAL HAS A ROLE TO PLAY. EVERY INDIVIDUAL MAKES A DIFFERENCE.

 - Jane Goodall 


             மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் என்ற எதுவுமே அண்ட முடியாத, ஜேன் குடாலுடைய இந்த மூன்று வரிகள்.

இந்த முழு விஷயத்திற்குமானது அவருடைய நெடிய வாழ்வு. தமிழைப் பொருத்தவரை இந்தத் திண்மையை வேறு எப்படியும் சொல்லிவிட முடியாது. அது இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்வதாக முடிந்துவிடும். 

மேம்போக்காக பார்த்தால் இது மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ மட்டுமே பொருந்துவதாகக்கூட தோன்றலாம். ஆனால் இது அப்படியில்லை. அல்லது சமாதானமாக ஒரு முடிவுக்குக்கூட வரலாம். இதைத் தொடர்ந்து சில நினைவுகள் எழுகின்றன.

சி. மணியுடன் தொடர்ந்த சந்திப்பில் இருந்தபோது அவர் இந்த பிரபஞ்சத்திலேயே தனியான தன்மையுடன் இருக்கும் ஓர் ஆளுமை என்றே நினைத்திருந்தேன். வேறு எங்கும் அப்படி ஒரு தன்மையை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. 

எல்லா மனிதர்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும்கூட சொல்லலாம் ஒரு தனிப்பட்ட நடத்தையைக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். நடத்தை என்பதைவிட அதை ஒரு தன்மை என்று புரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக இதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும் தன்மை. மற்றது சமூகத்தோடும் இந்த இயற்கையோடும் தொடர்பு கொள்ளும் போக்கு.

வழக்கமாக நாம் எல்லோருமே ஏதோ ஒருவகையில் சில அர்த்தமற்ற தொடர் செய்கைகளை நமது சிந்தனை இடைநிறுத்தங்களில் நம்மையும் அறியாமல் செய்வோம். 

தலை சொறிவது, மூக்கைத் துடைத்துக் கொள்வது, முடியைக் கோதுவது, கால்களை ஆட்டுவது அல்லது வெறுமனே விரல்களைக் கொண்டு எதையாவது செய்வது என்று எத்தகைய நிலையிலும் ஏதாவது ஒன்று வெளிப்பட்டுவிடும். எங்கள் ஜீனோகூட உணவு தயார் செய்யும் அந்தச் சிறிய காத்திருப்புக்குள், பல கொட்டாவிகளையோ அல்லது முன் கால்களைத் தளர்த்தவோ செய்வான்.

ஒன்று சிந்தனைத் தீவிரம் அல்லது சிந்தனையற்ற ஒரு வெற்று அல்லது குறிப்பிட்ட ஒரு நிலைமையை கைக்கொள்ள இயலாதத் தன்மையால் இது நிகழக்கூடும்.

இது ஒரு விஷயத்தைச் சொல்லுகிறது.

ஒரு நிலையில், மூளையின் உடல் கட்டுப்பாடு சார்ந்த, அதாவது தேவையான செய்கைகளை மட்டும் செய்து ஆற்றலை வீணடிக்காத இயற்கையின் அடிப்படை சறுக்கிவிடுகிறது. இதுவும் ஏதோ காரணமாகக்கூட இருக்கலாம். ஆனால் மூளையின் பகுத்தறிவிற்கு அப்பால் தன்னியல்பாக உடல் செயல்படும் ஒரு நிலையென்பது ஒரு கட்டத்தில் உடலே மூளையைக் கட்டுப்படுத்த அந்த மூளையே சம்மதித்துவிடுகிறது.

இதை டோப்பமைன் விளைவாகவும் வரையறுக்கலாம். ஆனால் அதையும் தாண்டி நாம் ஒரு புரிதலுக்கு வரலாம். 

கோயில் திருவிழாக்களில், பெருந்திரளான கூட்டங்களில், ஏன் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடிவிடும்போது அங்கே மிக அதிகமாக பகுத்தறிவு மழுங்கிப்போகிறது. அதைவிட நாம்மைப் போன்ற பரிணாமத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு மனத்தின் நடைமுறை செயல்களைக் கணக்கிலெடுக்கும் பிரக்ஞை தவறிவிடுகிறது. இது சில பரிணாமத்தின் ஆதிகால பேராபத்தை எதிர் கொள்ளும் ஒரு கூட்ட மனோபாவ செயல்பாடகவும் இருக்கலாம். அதன் எச்சம் இன்று அந்த பரிணாமத்தின் ஆதார செயல்பாட்டு கருத்தாக்கத்திற்கே கேடாக முடிகிறது.

