Thursday, September 17, 2026

விட்டல்ராவ் கதைகளின் எளிமையின் அடியாழங்கள்.



ஒரு படைப்பாளியின் அறமும் அனுபவங்களும் படைப்பாகும் கணம் என்பது ஒருவகையில் அந்தப் படைப்பாளியின் சிந்தனைகளும்  அதன் உள்ளடுக்குகளும் ஒரு மொழி வழியாகவே வெளிப்படுவதால், அந்த மொழியை மிக நுட்பமாகக் கையாளக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை விட்டு வெளியேறிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் விட்டல்ராவின் கதைகளை வாசிக்கும்போது நிகழ்கின்றன.


இந்தக் கட்டுரை விட்டல்ராவின் 33 கதைகள் அடங்கிய விட்டல்ராவ் கதைகள் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. எனது இளம்பிராயத்தில் 90 களில் நெருக்கமான இடைவெளி என்ற அவரது குறுநாவலை வாசித்துவிட்டு, அவரது கதைகளைத் தேடி வாசிக்கத் துவங்கினேன். கணையாழியில் வந்த அவரது பந்து பொறுக்கி என்ற சிறுகதை சிறந்த கதையாக அப்போது தேர்வாகியதுபோதுதான் அவர் கதைகளன் சேலத்தைச் சார்ந்தது என்று தெரிந்து கொண்டேன். அப்போது இப்போது இருப்பதுபோல தகவல் தொடர்பு இல்லை. கணையாழியை தேர்முட்டியை ஒட்டி இருக்கும் ஒரு சிறிய பெட்டிக்கடையில்தான் வாங்குவேன். கடைக்காரர், நா. பார்த்தசாரதியின் தீபத்தையும் சேர்த்து எடுத்துவைப்பார். ஆனால் எனக்கு கணையாழி தந்த அனுபவத்தை, தீபம் தரவில்லை. 


வழக்கமான தீவிர இலக்கிய வாசகனாகத் தன்னை இருத்திக் கொள்ளும் ஒரு வாசகன் இவரது சிறுகதைகளின் தீவிரத் தன்மையாற்ற, மீயதார்த்தக் கதைகளை அப்படியே கடந்து போய்விடக் கூடும். அது மொழியின் ஆகச் சிறந்த வடிவ நேர்த்தியையோ, சொல்லுதலின் புதிய யுத்தியையோ, புதிர்த்தன்மையின் வியப்பிலோ, அல்லது கதை முடியும் திருப்பு முனையிலோ ஏமாந்துபோகும் ஒரு கலாப்பூர்வ அணுகலால்தானிருக்கும்.


தொகுப்பில் உள்ள கதைகள் யாவுமே, ஒரு நிகழ்வை, அல்லது நிகழ்வுக் கோர்வையை எந்தப் புனைவுமின்றி நேரடியான , சம்பவத்திற்கான வெளி கற்பனையால் உண்டாக்கும் அபூர்வங்கள் இல்லாதது போன்ற ஒரு தோற்றத்தையேக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது அப்படி இல்லை என்று முழுத் தொகுப்பையும் வாசித்துவிட்டு, ஒரு பயணம் மேற்கொள்ளும் சிந்தனையானது, அதிர்ச்சிக்கு உள்ளாகிறது.  


தொகுப்பில் உள்ள முதல் கதையான சந்திப்பு, பெண் பார்க்க மாப்பிள்ளை வருவதுதான். அதேபோலக் கடைசிக் கதையான சிதை ஒரு ஏழைப் பெண் ஊழியரின் இறுதிச் சடங்கில் நடக்கும் ஏழைப் பணக்கார மோதல்தான். ஆனால் இரண்டு கதைகளுமே, அதன் சம்பவத் தன்மையைத் தாண்டி ஒரு அதீத உள் ஒழுங்கைக் கொண்டிருக்கவே செய்கின்றன. வெறும் தகவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு தீவிர இலக்கியப் பிரதியை உருவாக்குவதென்பது அசாதாரமானதுதான்.


விட்டல்ராவ், அடித்தட்டு மக்களை, அபூர்வமான அவர்களின் மன அமைப்புகளை, பெரும்பாலும் சமூகத்துக்கும் அவர்களுக்குமான வினையாற்றலை, மிக நுட்பமான தகவல்களுடன் சொல்வதிலும், ஒரு காலக்கட்டத்தின் பிராந்திய பதிவுகளை கதைகளில் கொண்டு வருவதும், துறைகள் சார்ந்து அவருக்கு இருக்கும் அனுபவங்களும், தொழில் சார்ந்து அவர் வெளிப்படுத்தும் செறிவும் அவரை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தினாலும், இவற்றைத் தாண்டி அவரது படைப்புகள் கூர்மையான வாசகனுக்கு சொல்லும் மெய்ம்மைகளின் வீச்சே அவரை தனிப்படுத்திக் காட்டுகிறது.

தொகுப்பிலுள்ள கதைகளை வரிசைப்படி விளக்குவதோ, கதைகளை சொல்வதோ அவரது படைப்புகளின் உள்ளடுக்குகளை அணுக பயன்படுமா என்று தெரியவைல்லை. இந்தக் கட்டுரை, அப்படிப்பட்ட கதைத் தன்மையிலிருந்து விலகி, புறவயமான கூறுகளிலிருந்து அகவயமான மர்மங்களை நோக்கிய ஒரு தேடலாகத்தான் அமைகிறது. அப்படி எல்லாக் கதைகளையும் இங்கே எடுத்தாண்டுவிட முடியுமா என்பது கேள்விதான். எனவே, தேர்ந்த, அல்லது அப்படிப்பட்ட கதைகளைப் பற்றி மட்டும் ஒரு அறிமுகமாக இங்கே நாம் கருதிக் கொள்ளலாம்.


முதலாவதாக ’கடன்’ என்ற கதை, தனது நண்பன், கோவிந்தனைப் பற்றிய கதை. அவன் ஒரு வியாபரியின் மகன். கதை நாயகனின் அப்பா கடனுக்கு பதில் சொல்ல முடியாத தர்ம சங்கடத்திற்கு குடும்பத்தையே தலைகுனிய வைப்பவர். நண்பன் கோவிந்தன் சும்மா இருக்க மாட்டான். பள்ளிக்கூடம் விட்டதும் நேராக அவர்களுடைய ஜவுளிக் கடையில் போய் உட்கார்ந்துவிடுவான். யாருடனும் போய் விளையாடுபவனும் இல்லை. வாரந்தோரும் சந்தைக்குச் சொன்று ஏதாவது மொத்த விலைக் கடைகளில் வாங்கியப் பொருள்களை சின்ன பொட்டலங்களாக விற்று காசாக்குவான். இவனை துணைக்குக் கூட்டிப் போவான். ஒரு முறை இவனிடம் காசில்லாவிட்டாலும் சினிமாவிற்குக் கூட்டிப்போய் செலவு செய்கிறான். அடுத்தவாரம் ”மூணு ரூபா நீ தரணும்”, என்று இவனையும் கடனாளியாக்கிவிடுகிறான். அந்தக் கடனை அடைக்க நாற்பத்தைந்தாண்டுகள் கழித்து மீதமிருக்கும் இந்த மூன்று ரூபாய்க் கடனை அடைக்க கோவிந்தனுடைய ஊருக்கு சேலத்து மாம்பழங்களுடன் கிளம்புகிறான் கதாநாயகன். எல்லாம் மாறியிருக்கிறது. ஜவுளிக் கடையில் அவனுடைய தம்பி உட்காந்திருக்கின்றான். கோவிந்தன் மூளைக் கட்டிவந்து இறந்து போய்விட்டதாகச் சொல்கிறன். அம்மாவைப் போய்ப் பார்க்கச் சொல்கிறான். இவன் மாம்பழங்களை எடுத்துக் கொண்டு செல்கிறான். கதையில் கோவிந்தனின் அம்மாவின் கூற்றாக இது வருகிறது. “அவந்தான் சரியாவே படிக்கலே. வியாபாரத்திலயும் கெட்டியில்லே, செத்துப் போயாச்சு”. அவனால் கோவிந்தனின் கடனை அடைக்க முடியாமல் போவதாகக் கதை முடிகிறது. வாசகனுக்கான இந்தக் கதை ஸ்தூலமாக இதை விட்டுச் சென்றாலும், சூக்குமமாக வேறொன்றைச் சொல்கிறது. அது, ஒட்டு மொத்த மனித இனத்தின் தன்னுணர்வைத்தான். ஒரு மனிதனின் செயல்பாடு அவனது தன்னுணர்வை சார்ந்தே அமைகிறது. கோவிந்தன் ஓயாது அலைந்து வியாபாரம் செய்தது, அல்லது ஒரு மனிதன் இடையறாது இயங்குவது ஏதோ ஒருவிதத்தில் அவனது வாழ்நாளை சார்ந்தே இருக்கிறது. ஒன்று அவன் உச்சத்திற்கு போவதாகவோ, அல்லது அவனது மரணமோ அதை இயக்குகிறது. இது விதி என்ற குறுகிய சமன்பாட்டிற்குள் வராத தன்னுணர்வின் ஒரு பொருள் விளக்கமில்லாத உள்ளிணைந்த செயல்பாடு. மேலோட்டமாகக் கதை, அடைக்க முடியாத ஒரு கடனாக முடிவது,  நம்மால் எவ்வளவு முயன்றும் விளங்கிக் கொள்ள முடியாத சவாலாகவே நிற்கிறது. அந்த சவால், மனிதனின் தன்னுணர்வு. இதையே விட்டல்ராவின் கதை தனது எளிமையினுள் திணித்து வைத்திருக்கிறது.