சரி. சி. மணியின் இந்த நிலையின் தன்மையென்ன என்று யோசித்தால், அவர் எதற்கும் பெரிதாக வினைபுரிந்ததில்லை. இது ஒரு மந்த புத்தியாக இருக்குமோ என்று யோசித்தால், அதுதான் இல்லை.

அவர் தனது முழு கட்டுப்பாட்டில், முழு முதலாக பிரக்ஞையுடன் இருந்தார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதுவே அவரை எந்த சார்பும் இல்லாத, அல்லது முகஸ்துதிகளை தூக்கித் திரியும் விபத்திலிருந்து காப்பற்றியிருக்கிறது.

'எழுத்து' சி.சு. செல்லப்பா ஞானக்கூத்தனின் படைப்புகளை மறுதலித்தப்போது, சி. மணி கொண்டாடினார். கொஞ்சமேனும் அதற்காக தனது, 'நடை' இதழை களமாக்கினார், சி. சு. செல்லப்பாவை எதிர்த்து. அதுவே இலக்கியத்தை, நவீனத்தை பின்நவீனத்திற்குக் கொண்டு சென்றது.

சி. மணி கடைசிவரை தனக்கான நிலையான நிலையாக எதையும் வைத்துக் கொள்ளாமல் இருந்ததற்குக் காரணம் அவர் ஒருமுறைகூட எனக்குத் தெரிந்து வெடித்துச் சிரித்ததில்லை. தலை சொரிந்ததில்லை. வெறுமனே காலாட்டியதில்லை அல்லது கட்டுக்கடங்காமல் கிளர்வுற்றதில்லை. அதுவே அவரை நிலையான உயர் பரிணாம உயிரியாக தக்கவைக்க உதவியது.

அவர் காலத்து இலக்கியவாதிகள் அவரைத் தவிர்த்தது சி. மணி கொண்டிருந்த தன்மையைக் கொண்டிருக்கவில்லையோ என்றே எண்ண வைக்கிறது. ஆமாம் ஞானக்கூத்தனோ, அசோகமித்திரனோ சி. மணியை எப்போதும் நினைவுகூறியதே இல்லைதான்.

ஆனால் நகுலனின்மேல் சி. மணியின் உடலிலிருந்து எழும் மணமே எழுவதாக எனக்குத் தோன்றும்.

நிற்க.

இன்று இந்த தமிழ்ச் சூழல் இருவேறு நிலைகளை ஒரு பகுத்தறிவின் முழுமையாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. அல்லது உலகமே அத்தகைய ஒரு தன்மையை நோக்கித்தான் செல்வதாகத்தான் தோன்றுகிறது.

அதாவது பகுத்தறிவை தனக்கும் முட்டாள்தனத்தை மற்றவர்க்கும் ஆக்கும் இந்த செயலுக்கு, முட்டாள்தனத்தை விளக்க பகுத்தறிவையும் பகுத்தறிவை விளக்க முட்டாள்தனத்தையும் கையிலெடுக்கிறது.

இதற்கு நாம் பகுத்தறிவு பேசிய, பேசும் அத்தனை சிந்தனையாளர்களையும் கடிந்து கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இந்த முட்டாள்தனங்கள் எல்லாமே அந்த பகுத்தறிவின் மேலேயே கட்டி எழுப்பப்படுகிறது.

ஜேன் குடால் சொல்வது இதைத்தான். 

நாலாபக்கமும் எறும்புகள் இழுத்துச் செல்லும் உணவு எப்படியோ இறுதியில் அதன் வசிப்பிட வாயிலுக்குச் சென்றுவிடுவதைப்போல, இதுவும் நிகழும். அந்த ஒரு எறும்பு மட்டும் தன் திசையை எப்போதும் மாற்றாது. அப்படி செல்லும் வழித்தடத்தின் சிக்கல்களும் இந்தத் திசைப் போராட்டத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது. கூடவே அந்த ஒற்றை எறும்பு பெரிய ஆசுவாசமடைந்துவிடுகிறது, இறுதியில். 

உயிர்களின் கூட்டு வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் எல்லாமும் முக்கியம். 

சி. மணி அவர் வீட்டு வாசலில் வந்து சாக்கடையை துலாவும் பன்றிகளை என்றுமே அவர் விரட்டியதில்லை. எனது இருசக்கர வாகனத்தில் சாக்கடை தண்ணீரை தெளித்துவிடும் என்பதற்காக கொஞ்சம் தள்ளி நிறுத்தச் சொல்லுவார்.