அடுத்ததாக எடுத்துக் கொள்ளும் கதை, ’தோற்றம்’ குருநாதனின் நண்பன் சேஷகிரி வெளிநாட்டில் வேலை செய்பவன், ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போன கார் பயண விபத்தில் இறந்துபோகிறான். அந்த சவம் விமானத்தில் பல நாள் கழித்து வருகிறது. அதை, தன் நண்பனைப் பார்க்கப் போகிறான். அப்படி குருநாதன் ரயிலில் செல்லும்போது, ரயில் விபத்து மரணம் ஒன்றைப் பார்க்கிறான். பிச்சைக்காரனின் சடலம் அவனது லுங்கியை உருவிப்போட்டு மூடியிருக்கிறது. இந்தக் காட்சி நண்பனின் சடலத்தை நன்கு பதப்படுத்தப்பட பெட்டியைப் பார்க்கும்போது அவனுக்கு நினைவு வருகிறது. கதை அவ்வளவுதான். வந்தவர்கள் அந்த பதப்படுத்தப்பட்ட பெட்டியைக் கண்டு வியக்கின்றனர். இங்கே இரண்டு சாராம்சங்கள் உள்ளன. ஒன்று, பிச்சைக்காரனை, போர்த்தியிருக்கும் லுங்கியில் மரணமாகப் பார்க்கும் கூட்டம் இங்கே அந்த பெட்டியை முதன்மைப்படுத்தி, சேஷகிரியை இரண்டாமிடத்திற்கு தள்ளுகிறது. அதாவது ஒரு மரத்தை வெட்டும்போது பதைக்கும் மனித மனங்கள், ஒரு வீடு கட்ட அங்கிருக்கும் மரங்களை வெட்டுவதை சிறு உறுத்தலும் இல்லாமல் கடப்பதைப் போல ஒரு மரணமும் நிகழ்வதை ஒரு புதிய மனோபாவமாக விட்டல்ராவ் காட்ட முயல்கிறார். ஒரு படைப்பாளியாகப் படிக்கும் வாசகன் ஒரு நிகழ்வை எப்படி மற்றொரு நிகழ்வில் பொருத்திக் கதையாக்குவது என்பதை பழகவும் ஒரு வாய்ப்பாக இந்தக் கதை இருக்கிறது. நிச்சயம் அவர் பதப்படுத்தப்பட்ட பெட்டியைத்தான் பார்த்திருப்பார். 

மற்றொரு கதை ’ஊதாமணியை’. பெரியம்மாதான் எல்லாம் லட்சுமி அம்மாவிற்கு. எதுவானாலும் கடிதம் போட்டால் உடனே ஓடிவந்து நிற்பாள் பெரியம்மா. எல்லாமே சரியாக நடப்பது பெரியம்மாவால்தான். அம்மா எப்போதும் பெரியம்மாவைப் பற்றியேதான் பேசியபடி இருப்பாள். அன்று திடீரென்று அம்மாவுக்கு மைல்ட் அடாக், பத்துநாட்களுக்குப் பிறகு கண் விழிக்கும் அம்மா, முதலில் கேட்கும் வார்த்தை “பெரியம்மா இன்னும் வரலையா?. இங்கே நடந்த அதே சமயம் பெரியம்மா நீரிழிவு முற்றி கோமாவிற்குப் போய், கோமாவிலேயே இறந்தும்விடுகிறாள். அம்மாவிற்கு இதை சொல்ல வேண்டாம் என்று டாக்டர் சொல்கிறார். நாட்கள் ஓடுகின்றன. பெரியம்மா வராததற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி சமாளிக்கின்றனர். நாள்பட அம்மா, பெரியம்மாவைப்பற்றிக் கேட்பதை நிறுத்திவிடுகிறாள். பெரிய மெளனம் நிலவுகிறது. ஒருநாள் விஷயத்தை ஒரு கடிதத்தில் எழுதி அம்மா பூஜை செய்யும் இடத்தில் வைத்துவிட்டு, திருச்சி பஸ்ஸுக்குப் பயணமாகிறான் கதாநாயகன். சரியோ, தவறோ இதைத் தவிர வேறு வழியில்லை என்று கதை முடிகிறது. ஒன்றுபட்ட இரண்டு ஆத்மாக்கள், தங்கள் மரணத்தைத் தன்னுணர்வில் அறிந்து கொள்கின்றன. ஆனால் அது, பிரக்ஞைக்குப் புரிவதில்லை. இருவரும் ஒரே சமயத்தில் தங்களுக்குள் அறியாமலேயே உடல்நலம் குன்றுவது அல்லது இறந்துபோவது அல்லது ஒருவர் இறந்துபோவது என்பது கதைகளில் சொல்லப்படுவது ஒருவகையான நாடகீய பாவனையாகத் தோன்றலாம். ஆனால் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க்கின் E.T படத்தில் வருவதைப்போல, ஏலியனுக்கும் அந்த சின்ன பையனுக்கும் மனமும் உடலும் ஏதோ ஒரு சூக்குமத்தில் இணைந்திருக்கும். கடைசியாக ஏலியன் இறக்கும் தருவாயில், அந்தப் பையனும் உடல் ரீதியிலான பின்னடைவை சந்திப்பான். இரண்டுபேருக்கும் ஒரே மதிரி இதயத்துடிப்பு குறையும். ஒரு கட்டத்தில், அவனது சூக்கும இணைவு விடுபட்டு சகஜமாவான். அந்த ஏலியன் அப்போதைக்கு செத்துப்போகும். இந்தப்படம் 1982 ல் வந்தது. பெரியம்மாவிற்கும் லட்சுமியம்மாவிற்குமான உறவு கிட்டதட்ட இதே போன்றததுதான். சரியோ, தவறோ இதுதான் ஒரே வழி என்று எழுதப்பட்ட கடிதத்தை ஒரு வாசகன் தனக்குள் வாசிக்கிறான். பெளதீகத் தன்மையை மட்டும் நம்புகிறவன் லட்சுமியம்மாவின் இறப்பை கற்பனை செய்கிறான். அபெளதீகத்திலும் அதாவது எல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளவற்றையும் நம்புகிறவன், லட்சுமியம்மா, எந்த சலனமும் இல்லாமல் அந்தக் கடிதத்தை மீண்டும் மடித்து வைத்துவிட்டு, பூஜையைத் தொடர்வதாகக் கருதிக் கொள்வான். இயற்கைக்கு தனி மனிதனின் மேல் எந்த அக்கரையும் இல்லை என்பதே பொதுவான கருத்து. அது தன்னை நிலைநிறுத்த, உயிர் நீட்சியை சாத்தியப்படுத்த மட்டுமே ஏதுவானது என்பதை விட்டல்ராவ் கேள்விக்குள்ளாக்குகிறார். தனிமனித அக்கரையும் இயற்கைக்கு இருக்கிறது. அது பெரியம்மாவின் இழப்பை தாங்கி ஜீவிக்க, லட்சுமியம்மாவிற்கு எதிர்ப்பாராத அட்டாக்கை ஏற்படுத்தி, ஒரு கால நீட்சியை வழங்கிவிடுகிறது. அம்மா இருக்க வேண்டும் என்பதுதான் பெரியம்மாவின் எண்ணம். நம் எண்ணங்களே இயற்கை. இயற்கையே நம் எண்ணங்கள். அதனால்தான் ஸ்டீபன் ஹாகிங்கால் ஏதுமற்ற செயல்படாமையில் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடிந்தது. இத்தகைய தன்மையை விட்டல்ராவின் பல கதைகளில் வேறுவேறு அனுபவங்களாக அறிய முடிகிறது. 