இன்று சி.மணியின் எண்பத்து ஒன்பதாவது பிறந்த தினம்.

02-10-2025

Tuesday, July 8, 2025

வான்காவும் இளையராஜாவும்

 


சமயங்களில் எல்லாவற்றுக்கும் காரணம் சொல்ல முடிவதில்லை.

சில மாதங்களாக முகநூல் பக்கம் வருவதில்லை. அப்படி ஒரு நிலைமையை சொல்லுவதே ஒரு காரணம்தான்.

சமீபத்தில் வான்காவின் நட்சத்திர இரவு ஓவியத்தைப் பற்றிய வித்தியாசமான ஓர் ஆய்வைக் காண நேர்ந்தது.

1889 ஆம் ஆண்டு வரையப்பட்ட வின்சென்ட் வான்கோவின் 'தி ஸ்டார்ரி நைட்', வளிமண்டல கொந்தளிப்பின் குறிப்பிடத்தக்க அம்சங்களை பகுப்பாய்வு செய்ததில், அது திரவ இயக்கவியல் (Liquid Dynamics) பற்றிய ஆழமான புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஓவியத்தில் உள்ள தூரிகையின் வீச்சுகளை ஆய்வு செய்ததில் கொந்தளிப்பான காற்றில் மேகங்கள் மற்றும் இலைகளின் இயக்கங்களை ஒத்த 14 தனித்துவமான சுழல்களிலும் எதிர்ச்சுழல்களிலும் கவனம் கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியாளர்கள் தூரிகை வீச்சுகளின் இடம் சார்ந்த பண்புகளையும் ஒளிர்வையும் பகுப்பாய்வு செய்ய உயர் தெளிவுத் திறன் கொண்ட டிஜிட்டல் படங்களைப் பயன்படுத்தினர். 

அவற்றை 'கோல்மோகோரோ'வின் கொந்தளிப்பு கோட்பாட்டுடன் (Kolmogorov's turbulence theory, 1941) ஒப்பிட்டனர். இந்தக் கோட்பாடு, ஆற்றல் எவ்வாறு பெரிய சுழல்களிலிருந்து சிறியவற்றுக்கு சிதறுவதற்கு முன்பு பாய்கிறது என்பதை விவரிக்கிறது. 

ஓவியத்தில் உள்ள சுழல்களின் அளவுகள், தூரங்கள் மற்றும் தீவிரங்கள் இந்தத் தத்துவார்த்த கட்டமைப்போடு ஒத்துப்போயின. இது வான்கோ இயற்கை நிகழ்வுகளை உள்ளுணர்வு விழிப்புடன் புரிந்துகொண்டதாக ஒரு கருத்திற்கு நம்மைக் கொண்டு செல்கிறது.

மேலும் இந்தக் கொந்தளிப்பு, நட்சத்திரங்கள் பிறக்கும் மூலக்கூறு மேகங்களில் காணப்பட்ட சக்தி நிறமாலையுடன் ஒத்துப்போவதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.  

இந்த இணைப்பு, வான்கோவின் கலை பிரதிநிதித்துவத்தையும் அவரது அவதானிப்புத் திறன்களை மட்டுமல்ல, இயற்கையின் அடிப்படை பற்றிய ஆழமான புரிதலையும் பிரதிபலிக்கிறது.

இதை வான்கோ தன்னுணர்வோடு செய்தாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இயற்கையின் ஒரு பகுதியாக நாம் இருப்பதால் அந்த இயல்பும் தன்னியல்பான ஒன்றே.

இதைத்தான் இசைஞானி இளையராஜா தனது பேட்டிகளில் அடிக்கடி சொல்லுவார், 

"இசை என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது, அப்படி தெரிந்துவிட்டால் அப்புறம் இசை என்னிடமிருந்து வராது" என்பார்.

இவர்களெல்லாம் இயற்கையின் தேர்வா? என்றால், இல்லை.

ஏனென்றால் இந்த பிரமாண்ட சடத்துவம் ஓர் உயிரியின் வடிவிலே, அதுவும் குறிப்பாக மனித வடிவிலேதான் தன்னுணர்வு அடைந்திருக்கிறது. பிரபஞ்சத்தின் உச்சபட்ச நிகழ்வு இதுதான்.

அதே போலத்தான் எனது அம்மாவும். என் அம்மாவைப்போல தன்னுணர்வு அடைந்த ஒரு பிரபஞ்சக் கூறை எங்கும் காண முடியாது. அது வான்கா அல்லது இளையராஜா அல்லது என் அம்மாவாக இருந்தாலும் அந்த உணர்வு நிலை, இந்த உடல் சார்ந்தது இல்லை என்றே கருதுகிறேன்.

இது அறிவியலுக்குப் புறம்பான ஒரு பார்வையாக கொள்ள முடியாது. ஏனென்றால் நவீன குவாண்டம் இயற்பியல், தன்னுணர்வை நுட்பமாக விளக்கப் போதுமானதாக இருக்கிறது.

இன்று அம்மாவின் பிறந்த நாள். அவரது புதைவிடத்திற்கு சென்றேன். புதர் மண்டிக் கிடந்த அந்த பெருவெளி அமைதியாக, ஒரு பெரும் சூறாவளிக்கு மத்தியில் நின்றிருந்த பேரமைதியாக இருந்தது. 

இன்று அம்மாவின் நினைவு நாளும்தான். இதுவே தன்னுணர்வின் ஓர் அதிசயம்.

(அம்மாவின் பிறந்த நாளன்று 07-07-2025 எழுதிய நினைவுப் பதிவு)

 புதைவிடத்திற்கு சென்றேன். புதர் மண்டிக் கிடந்த அந்த பெருவெளி அமைதியாக, ஒரு பெரும் சூறாவளிக்கு மத்தியில் நின்றிருந்த பேரமைதியாக இருந்தது. 


இன்று அம்மாவின் நினைவு நாளும்தான். இதுவே தன்னுணர்வின் ஓர் அதிசயம்.


(அம்மாவின் பிறந்த நாளன்று 07-07-2025 எழுதிய நினைவுப் பதிவு)


Sunday, June 23, 2024

அந்தியில் திகழ்வது - வே. நி. சூர்யாவின் ஓர் அமைதி நிறுத்தற்புள்ளி.

 


                                      - சாகிப்கிரான்.

   மனித லட்சியத்திற்கு உதவக்கூடிய புதிய வடிவங்களோ, உத்திகளோ தோன்றுவதற்கான அவசியம் என்பது எவ்வளவு அவசியமில்லை என்பதை ஒரு படைப்பாளி முற்றாக தன்னுணர்வும் நுண்மையும் அடைந்துவிட்ட பிறகு

படைப்பு செயலிலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்வதற்கு ஒப்பான ஒரு ஒத்திகையாகக்கூட அத்தகையாக ஏதுமற்ற எளிமையைப் புரிந்து கொள்ளலாம். இது தன்னியல்பான உள்ளொளியின் அல்லது மனம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் ஒரு எதேச்சையான உத்தியாகவே இருக்க வேண்டும். 


தொகுப்பில் உள்ள ஒரு கவிதை,


மாபெரும் அஸ்தமனம்

@@@@@@@@@@@@@@


அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு

அஸ்தமனமாகிக்கொண்டிருக்கிறது.

அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன். ஆ! காற்றைத் தீண்டுவதுபோல அல்லவா உள்ளது. தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்...

ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே? ஒருவேளை வீட்டை இழுத்துச் சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டதா என்னுடைய நான்?

இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை

வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா? என்னுடைய நானே திரும்பி வராதே... நீ இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு. 

அதுவே உன் சுவர்க்கம்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சூர்யாவின் முந்தையத் தொகுப்பான "கரப்பானியம்" கவிதைகள், சிக்கலான மன அமைப்பால் அல்லது கவிதை உரையாடலில் முன்னும் பின்னும் நகரக்கூடிய அதீத உணர்வு நிலையைக் கொண்டவையாக இருந்தன. ஆனால் இரண்டாவது தொகுப்பான "அந்தியில் திகழ்வது" எத்தகைய சுழிப்பும் இல்லாத, தெளிந்த சாரம்சம் என்ற தன்மையில் அமைந்திருக்கக்கூடிய கவிதைகளை மட்டுமே கொண்டிருக்கின்றது. இதை பிரக்ஞையற்ற உத்வேகங்கள் உண்மையாலுமே பிரக்ஞை பூர்வத் தெரிவுகளுடன் அமைந்துவிட்ட தற்செயல் என்று மேம்போக்காகக் கூறிவிடலாகாது. நாம் நமக்குள் உண்டு பண்ணிகொள்ளும் மன அமைப்பும், புறந்திடமிருந்து உருவாகிவரும் மன அமைப்பும் ஒரே வகையானவையாக இருந்துவிடுவதில்லை. இந்த இரண்டிலுமே சுயம் செயல்பட்டு தனக்கான பின் விளைவுகளை உண்டு பண்ணிக் கொள்கிறது. அத்தகைய பின்விளைவே, தொகுப்பு முழுவதும் இயற்கையைத் தவிர வேறு ஆள் அரவமே அற்ற ஒரு கவிதை வெளியின் சுயேட்சையான ஒரு கருத்தாகத் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது.