அப்படி இரண்டு கதைகள்தான் ஒத்திகையும் இரகசியமும்.


மற்றொரு கதை, பிம்பம். தனது குடிகாரக் கணவன், அவள் உள்ளறைக் கதவைத் திறந்து வெளியே வரவில்லை என்று, தீக்குளித்து, கத்திக் கொண்டே, தீப்பிழம்பாக விழுந்து எரிகிறான். ஆனால் வாணி கதவைத் திறக்கவே இல்லை. எல்லாம் முடிந்துவிடுகிறது. இதை அங்கச்சி வழியாகச் சொல்லும் விட்டல்ராவ், கடைசியாக, கணவனது எரியும் தோற்றம், தன்னுள் நிரந்திரமாக எந்த விதமான நிரந்தர அதிர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடாது என்றுதான் அவள் வெளியே வரவில்லை என்று பதிவு செய்கிறார். இது பிரதியின் ஒரு சின்ன அடையாளக் குறி. இந்த சம்பவம் பெரும்பாலும் அடிக்கடி நிகழ்ந்திருக்கும். கணவன் என்ற எண்ணத்தில் அவள் பலமுறை கோபம் தணிந்திருக்கலாம். ஆனால் இந்த முறை அவளது முடிவு வேறாக இருக்கிறது. கடைசியாகப் பிறக்கும் சவலைக் குட்டியை, அது பிழைக்காது என்ற உள்ளுணர்வில் ஒரு பூனை தின்றுவிடுவதுபோல, அவள் நெருப்பாக அவனைத் தின்றுவிடுகிறாள். அவளுடைய உணவே அவந்தான். அதன் மூலமே அவள் மீட்சியடைகிறாள். என்றுமே பெண்களின் முடிவு தீர்க்கமானது. இதை எல்லா பிள்ளைகளும் அறிந்திருப்பர். கதையின் தலைப்பான பிம்பம், அவளது வெள்ளைக் கோலத்தைக் குறிக்கிறதே ஒழிய, அவன் எரிந்து கொண்டு விழுவது ஒரு காட்சியாகத்தான் இருக்க முடியும். தலைப்பானது காட்சி என்று இல்லாதபோது வாசகனுக்கு இப்படிப்பட்ட ஒரு சாத்தியத்தை விட்டல்ராவ் வழங்குவது அபாரமானது.


அடுத்தக் கதை சிதிலங்கள். இது ஒரு சிறுகதையைத் தாண்டி குறுநாவல் போலவும் இருக்கிறது. இதன் கதை, பெண் புரோக்கர் ஒருவன் மனம் மாறி, கண்காணாத ஓர்  இடத்தில் தெய்வ காரியம் செய்வதற்குப் போய்விடுகிறான். அவனை அப்படி மடைமாற்றம் அடைய வைத்தது, பத்மாவின் மரணம். அவளது வாடிக்கையாளன் ஒருவன் காசில்லை என்பதால், அவன் போட்டிருந்த குளிர்க் கண்ணாடியை அவளிடம் அடமானமாகக் கொடுத்துப் போகிறான். ஆனால் அவன் வரவேயில்லை. மாது அந்தக் கண்ணாடியை அவனிடம் கேட்கிறான். அவள் ஏதோ காரணம் சொல்லி தவிர்கிறாள். அப்போது அவள் அந்தக் கண்ணாடிக்காரனால் ஐந்துமாதம் கர்பிணியாக இருக்கிறாள். பிரிதொருநாள் அவளது சினேகிதி, அந்தக் கண்ணாடியை அவனிடம் தரச் சொல்லி பத்மா தன் கணவனிடம் சொல்லிவிட்டு, ஜன்னியில் இறந்துபோய்விட்டதாகச் சொல்கிறாள். ஆனால் அவன் அப்படி மறைந்து வாழும் சிதிலமைடைந்த கோவிலில், பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு மந்திரித்துவிடக் கேட்கின்றனர். தினமும் பெரிய வரிசை நிற்கிறது. இங்கே நாம் திகைப்படைவது என்னவென்றால், நகரத்தில் சுகத்திற்காக ஆண்கள் அவனைத் தேடி வந்தனர். இங்கே, இந்தக் கிராமத்தில் பெண்கள், தங்கள் குழந்தைகளின் பிணி போக அவனை நம்புகிறார்கள். மாது இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரியான புரோக்கர் காரியத்தைத்தான் செய்கிறான். இங்கே மீட்சி என்பது ஒரு கற்பனையானதாகத்தான் அவனுக்குத் தோன்றுகிறது. பெண் புரோக்கராக இருந்தபோது அவனடைந்த குற்ற மனநிலைதான் தன்னைக் கடவுளின் தூதுவனாக கருதும் குழந்தைகளை தூக்கிவரும் பெண்களிடமும் அடைகிறான். அவனது வாழ்வு இரண்டு இடங்களிலும் சிதிலமடைந்த ஒன்றாகத்தானிருக்கிறது. ஆனால் அவனால் இவற்றிலிருந்து வெளியேறிவிட முடியாது. ஏன் எந்த மனிதனாலும் வாழ்க்கையிலிருந்து வெளியேறிவிட முடியாது. அவனை எதோட்சையாக அந்த ஊரில் சந்திக்கும் வாடிக்கையாளனான சேட்டு, இவன் அடித்துப்போட்ட அந்தக் கண்ணாடிக்காரன் இவனைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறான். மனித மனம் எவ்வளவு நலிவுற்றாலும் அது தன்னை ஏதோ ஒரு கணத்தில் மேம்படுத்திக் கொண்டுவிடுகிறது. அது ஒரு கணமானாலும் சரி. ஆட்டோ சங்கரை அந்த விடிகாலை தூக்கிட உறுதியானபோது கடைசி நிமிடம் வரை, தன் தூக்கு ஒத்திவைக்கப்படும் என்ற நம்பிக்கை இழந்தபோது, அவன் தன் மகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். மிக நிதானமாக. இது எவ்வளவு கீழ்த்தரமான வாழ்வும் ஒரு கணம் எழுந்து அடங்குவதைக் காட்டும் அகச்சித்திரம்.


கடைசியாக ஒரு கதையைப் பற்றி பார்ப்போம். இங்கே எல்லாக் கதைகளும் ஒரு மையமான கருத்தால் முடிச்சிட நான் விரும்பவில்லை. அதனால் ஒரு சில கதைகளின் அக ஒளியை மட்டும் சொல்கிறேன். இந்தக் கதை ’மஹமாயி..’  கதை மிகச் சிறியது. கதை இதுதான். சின்ன கிராமத்திலிருக்கும் அம்பாள் மஹமாயி கோவிலுக்கு போகத்திட்டமிடும் கிருஷ்ண பண்டாரமும், சார்லுவும் சக்தி வாய்ந்த மஹமாயியைப் பார்க்க ரயில்வே ஸ்டேஸன் போகின்றனர். சார்லுவுக்கு முதல் முறையாக இப்படி ஒரு இடத்திற்குப் போக வேண்டிய விருப்பம். சக்தி மிக்க மஹமாயியைப் பார்த்துவிட வேண்டி ஆவலாக இருக்கிறார். இவர்கள் ரயில் வருவதற்குள் ஒரு சரக்கு வண்டி வந்துவிடுகிறது. அதனால் இவர்கள் ஏறும் ரயில் எதிர் பிளாட்பாரத்திற்குத் திருப்பிவிடப்படுகிறது. இவர்கள் கூடவே புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியும் ரயிலேற காத்திருக்கிறது. அவளது மூக்குத்தியில் சூரிய ஒளிப்பட்டு ஜொலிக்கிறது. எல்லோரும் எதிர் பிளாட்பாரத்திற்கு ஓடுகின்றனர். அப்போது அங்கே இருக்கும் சப்பாணி, “அய்யய்யோ, எனக்கு உதவறதுக்கு யாருமில்லையே, மகமாயி.. என்ன பண்ணுவேன்.. ஒன்ன இந்த ஆடி வெள்ளிக்குப் பாத்தாகணுமினு ஆசைப்பட்டேனே” என்று கதறுகிறான். அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு அற்புதம் நடக்கிறது. அந்த சப்பணியை குழந்தைபோல வாரித்தூக்கிக் கொண்டு அந்த புதுமணப் பெண் ரயிலின் கடைசிப்பெட்டியில் உள்ளே தள்ளிவிட்டு தனது சுயநினைவுக்கு வந்தவளாகக் கணவன்மேல் சாய்ந்தாள். இதுவே போதும். கதை இங்கே முடிவதைல்லை. ஆனால் நாம் இங்கிருந்தே துவங்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் அத்தனையோ பேர் இருக்க, அந்தப் புது மணப்பெண் ஏன் இதைச் செய்ய வேண்டும்? இங்கேதான் அந்த உள்ளொளி பரவுகிறது. சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு மாய யதார்த்தக் கதைபோல இருக்கலாம். ஆனால் இதை உளவியல் ரீதியாகப் பார்க்கவே விட்டல்ராவ் இடமளிக்கிறார். கதையில் சில இடங்களில் அதற்கான திறவுகள் இருக்கத்தான் செய்கின்றன. புதுமணப் பெண்ணானவள் அப்போதுதான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், விடுதலை பெற்றிருக்கிறாள். அவளது மனம் புதிய உலகங்களை தரிசித்தபடி லயித்துக் கிடக்கிறது. தவிரவும் ஒரு வளர்ந்த ஆணைத் தன்னால் தாங்க முடியும் என்ற நிலைப்பாட்டிற்கும் வந்தவள், தனக்கான ஒரு கடமையாக அந்த சப்பாணியைக் குழந்தை போல தூக்கிக் கொண்டு ஓடியிருக்கலாம். அதுவும் தனது புது உலகின் ஒரு அங்கமாக அவளின் புரிதல் தொடங்கியிருக்கலாம். அன்னிய ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி கரைந்துபோகும் ஒரு மனநிலைதான் அந்தப் பெண்ணின் மணவாழ்க்கையாக இருக்கிறது. அல்லது எல்லா பெண்களுக்கும் ஆண்களுக்குமான ஒரு நிலையும் இதுதான். இங்கே ஒரு மாற்றுக் கருத்தாக்கமும் உண்டு. அவள் தான் பெறப்போகும் குழந்தையாகக் கூட அந்தச் சப்பாணியைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கலாம். ஆனால் அது வழக்கமாக குழந்தைகளைத் தூக்கும் பெண்களின் வடிந்த நிலை. எனவே முன்னதே, அதாவது அந்த மண வாழ்க்கையின் விடுதலையே அவளை அந்தச் செயலைச் செய்ய வைக்கிறது. அதை விட்டல்ராவ் ”அவள் சுய நினைவுக்கு வந்தவளாக சரீர ரீதியிலான அதிர்ச்சிக்கும் களைப்புக்கும் ஆளாகித் தன் கணவன்மேல் சாய்ந்தாள்” என்கிறார்.


விட்டல்ராவின் கதைகள் எந்தத் திருகும் இல்லாமல் நேரடியான நிகழ்வுகளை மட்டும் எழுதிச் செல்லும் இந்தத் தன்மையானது, வாசகனை மற்றொரு எல்லைக்கு இழுப்பதற்கே என்பதை ஒரு தேர்ந்த வாசகன் கண்டு கொண்டாக வேண்டும்.. 


அவரது கதைக் களம், நிகழ்வுகள், கதை நடக்கும் பிராந்தியப் பதிவுகள், கையாளும் தகவல்களின் துள்ளியத் தன்மை, இவையாவற்றையும் கருத்தில் கொண்டும், அது பெரும்பாலும் எல்லோராலும் கொண்டாடப்படுவதனால், வேறு ஒரு பார்வையில், அதாவது விட்டல்ராவ் தனது உள்ளுணர்வால் தனக்கேத் தெரியாமல் தன்னியல்பாக எழுதியிருந்தாலும், நாம் அவற்றைக் கண்டடைவது, கடமையாகிறது.


விட்டல்ராவின் எல்லா கதாபாத்திரங்களும் தெரிந்தோ, தெரியாமலோ மிக்க தன்னுணர்வடைந்தவர்கள். அதுவே கதைகளை ஜீவிதம் கொள்ளச் செய்கிறது. 


நன்றி

சாகிப்கிரான்.

(நன்றி - புத்தகப்படம் ஜி. குப்புசாமி அவர்கள், முகநூல்)

(2021, நவம்பரில் ' சிற்றில் ' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விட்டால்ராவின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Thursday, July 16, 2026

அகிராவின் கொள்ளையர்கள்

           

                   சில சமயங்களில், அபூர்வமாக பாபுவுடன் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமையும். பெரும்பாலும் பாபு படத்தின் வெளியீட்டு முதல் காட்சிக்கே சென்றுவிடுவதால் எனக்கு அது இயலாமல் போய்விடும்.

இரண்டாயிரங்களில் தூர்தர்ஷனில் இரண்டு மணிக்கு உலகப் படங்கள் போடுவார்கள். 

அப்போது  நாங்கள் ஒருவருக்கொருவர் எதோசையாக அக்கிரோகுருசோவாவின் ஒரு திரைப்படத்திற்கு கடிதம் போட்டுக்கொண்டோம்.

இருவருமே பார்த்துவிட்டோம். 

ஆனால் பல வருடங்களாகியும் அப்படம் பற்றி பெரிதாக எதையும் எந்தச் சந்திப்பிலும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதுமே நாங்களிருவரும் எந்த ஒன்றானாலும் அதுபற்றி உடனே பேசிக் கொள்வதுமில்லை, பெரும்பாலும். 

தக்க சமயம் வாய்க்கும்போது ஓரிரு வார்த்தைகளில் ஒட்டுமொத்த படைப்பைப் பற்றியுமான ஒரு மையக் கருத்தாகத்தான் அது இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு புரிதல் சில சமயங்களில் நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளும் ஒரே ஒரு பார்வையில்கூட நிகழ்வதுண்டு.

குரோசோவாவின் அந்தப் படம் ஒரு நகைச்சுவைப் படம்தான். நானும் குற்றாலம் தர்மராஜனும் சொல்லிச் சொல்லி சிரித்திருக்கிறோம்.

ஆனால் சமீபத்தில் சாக்ரட்டீஸ் ஸ்டுடியோவில் பேராசிரியர் முரளி அவர்கள் வெகுஜனவியம் பற்றிய ஒரு உரையாடலில் பேராசிரியர் தர்மராஜ் நினைவுபடுத்திய ஒன்று எனக்கு சட்டென பாபுவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் ஒரு ஆற்றாமையை உண்டாக்கியது. அவன் இல்லாமல் போனாலும் அவன் பொருட்டான ஒன்று இருந்து கொண்டிருப்பது அந்த ஒன்றை மேலும் தீவிரப்படுத்தவதாகவே இருக்கிறது.