க்ரியா வெளியிட்ட வே.ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்த்த "கீழை நாட்டுக் கதைகள்" (மார்கெரித் யூர்ஸ்னார்) என்ற தொகுப்பில் வரும் முதல் சிறுகதையே, "உயிர் தப்பிய வாங்-ஃபோ". இக்கதையில் கிழவனான வாங்-ஃபோவிற்கு பேரரசன் இரண்டு கண்களையும் பொசுக்கும் தண்டனையளிக்கிறான். அதற்கு அவன் கூறும் காரணம் விசித்திரமானது. கடைசியாக வாங்-ஃபோ நிறைவு செய்யாத ஓர் ஓவியத்தை வரைந்து முடித்ததும் தண்டனை என்றாகிறது. அந்த மரணத் தருவாயில் ஒரு படைப்பாளியின் படைப்புத் திறத்தின் உடன் நிகழ்வானது அந்தப் படைப்பின் வழியாக நிரந்தரமடையவே தன்னியல்பைக் கொண்டிருக்கிறது. அந்த ஓவியத்தில் கடலை வரைய, அந்த அரண்மனை நீர்மமாக மாற, அதில் ஒரு படகை வரைந்து, வாங்-ஃபோவும் அவரது சீடனும் தப்பிவிடுகின்றனர். ஒரு படைப்பாளிக்கு அந்தப் படைப்பு நிரந்தரமாகும் தன்மையின் இயல்புடைய படைப்பாளி, உலகுடனான தன்னுடைய எப்போதைக்குமான தொடர்பைக் காத்துக் கொள்ளவதற்காகத் தக்கவைத்துக் கொள்கிறான்.


"மாபெரும் அஸ்தமனம்" கவிதையானது "அந்தியில் திகழ்வது" தொகுப்பிற்கான ஒரு மையமாக இருக்கிறது. எல்லாக் கவிதைகளும் புனைவின் வழியாக அந்தப் படைப்பாளியின் ஒவ்வொரு விதமான சூழ்நிலைக்கும் பொருத்தமான ஒரு தப்பித்தலின் இடைச் சார்பாக, இடையறாமல் மாறுபடுகின்ற படைப்பியக்கமாக நிலைத்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு துக்கம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்வது என்பது ஒரு ஆழ்ந்த யோசனையின் தீவிர ஆக்கச் செயல்பாடே. இதை சூர்யாவே "போற்றுவோம் நண்பர்களே" கவிதையில் இப்படி முடிக்கிறார்...


//எட்டாத் தொலைவினில் ஓர் இன்மையின் வடிவிலிருந்து

சகலத்தையும்

ஒழுங்குபடுத்தியவாறு

ஒரு மகத்தான ரகசியத்தைப் போல ஒருவர் இருக்க வேண்டும். அவரை அந்தப் பேரின்மையைப் போற்றுவோம் நண்பர்களே//