பேரா. தர்மராஜன் குறிப்பிடுவது இதுதான். 

தமிழில் நிகண்டுகள்தான் அதிகம் உண்டே அன்றி, அகராதி என்ற ஒரு கருத்தாகமே இல்லை என்கிறார். பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே வீரமா முனிவரால் தமிழுக்கு அகராதி உருவாகிறது. ஒரு மொழியில் அதன் சொந்த சொற்களுக்கான அகராதி என்பது அவசியமற்றது. பிற மொழியிலிருந்தோ அல்லது பிற மொழிக்கு செல்லும்போதுதான் வேர்  சொற்களுக்கோ அல்லது அனைத்து சொற்களுக்குமான அகராதியின் தேவை உண்டாகிறது.

பூர்வீகம் இயல்பானது. அதற்கான எந்த விளக்கமும் தேவையில்லாதது.

அகிராவின் அந்தப் படத்தில் ஒரு வீட்டில் திருட இரண்டு திருடர்கள் வருகின்றனர். அவர்களுக்கு அந்த வீட்டில் மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது. அதாவது வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் பெயர் எழுதிய ஒரு குறிப்பு இருக்கிறது. அதாவது திருடிய பிறகு வெளியேறுவதற்கான பாதையும் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. 

இது அவர்களுக்கு உள்ளார்ந்த அளப்பறிய நகைப்பை உருவாக்கும் ஒன்றாக இருந்தாலும் அகிரா அந்த வீட்டின் அத்தனையையும் அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தவே அப்படி அதற்கான குறிப்பை விட்டுச் செல்கிறார். ஏனென்றால் அது அவர்களுடையதானால் அதற்கு ஒரு குறிப்போ அடையாளமோ தேவையில்லை அல்லவா?

ஒன்றை புரிந்து கொள்ள, அல்லது அப்படி ஒரு அற்புத சாத்தியத்தை அடைய  ஒருவனுக்கு கால்நூற்றாண்டு தேவைப்படுகிறது.

ஆனால் இன்று அரசியலில் நடப்பது வெறும் முட்டிகளில் நடந்துவிட்டால் போதும் என்ற புரிதலுக்கு வந்திருக்கும் மனித சாரத்தை புரிந்து கொள்ள நமக்குத்தான் இன்னும் கால் நூற்றாண்டு தேவையென நினைக்கிறேன்.

பாபு எப்போதுமே திமுகவிற்கு ஆதரவளித்ததில்லை. என் அம்மாவும் பாபுவும் அஇஅதிமுக மட்டுமே. இன்று இருவரும் இல்லை. அப்படி ஒரு கட்சியும் இல்லாமல் போனது சற்று விசித்திரம்தான். 

பாபுவின் பிறந்த நாளில் மானசீகமாக அவனிடம் நான் சொல்லிக் கொள்ள முன்னது பெருத்த மெளனத்தையும் பின்னது அதிர்ச்சியையும் உண்டாக்கினால் உருவாகும்  வேதனை மட்டுமே என்னால் இங்கே கடத்த முடிகிறது என்று நினைக்கிறேன்.

21-04-2026.

இன்று பாபுவின் பிறந்த நாள். 

(அகிராவின் படம் எது என்றோ கால் நூற்றாண்டுக்கு முன் நாங்கள் பார்த்த அந்தப் படத்தின் கதை சுருக்கத்தையோ AI கொண்டு தேடாத மனநிலைக்கு வந்துவிட்ட அந்த நினைவின் சொற்பமே அற்புதமானது என்று நினைக்கிறேன். அவன் நினைப்பைப்போல)

Tuesday, July 7, 2026

Disclaimer மனோநிலை

 Disclaimer மனோநிலை 

++++++++++++++++++++++


                முக்கியமான ஒன்றைச் சொல்ல வரும்போது மிகக் குறைந்த விபரங்கள்தான் இருக்க வேண்டும்.

' A Seperation ' என்றொரு இரானிய திரைப்படம் 2011 ல் வந்தது. மறதி நோயால் பாதிக்கப்பட்ட தன் தந்தையை பிரிய மனமில்லாத அந்த மகன் அவருடனே தங்கிவிடுகிறார். அப்படி இருக்கையில் தந்தையை வெற்றுடம்புடன் குளிக்க வைப்பார். எந்த நினைவும் இல்லாத தனது தந்தையை அப்படி பார்க்கும்போது மனமுடைந்து அழும் அந்தக் காட்சி behind the screen ஆக எடுத்தபோது ஒளிப்பதிவாளர், கேமராவை நகர்த்திவிட்டு ஒருகணம் கண்களைத் துடைத்துக் கொள்வார். அந்தக் குழுவே மன அழுத்தத்திற்கு உள்ளாகும்,  இன்னும் சொல்லப்போனால் மகனாக நடித்தவர் மிகுந்த அழுத்தத்திற்கு சென்றுவிடுவார். குறிப்பாக அப்படி ஒரு காட்சியால் உந்தப்பட்டே, அதன் இயக்குநர் அதற்கான முழு திரைக் கதையையும் வடிவமைத்தாக குறிப்புகள் சொல்கின்றன.

எந்த பின்னணி இசையும் பெரிதாக அந்தக் காட்சியில் இருக்காது.

இந்த படம்தான் ஆஸ்கார் விருது வாங்கிய ஆங்கிலமல்லாத முதல் இரானிய பிற மொழி படம்.

இதேபோல பி. வாசு தனது படமொன்றில் (1992) ஒரு காட்சி வைத்திருப்பார். ஆனால் அந்தக் காட்சி ஒரு பாடலாக, அதனுள் ஒரு சிறு துண்டாகத்தான் இருக்கும்.

முக்கியமாக அந்தப் பாடலை படத்தில் வைப்பதற்கே மறுப்புத் தெரிவித்த கதாநாயகனை மிகவும் சிரமப்பட்டுத்தான் சம்மதிக்க வைத்திருந்தனர்.

ஆனால் அந்தப் பாடல் ஓர் அடையாளமாக மாறியது மட்டுமில்லாமல், 90 களில் நான் பணி புரிந்த நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு என்னிடம் பேசியது இன்னும் நினைவிலிருக்கிறது. அப்போது அவருக்கு 20 வயதிற்குள்தான் இருக்கும். அவர் தீவிர இரசிகரானதும் அந்தப் படத்திற்குப் பிறகுதான்.

ஆனால் அதற்குப் பிறகு 1994ல் ஒரு படம் வருகிறது. அது தொடர்ந்து பெண் குழந்தைகளாகப் பிறக்கும் சிசுக்களுக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் ஒரு முக்கியமான விஷயத்தை பேசுவதாக இருந்தது.

அதில் அப்படி கொல்லச் சொல்லும் பாத்திரத்தில் இதுபோன்ற இழி செயல்களுக்கு எதிரான கருத்தியல் கொண்ட முற்போக்கு சிந்தனையாளரான பெரியார்தாசன் நடித்திருப்பார்.

அப்படி கொல்லும் வாய்ப்பிலிருந்து தப்பிய அவரது பெண்ணும், பெண்ணும் பக்கவாதத்தால் முடங்கிக் கிடக்கும் அவருக்கு பணிவிடைகள் செய்யும் விதமாக தென்னந்தட்டி தடுப்புக்குள் குளிக்க வைப்பார்கள். (என்னுடைய நினைவு அப்படித்தான் இருக்கிறது) அந்தத் தட்டிகளை விலக்கி வேடிக்கைப் பார்க்கும் பெண் குழந்தைகளை விரட்டுவார்கள். அப்போது அந்தக் குழந்தைகள் தங்களின் எதிர் வினையாக ஒன்றைச் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓடுவார்கள்.