சூர்யாவின் முதல் தொகுப்பிலிருந்த மனச்சிதைவின் தாக்கம் இரண்டாவது தொகுப்பின் நோய்க் கூறின் வீர்யத்தில் தெளிவடைந்துவிட்டதாக கருத இடமளிக்கிறது. "காசநோய்க்கு ஒரு பாடல்" என்பது ஒரு நோயாளியின் வழக்கமான புலம்பலாக இருந்தாலும் அது கவிஞனை வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிச்சப் பருவத்தில் நிகழ்த்துவதாக இருக்கிறது. அவன் தன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை ஒரு குட்டி நாயைப்போலத் தடவிக் கொடுக்கிறான். பாக்டீரியாவின் அரசிக்கு விடை கொடுக்கிறான். நன்றி கெட்ட ஒரு மனிதனாகத் தன்னை நினைவுபடுத்திக் கொள்கிறான். தற்கணத்தின் மெய்ம்மையை அர்த்தச் செறிவுடன் தனக்கு வழங்கிய நோய்க்கு நன்றி கெட்டவனாக விடை கொடுத்துவிட்டது, யதியின் "நோயை எதிர் கொள்ளல்" கட்டுரைக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதுபோல, எனது 17 வயதில் டைஃபாய்ட் நோயின் தாக்கத்தில் வீழ்ந்தேன். எனது பள்ளி தமிழ் ஆசிரியரும் எனது ஆசானுமான அந்தோனிராஜ் அவர்கள் கிருத்துவ மிஷினரி புத்தகத்தை கொண்டு வந்துக் கொடுத்துவிட்டுப் போனார். அது கிட்டத்தட்ட என்னை இதே மனநிலைக்குக் கொண்டு சென்றது. கையறுநிலையில் ஒரு சாதாரணன் கடவுளை வேண்டுகிறான். ஒரு படைப்பாளியோ அந்த நோயிடமே ஓர் உரையாடல் நிகழ்த்துகிறான். ஒருவகையில் கிருத்துவத்தின் வெற்றியே இதுதான் போல. அது விழித்திருந்த எனதிரவுகளை பிரமாண்ட அண்டத்தின் சாத்தியங்களில் திறக்கச் செய்தது. ஆனால் சூர்யா அந்த நோய்மையைத் தனக்கான ஒரு வதை நல்வாய்ப்பாகக் கருதுவதாகத் தெரிகிறது. இந்த மனநிலை அபூர்வமான வாய்ப்புக்களை நமக்கு வழங்குகிறது. அப்பரின் இறையன்பு இவ்வாறே சூலை நோயிலிருந்து தோன்றுகிறது. ஆனால் நவீன மனிதன் கடவுளின் தோற்றம் பற்றிய தெளிவுடன் இருக்கிறான். அதனால் அந்தக் கிருமியுடன் ஓர் உரையாடலை பாவிக்கிறான். அதன் மூலம் தனது இருப்பை முற்றாக உணர்கிறான். அதாவது நிலையற்றத் தன்மையின் வெளியில் அடுத்து எந்த கணமும் நேரக்கூடிய அவனின் சொந்த அழிவை தர்க்கத்திற்கு உள்ளாக்குவதன் மூலம் அதிலிருந்து, அந்த நல்வாய்ப்பிலிருந்து ஒரு குற்ற மனப்பான்மையுடன் வெளியேறிவிடுகிறான்.


மற்றொரு கவிதை,


கண்ணாடிக் குவளை

@@@@@@@@@@@@@@


மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப நினைக்கிறேன். சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. தவறி விழாது என ரகசியமாக எண்ணிக்கொள்கிறேன். சில்லுகள் தங்களைக் கணத்தில் கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைத்த காட்சியைப் பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில் என் அடுத்த எண்ணத்திற்காகப் புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இது ஒரு வியப்பூட்டும் கவிதையாக நின்றுவிடாமல் எத்தகைய படைப்பு சான்றை வழங்கக்கூடும் என்று யோசித்தால், தத்துவமே அதற்குக் கை கொடுக்கிறது. ஹைடேக்கரின் இருத்தலியலை புரிந்து கொள்ள ஹுஸ்ரல் வேறு ஒரு கருத்தியலை நுழைக்கிறார். அதுதான் phenomenology எனும் நிகழ்வியம் தத்துவம். இதன் மூலமே இருத்தலியலின் நுண்மையை நம்மால் ஓரளவேனும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இது நாம் அறிகின்ற ஒன்றை எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என்று பேசுகிறது. குறிப்பாக தத்துவத்தில் தனி மனித உணர்வுகளுக்கு இடம் தந்து அதன் மூலமே நாம் இருத்தலியலையும் பின் நவீனத்துவத்தையும் வந்தடைகின்றோம்.