அது, ' அய்ய, அம்மணக்குண்டி '

இது படத்தில் மிகச் சாதாரணமாக நடந்துவிடும் ஒரு காட்சியாக பார்வையாளன் கடந்துவிடுவான். அல்லது களுக் என்று ஒரு சிரிப்புகூட தோன்றிவிடக்கூடும். ஆனால் இது அந்த ஈரானிய படத்தைவிட பல மடங்கு அழுத்தம் வாய்ந்ததாகவும் நினைத்து பார்க்க முடியாத பரிமாணங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

ஈரானிய படத்தில் அது மனித வாழ்வின் அபத்தத்தையும் மனிதத் தன்மையைக் குன்ற செய்யும் மனித நாகரிக வளர்ச்சியின் தேவைகளையும் அதன் நீட்சியாக உண்டாகும் பொறுப்பு துறப்பு மனோபாவத்தின் நியாயங்களையும் அதற்கு எதிரான தீவிர மனித நேய செயல்பாடுகளைக் கொண்டிருப்பதன் இழப்புகளையும் பேசுகிறது. 

தவிரவும் அப்படி இருக்கும் தன்மையினால் அவர்கள் தங்களையே சிதைத்துக் கொண்டாக வேண்டியவர்களாகவும் தனது மன சாட்சி குறித்த அதீத பிரக்ஞை உள்ளவர்களாகவும் மேலும் இந்த சமூகமும் இயற்கையும் ' தேவை ' கருதும் தன்மையை சகிக்காத, அதே சமயம் இந்த இயற்கைக்கே எதிராகக் களத்தில் இறங்கி, தங்களை மாய்த்துக் கொள்வதன் மூலம் அத்தகைய பொறுப்பு துறப்பின் கொடூரத்தை மையப்படுத்தி சமூகத்தைக் கவனத் திருப்பாலுக்கு உள்ளாகின்றனர்.

ஆனால்

இந்தப் பெண்கள், தங்கள் இனத்திற்கே துரோகம் செய்த ஓர் ஆணைக் குளிக்க வைக்கின்றனர். அவர்கள் அந்த ஆணையும் தங்கள் குழந்தையாகத்தான் பார்க்கின்றனர். அதனால்தான் அந்த அம்மணம். எந்த பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்றாரோ அவரைக் கொல்லாமல் குளிக்க வைப்பதை வேடிக்கை பார்ப்பது அப்படி தப்பிவிட்ட அல்லது அந்த நிலைமாறிய ஒரு காலகட்டத்தின் குறியீடுதான் வேடிக்கை பார்க்கும் அத்தனைக் குழந்தைகளும்.

கள்ளிப்பாலிலிருந்து தப்பிக்கும் குழந்தை மருத்துவராவது ஓர் அசாத்திய கணிப்பு.

அதுவும் குளியல் என்பது ஒரு சரணாகதி. குளிக்க வைப்பார் முன்னால் அமர்ந்திருக்கும் குளிப்பவர் 

பௌதிக ரீதியாகவும் தான் கொண்ட கொள்கையளவிலும் தோற்றுப்போனவர். அல்லது அந்த நிலையின் ஒரு படிநிலை. அதுவும் எதிர் பாலினம் சார்ந்து அது இன்னும் வலுவடைகிறது.

இயக்குநர், இந்த அம்மணத்தை நேரடியாகக் காட்டியிருந்தால் முகச்சுழிப்புதான் சாத்தியம். ஆனால் அந்தத் தட்டிகளுக்குப் பின்னால் ஏதுமில்லாமலும் இருந்திருக்கலாம். எட்டிப்பார்க்கும் குழந்தைகள் மட்டுமே அந்த அபூர்வ தருணத்தை நமக்குக் கடத்துகின்றன. இதுவே கனவுத் தொழிற்சாலையின் தீரம். தீரம் மிக்கவனே உண்மையான படைப்பாளி.

அல்லது இது ஓர் இட்டுக்கட்டல் என்ற நிலையில்கூட இதை வாசிக்கும் எதிர் மனநிலையாளர் நினைக்கக்கூடும்.

ஆனால், எப்படி ஒரு கிராமத்துச் சிறுவன், மழை பெய்த காலையில் சாலையைக் கடந்த ஒரு பேருந்தின் டீசல் சொட்டில் ஒளிரும் வண்ணங்களை, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறாக, ஒளி என்பது பல நிறங்களின் கூட்டு என்பதையும், அதுவே கிழக்கும் மேற்கும் சிவந்து கிடப்பதையும் அண்ணாந்த வானம் நீலமாயிருப்பதையும் தொடர்புபடுத்திக் கொண்டானோ, அவனே இதை எழுதவும் வாசிக்கவும் இயன்றவனகிறான்.

உங்களுக்கு இப்போது அந்தப் பாடலில் வரும் அபிஷேகம் எத்தகைய தட்டையான, சம்பிரதாயமான ஒன்று என்றும் அதற்கும் தீவிர கலைச் செயல்பாடுக்குமான தொடர்பும் புரியும்.

ஒரு படைப்பில் நாம் எவ்வளவு ஏமாந்து போகிறோம் என்பதே அதன் தீவிர கலைத் தன்மையை நிர்ணயிக்கிறது. 

இந்த பொறுப்புத் துறப்பு என்பதைப் பேச சில சமயங்களில் ஒரு மனநிலை வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது தகுதி வேண்டும் என்றும் சொல்லலாம். 

' கடைசியல எல்லோரும் விட்டுட்டு போய்ட்டீங்க இல்ல '

இந்த ஆதங்கத்திற்கு கேவலமான எதிர்வினைகள் சமூக ஊடகங்கள் எங்கும் இருந்தது. ஆனால் இது இந்த ஊடகக்காரர்களால் வந்தது என்று ஒரு தரப்பும் இருக்கத்தான் செய்தது.

இல்லை.

இந்த பொறுப்பு துறப்பு மனோபாவத்தின் மேல் விழுந்த சாட்டையடிதான் இது.  அதனால்தான் சுடுகிறது.

ஏனென்றால் எனக்கு மூன்று சகோதரிகள். ஆனால் ஏழு வருடங்களாக A Seperation படத்தைப்போல என் அம்மாவை பார்த்துக்கொண்டேன். அதுவும் குனிந்திருக்கும் அந்த பழுத்த முதுகை தண்ணீர்விட்டு கழுவும்போது அடைந்த விமல் யாருக்கும் தெரியாது. எதிர் பாலினத்தை எதிர் கொள்வதில் இருக்கும் சிக்கல் சாதாரணமானதில்லை. 

அந்தப் படத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னால் ஓர் உரையாடல் நடக்கும்.

தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தை முன்னிட்டு தனது தந்தையை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல மறுக்கும் தான் கணவனிடம் விவகாரத்து கேட்கும் மனைவி,

' மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் தந்தையை விட்டுவிட்டு இவர் வர மறுக்கிறார். அதுவும் இவர் யார் என்றே அவருக்குத் தெரியவில்லை ' என்பார்.

' ஆனால் எனக்குத் தெரிகிறதே? அவர் என் தந்தை ' என்பார்.

அதேபோல, மனோஜ் இருந்திருந்தால்? என்ற ஒரு தரப்பும் இருக்கிறது. இது மீண்டும் கள்ளிப்பால் விவகாரத்தில்தான் முடியும். 

இங்கே பாலினம் சார்ந்த ஒரு தப்பித்தாலும் நடக்கிறது. இதற்கான சமூக மாற்றம் மிக முக்கியம். மனித வாழ்வின் ஒவ்வொரு இருத்தலுக்கான தார்மீக உணர்வை தக்கவைப்பதே உண்மையான நாகரிக சமுதாயத்திற்கான அடையாளமும் கடமையும்.

நாம் ' எஸ்தர் ' கதையை இங்கே குழப்பிக் கொள்ளக்கூடாது. அதில் இருக்கும் கொடூரம் எது சார்ந்தது என்பதன் புரிதல் வேண்டும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. லீனாவின் ' வெள்ளை வேன் அறிக்கை ' ஆவணப்பட திரையிடலுக்கு சென்றபோதுதான் அவரை மிக நெருக்கமாகப் பார்த்தேன். சட்டென திரும்பிப் பார்க்கையில் எனக்கு நேர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஏனோ தெரியவில்லை, சட்டென சாய்ந்தார்போல் உட்கார்ந்து எனது பார்வையைத் தவிர்த்தார். 

ஒருமுறை வே. பாபு த மு எ க ச மாநாட்டிற்கு சென்றிருந்தபோது, மண்டபத்தின் மாநாட்டு திடலில் மிக நள்ளிரவில் எண்ணிரந்த நாற்காலிகள் நடுவில் தன்னந்தனியாக பாலுமகேந்திரா அமர்ந்திருந்திருக்கிறார். கழிவறை சென்ற பாபு, திடுக்கிட்டு, அங்கேயே நின்றுவிட்டான்.

மணிக்கணக்காக அவன் அந்த மறைவிலிருந்து அவரை பார்த்தபடி இருந்திருக்கிறான். 

இந்தப் பகிர்தலின்போது, யாரோ ஒரு நண்பர், ' பேசியிருக்கலமல்லவா? ' என்று கேட்டார்.

பதிலேதும் சொல்லாத பாபு, என்னைப் பார்த்தான். 

ஏனென்றே தெரியவில்லை, அவரின் மறைவு மிகுந்த அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது. 

இன்று கணினி உலகம் செயற்கை நுண்ணுணர்வு நிலையை அடைந்திருக்கும் நிலையில், எனக்கு C கணினி மொழியை உருவாக்கிய டென்னி ரிச்சி நினைவுக்கு வருகிறார். அவர் தனது அறையில் செத்து கிடந்ததும்,  குர்ஜிப்பை தனது புத்தகத்தின் மூலம் உலகறிய செய்த கணித அறிஞர் உஸ்பெஸ்கி தொடர்ந்து குடித்து, தனது அறையில் செத்து கிடந்ததும் நமக்கு ஏதோ சொல்கிறது.

மாபெரும் அறிஞர்களும் சிந்தனையாளர்களும் அப்பழுக்கற்வர்கள் இல்லைதான்.

அத்தகைய அழுக்கிலிருந்தே அவர்களின் படைப்பும் உருவாகிறது.

ஆனால் அவர்களின் படைப்புகள் எப்போதும் இந்த மனித குலத்திற்கானது அல்லது இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கானதே.

Sunday, May 31, 2026

அலோகாவும் Project Heil Mary-யும்

 

                


       எதோசையாக அலோகாவின் காணொளி ஒன்றைப் பார்த்தேன். 

உலக அமைதிக்கான புத்த பிக்குகளின் நடை பயணத்தில் கொல்கத்தாவின் தெரு நாயொன்று இணைந்து கொண்டது உலகம் முழுவதும் இந்த நடை பயணத்திற்கான கவனத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டு சென்றிருக்கிறது.

அந்தக் காணொளி, அப்படி செல்லும் ஒரு நாள் பயணத்தில், சாலையை ஒட்டி இருக்கும் மைதானத்தில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கும் சில நாய்களைப் பார்த்ததும் அலோகா நின்று விடுகிறது. கண நேரம்தான். நடை பயணக் குழு தொடர்ந்து சென்று கொண்டிருக்க, அலோகா தீர்க்கமான ஒரு முடிவுடன் சிறிய துள்ளலுடன் மீண்டும் குழுவுடன் இணைந்து கொள்கிறது.

புத்த பிக்குகளின் தலைவரான தலாய் லாமா, மக்கள் சந்திப்பில் தன்னை நெருங்கிக் காண வரும் ஒரு சிறுவனை வாழ்த்தியனுப்பாமல் தனது நாக்கை நீட்டி சப்புமாறு சிரித்தார் என்றோ, உற்சாகமான மைதான விளையாட்டின் சந்தோஷம் பற்றியோ, எதற்கும் அது துலா கோலைப் பிடிக்காமல் கீழ்மைகளிலிருந்து மேன்மையான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சாதாரணமானதல்ல. அதே சமயம் அது அன்றாடவொரு நிகழ்வுமல்ல. 

அப்படித்தான் சி. மணியுடன் குப்பை மண்டிய சாக்கடை வீச்சம் உள்ள அந்தத் திண்ணையில் அமர்ந்து கொண்டு இதைக் கேட்டேன்.

சேலம் அம்மாபேட்டை வழக்கமாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. தொண்ணூறுகளில் இவ்வளவு இரு சக்கர வாகனங்கள் இல்லை. எல்லோரும் நடைதான்.

அங்கே பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் ஓயாமல் பேசியபடியேதான் கடப்பார்கள். கூர்ந்து கேட்டால் ஒன்றுமே இல்லாத ஒன்றாக இருக்கும். எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறார்கள்?

" அதை முடிவு செய்வதுதான் ஒரு மனிதனின் ' சாரம் ' என்றார். 

இன்று அதை அனைத்து உயிர்களுக்கும் நாம் பொருத்திக் கொள்ளலாம் போல.

ஆனால் விஷயம் இதுவல்ல.

எனக்கு நவீன இலக்கிய பரப்பு விரிந்தது சுபமங்களாவுக்கு பிறகுதான். தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதன் மேல் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அதில்தான் ஜெயமோகனின் ' ஜெகன் மித்யை ' வந்தது.

சமீபத்தில் கோமல் சைவராக இருந்தாலும் வைணவத்தின் மேல் (வைணவ இலக்கியங்களின் மேல்) பெரு விருப்பம் இருந்ததாகவும் ஆனால் அவர் முற்போக்கு எழுத்தாளராக இருந்ததால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனவும் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். எனக்கு பெரிய அதிர்ச்சியாகவும் கோமல் என்னிடமிருந்து விலகி செல்வதாகவும் உணர்ந்தேன். 

அதுவும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு செயலிழந்த பின்பே சுபமங்களா ஆரம்பித்தார், அதன் பிறகு நாடகம் போடுவதை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் சுபமங்களாவுக்கு பிறகு சேலம் நேரு கலையரங்கில் அவரது நாடகம் ஒன்று நடந்தது. அதற்கு நான் போயிருக்கிறேன். அவரிடம் பேசியும் இருக்கிறேன். நல்ல உற்சாகமாகத்தான் இருந்தார். அவரும் ஒரு கதாபாத்திரத்தில் வந்துபோனார்.

அம்மாவும் அப்பாவும் நமக்குப் போதும். அவர்கள் உடலுறவு கொண்டுதான் நம்மை பெற்றார்கள் என்ற தகவல் தேவையில்லாத ஒன்று. அது தெரிந்தாலும் நாம் அதைக் கருதுவதில்லை.

ஆரம்பக் காலங்களில் ஊட்டியில் நடக்கும் ஜெயமோகன் நிகழ்வுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அவர் அதிகம் பேசமாட்டார். அவரது முறை வரும்வரை ஆழ்ந்து நகம் கடித்தபடி இருப்பார். ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான் பேசுவார்.

அப்படி என்றால் ஒருவரின் சாரம் தன்னை எப்படி மாற்றிக் கொள்ளக்கூடும் என்று என்னால் சி. மணியிடம் மீண்டும் கேட்டு தெளிவடைய முடியாது. 

ஏனென்றால் இன்று அவரது நினைவு நாள். 

ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நானே தெளிவாகிக் கொண்டது என்னவென்றால், 

எப்போதுமே ஒரு நிகழ்வின் அல்லது ஒரு விஷயத்தின் எதிர்மறை தன்மையே அதை பேசு பொருளாக்கிறது. அலோகா போல. 

ஆனால் அதன் ஆரோக்கியமான தேவையை அறிந்து கொள்வதே மெய்யறிவு.

(Heil Mary என்ற பதம் இப்போது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் Project Heil Mary தற்படம்.)

Thursday, January 22, 2026

புத்தம் புது ஆண்டு...

 


காலம்தோரும் ஓர் இரட்டை நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்மாவும் நானும் எம் ஜி ஆர் சிவாஜி என்று மல்லுக்கு நின்றிருந்தபோது நானும் துரையும் ரஜினி கமல் என்றும் மோதிக் கொண்டோம்.

அப்போது கல்லூரிக் காலம்.

1988, கமலின் 'சத்யா' வந்திருந்தது.