கவிதையில் மேசையும் கண்ணாடிக் குவளையும் இருத்தலியலின் சான்றுகளாகின்றன. ஆனால் நிகழ்வியலின் நிகழ்தகவு எண்ணத்தைச் சார்ந்து ஒரு recurrent உருவாக்கப்படுகிறது. அது இயல் கடந்த ஒரு தன்மையில் நடப்பதாக அமைந்துவிடுவதுதான் கவிதையின் சாராம்சமாக இருக்கிறது. இயல்பினில் அவ்விரு பொருட்களும் எந்த வகையிலும் செயல்படுவதில்லை. ஆனால் கவிஞரின் மனநிலையில் அந்தக் கண்ணாடிக் குவளை கோடி முறை விழுந்து நொறுங்குகிறது. இது மனிதனின் எண்ணத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அவன் தனது நிலையாமையை அல்லது இன்மையை அந்தக் கண்ணாடிக் குவளைக்குப் பொருத்திப் பார்க்கிறான். தானே நொறுங்கி தானே இணைந்து கொள்கிறான். இதன் மூலம் மனோரீதியிலான ஒரு திடத்திற்கு வருகிறான். இந்த மனித phobiaவானது ஃபிராய்டின் Desire to Death என்ற கருதுகோளின்படி நிகழ்கிறது. இதன் மூலம் மனித மனமானது ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு தன்னை விடுவித்துக் கொள்கிறது. அந்தக் கண்ணாடிக் குடுவையில் நிரம்பியிருப்பதுதான் உயிர் வாழ்வின் அல்லது இருத்தலின் பூடகம். அதன் நிலை இங்கே பேசப்படாமல் விடுவதே கவிதையின் மற்றொரு நிலைப்பாடு.


இந்தக் கவிதையை ஒட்டிய ஒரு மனநிலையை உருவாக்குவதே மற்றொரு கவிதையான, "மே 16, 2020". இது மனச்சிதைவின் உச்சம் என்றாலும், எல்லாமே Object ஆகிவிடாமல் Subject அதைப் புரிந்து கொள்வதாக விவரிக்கின்றது. புறத்தூண்டல் ஒன்று அந்த மனச்சிதைவை கண நேரத்தில் சரி செய்வதென்பது, எல்லா பிளவுபட்ட ஆளுமைகளும் தன்னை சூர்யா என்ற ஒற்றை Identityயில் தக்க வைத்துக் கொள்வதே மீண்டும் அந்த இணைவை சாத்தியமாக்குகிறது. Identity மாறியிருந்தால் மறுநிகழ்வின் சாத்தியமற்று இருந்திருக்கும்.


மே 16, 2020

@@@@@@@@@@@


இம்முறை கைமீறிப் போய்விட்டது அறையில் மொத்தம் பதினைந்து சூர்யாக்கள்

யார் நிஜம் அறியேன்

ஒருவர் இன்னொருவரைத் தாக்குகிறார்

அந்த இன்னொருவர் சுவரில் தலையை முட்டிக்கொள்கிறார்

இன்னும் சிலர் தலையணை, புத்தகங்கள் என எது கையில் அகப்படுகிறதோ

அதையெடுத்து உண்கின்றனர் வலது கையால் கழுத்தைப் பிடிப்பதும்

அதை இடது கையால் தடுப்பதுமாகச் சிலர்

தனது உதட்டில் தானே முத்தமிட முயன்றுகொண்டிருக்கிறார் மற்றொருவர்.

திடுமென வெளியேயிருந்து யாரோ சூர்யா என அழைக்கிறார்.

பதினைந்து பேரும் ஒரே ஆளாகிய என்ன என்கிறார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இதே தன்மையின் வேறொறு வடிவம்தான் "நிழலாகயிருப்பது நன்று நிழலாகக்கூட இல்லாமலிருப்பது அதனினும் நன்று". கவிதை.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


என்னுடையது அதோ அந்த ஒரு நிழல் மட்டுமே. மற்றபடி, இச்சுவர் ஏந்தியிருக்கும்.

இருக்கைகளின் நிழல்களோ, அதிலொன்றில்

கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருக்கும் நிழலுருவமோ. என்னுடையதில்லை.

என்னுடையது இல்லவே இல்லை.

எவருடைய சாயையாகக்கூட இருக்கட்டுமே, எனக்குப் பிரச்சனையும் இல்லை.

அந்நிழலுக்குப் பக்கத்தில் ஒரு நிழல்போல அமர்கிறேன், அனைத்தும் குணமாகிவிட்டதைப் போலிருக்கிறது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கவிதையின் கடைசி வரிதான் சூர்யாவின் முத்திரையாக இருக்கிறது. இதைத் தன்னிலிருந்து தானே தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமாக, ஒரு எல்லைக்குள் வகுக்கப்படாத வெளி மூலம் மனம் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்வது, கவிஞரின் யார் அங்கு இல்லை என்பது பற்றிய விழிப்புணர்வு என்பது மட்டுமில்லாது, அங்கு யாரையும் உணராதது போன்ற விழிப்புணர்வு நிலையாகும். படைப்புச் செயல் மூலமாக அடையும் இடம் என்பது மனிதனின் சுயக்கட்டுப்பாட்டிற்குள் தன்னைக் கடந்து செல்வதற்கான சான்றாகும். இது ஒருவகையில் தன் நிலையாமையின் திறத்தின் மீது படைப்பூக்கத்தின் சாதகத்தில் நிகழ்த்திக் கொள்ளும் ஒரு அனுகூலம்தான். இந்த அனுகூலத்தின் முழு பலனையும் படைப்பின் வழியாகக் கண்டடைந்தவர் சூர்யாவாக இருக்கக்கூடும்.


கடைசியாக "வெளியேற்றம்" கவிதையின் வழியாக தொகுப்பிற்கான இறுதி வடிவத்திற்கு வந்து விடலாம்.


கவிதை இதுதான்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இருளில் ஒளி மூழ்குவதுபோலவும் தனிமையில் காதலர்கள் பிரிவதுபோலவும்

சிறிதுசிறிதாகக் கடற்கரை தீர்ந்துகொண்டிருக்கிறது. போதாக்குறைக்குக் கிணற்றிலிருந்து தண்ணீரை வாரி இறைப்பதுபோன்று கடற்கரையிலிருந்து கடற்கரையை

இன்னும் இன்னும் என வெளியேற்றிக்கொண்டிருக்கிறது அந்தி.

மெதுவாக அங்கிருந்து வெளியேறுகின்றனர் யாவரும். அவ்வளவுதானா எனக் கூவியபடி

கூடுகளுக்கு விரைகின்றன புள்ளினங்கள் அங்கு ஏதோ எழுதியிருக்கிறது என்பதுபோல அலைமோதும் பாறையில் அமர்ந்து வானத்தை வெறித்துக்கொண்டிருக்கிறான் ஒரு தனியன். இம்முறை நிலவுகூட இல்லை ஆகாசத்தில்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


நவீன கவிதை, தன்னை முற்றாக இதுநாள் வரை நம்பப்பட்டு வந்த வரையறைகளை உதறி, மொழியின் மேல் உள்ள கச்சிதத் தன்மையை உணர்வுகளின் தாராள வடிவமாக்க முயலுவதாகத் தெரிகிறது. 


"அலைமோதும் பாறையில் அமர்ந்து வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் ஒரு தனியன். இம்முறை நிலவுகூட இல்லை ஆகாசத்தில்."


இதுவே மேலே இருக்கும் முழு கவிதைக்குமான தன்னெழுச்சியைத் தந்துவிடுகிறது. அப்படி தளைகளற்ற சுதந்திரமான நிபந்தனையற்ற மொழிக் கட்டமைப்பு என்பது ஒருவகையில் அதை எழுதும் படைப்பாளிக்கு ஒரு மெய்ம்மையின் ஆவேசங்களை கடக்க உதவும் கவனமின்மையாகக்கூட இருக்கக்கூடும். 


முழுத் தொகுப்பும் இம்மாதிரியான வெவ்வேறு மனநிலைகளைத் தந்தாலும் அது உருவாக்கும் ஒட்டு மொத்த மைய்யத் தன்மையாது, ஒரு கைவிடப்பட்ட தோட்டத்தின் வீடுபோல, கண நேரச் செயல் நோக்கமுடைய உத்வேகங்களான, ஓர் அடித்தளம் கொண்டதாக வெளிப்பாடுகள் கொண்ட "தான்" என்ற வேதனையனுபவத் திரள் முழுவதையும் படைப்பூக்கத்திற்கு உந்தித் தள்ளும் அபூர்வ மனோநிலையின்  மொழியால் கடந்த ஒரு ஆனந்தம்.... ஒரு துக்கம்..... ஒரு வெறுமை என்று சிருஷ்டித்துக் கொள்கிறது.


ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம் ... ஒரு வெறுமை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது

வெயில்

யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள் எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு ஏற்கெனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது. காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி ஆழப் பதித்துப் பதித்து நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம். ஒரு வெறுமை..

இனி திரும்பிச்செல்வேன்

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம். 

உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இக்கட்டுரை கல்குதிரை அச்சு இதழிலும் பிறகு கவிதைகள் இணைய இதழிலும் வந்தது

Disclaimer மனோநிலை

 Disclaimer மனோநிலை  ++++++++++++++++++++++                 முக்கியமான ஒன்றைச் சொல்ல வரும்போது மிகக் குறைந்த விபரங்கள்தான் இருக்க வேண்டும். ...