அதே வருடத்தில் ரஜினியின் குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கொடி பறக்குது ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோன் என்று அவரது ' ஸ்டைலை' நிலைநாட்டி இருந்தனர்.

விவாதமே இருவரின் ஸ்டைலின் ஒப்பீட்டிலிருந்துதான் ஆரம்பித்தது.

ரஜினியின் முன்னால் தனது தோற்றுப்போன பரிதாபமான பாவனைகளை கமல் தனது  ரசிகர்களுக்கு காட்டி தனது ஸ்டைல் என்று நம்ப வைப்பதாக கேலி செய்ய ஆரம்பித்தான்.

குறிப்பாக சத்யாவில், நயவஞ்சக அரசியல்வாதி கிட்டி, கமலை ஏமாற்றி தனது அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்திக் கொள்வதை கமல் தெரிந்து கொண்டு போராடும்போது அவரை அடித்து துவைத்து அரை உயிராக முள்வேலியில் தூக்கி வீசிவிடுகின்றனர், கிட்டி ஆட்கள்.

இந்த படம், 'அர்ஜுன்' என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும் அதை நாங்கள் பார்க்கவில்லை. அதிலும் இப்படியெல்லாம் இருக்குமா என்பதும் எங்களுக்கு அப்போது தெரியாது.

குடும்பத்தால் காப்பாற்றப்பட்டு மீண்டும் அந்த அரசியல்வாதிகளை பழிவாங்க புறப்படும் கமல், கண்ணாடி முன்னால் தனது மொட்டையடித்து கொஞ்சமாக வளர்ந்த தாடி மீசையோடு கம்பீரமாக ' சட்டை ' போடுவதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதிலும் சிறப்பு, அந்தக் காப்பை தனது கையில் போட்டுக் கொள்வது.

இதுதான் இங்கே தோற்றுப்போன ஸ்டைல் என்று துரை நக்கலடித்தான்.

மற்றொரு விஷயம், அப்போதுதான் நாயகனுக்காக மொட்டை அடித்திருப்பார் கமல். அதன் அடுத்தக் கட்டத்தை தனது அடுத்த படத்தில் பயன்படுத்தியிருப்பது எனக்கு ஒவ்வொரு தொடர்ச்சியையும் பயன்பாடுள்ளதாக்கும் விஷயம் பெரிய திறப்பாக இருந்தது.

குறிப்பாக சட்டை என்பதே மேற்கத்திய வரவுதான். அதுவும் உயர்குடிக்கான ஒரு அம்சம்.

அதில் பட்டன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுவிதமாக அமைத்திருப்பார்கள். ஆண்கள் அவர்களாகவே சட்டை போட இடப்பக்கமாகவும் பெண்கள் அவர்களது தாதிகள் போடுவதால் வலப்பக்கமாகவும் அமைத்திருப்பார்கள்.

அதுவும் சட்டைக்கான பட்டனை ஒருவர் தனக்குத்தானே மேலிருந்து போடுவது எப்போதும் நமது பார்வைக் கோணம் தப்பி, தவறான பட்டனில் தொடங்கி ஏறுமாராக சட்டை நிற்கும்.

அதனால் கீழிருந்து போடுவது இந்தத் தவறு நடக்காமல் தடுக்கும்.

கமலும் இந்தக் காட்சியில் கீழிருந்தே போடுவதாகக் காட்சி இருக்கும்.

அதாவது அவர் மூலமாக நடந்த அந்த தவறை சரி செய்வதாக, அதற்காக புறப்படுவதாகவும் அந்த நுணுக்கத்தை ஒரு மாஸ் ஹீரோவுக்கான காட்சியாக ரஜினி போன்ற ‌‌ஸ்டைலிஸ் ரசிகர்களின் மனநிலைக்கு மாற்றியிருந்தார்கள்.

இதையே துரை கிண்டல் செய்தான்.

மூல இழையின் சாரத்தை ஒரு படம் கொண்டிருக்கும்போது அது எவ்வாறு ஆழ்ந்த மனத்தாக்கத்தை பார்வையாளன் அறியாமலே கடத்திவிடக்கூடும் என்று விளக்கினேன்.

ஆனால் அவன் சிரித்தான்.

எனக்குள்ளாகவே நானும் சிரித்துக் கொண்டேன்.

ஸ்டைலாக இருந்தாலும் அது எவ்வாறு இருக்க வேண்டுமென்ற தெளிவு எனக்கு அப்போது உண்டானது.

அது திரைப்படமாக இருந்தாலும் கவிதையாக, கதையாக எதுவானாலும் ஒரு பொதிக்குள் அடைக்கும் சகலமும் அந்தப் பொதியின்  கட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் இப்படி யோசிக்க வேண்டுமா என்று அப்போது எனக்குத் தெரியாவிட்டாலும் வீம்புக்காகவேணும் இது அப்படி நடந்துவிட்டது என்றே இப்போது தோன்றுகிறது.

இங்கே கமலை உயர்த்துவது எனது நோக்கமல்ல. ஆனால் உயர்ந்த ஒன்றின் அடையாளம் காணுவதே, இது.

இந்தப் புத்தாண்டிலாவது நமது சட்டையை ஒழுங்காக போட்டுக் கொள்வோம். அரசியலும் அரசியலாக்கப்பட்ட அனைத்துமே இரண்டாவது வாய்பிற்காகக் காத்திருக்கின்றன.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2026

Wednesday, January 21, 2026

THE COURAGE TO BE DISLIKED

 

THE COURAGE TO BE DISLIKED 

சீனிவாச ராமானுஜத்தின் பேட்டி என்று சொல்ல முடியாத ஓர் உரை அல்லது கருத்து பகிர்வு காணொளியை தன்னறம் வெளியிட்டு இருக்கிறது.

அது மிக முக்கியமான ஒன்று. 

PENOMIENOLOGY என்ற தத்துவத்தின் ALGORITHM எப்படி புதிய சிந்தனை வெளியையும் மனிதனுடைய தர்க்கத்தின் பலஹீனத்தையும் போகிற போக்கில் நொறுக்கித் தள்ளுவதாக இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மிக எளிமையாக இதை நமக்குச் சொல்லிவிடுகிறார். காந்தியை புரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் அம்பேத்கரின் வழியாகத்தான் அது நிகழும் என்கிறார். அதேபோல அம்பேத்கரையும் காந்தியின் வழியாகத்தான் புரிந்து கொள்ள முடியும். எதிரிடைகளின் செயல்பாடுகள்தான் உண்மையான புரிதலையும் சாந்தியையும் கொடுக்கக்கூடும். 

இயற்பியலில் துகள் கொள்கையும் அலைக் கொள்கையும் வேறுவேறு அல்ல என்பதே குவாண்டம் கொள்கை. இரண்டும்தான் நிகழ்கிறது என்ற புரிதலுக்கு வரும்போதுதான் இயற்கையின் மர்மங்கள் என்று சொல்லப்படுபவை அதன் புதிர் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட(!) இயங்கு நிலைகளை கையாளமுடிகிறது. அந்தக் காணொளியின் இறுதி என்பது அசாத்தியமானது. ஏனென்றால் அது அந்த காணொளிக்கே முரணானதுதான். 

ஆனால் இங்கே எதிரிடைகள், இணையானவை என்று எல்லாவற்றையும் இல்லாமலாக்குவதிலேயே ஒன்று தனது நிலையை நிரந்தரம் ஆக்கிக் கொள்ள முயலுகிறது.

நிற்க.

அப்போதெல்லாம் எனக்குக் கோவில் சேலம் சங்கீத் தியேட்டர்தான்.

எண்பது , தொண்ணூறுகளில் ஆங்கில படங்களை அங்கேதான் பார்த்தேன். குறிப்பாக இடைவேளையில் வருகிற படங்களுக்கான முன்னோட்டம் போடுவார்கள். அப்படி பார்த்த ஒன்றுதான் 1992ல் 'டிராகுலா'. வழக்கமான ஒன்றாக அது இல்லை.

அதில் டிராகுலா ஒரு சிறிய கத்தியை நாக்கருகே வைத்துக்கொண்டு ஒரு இடுங்கிய சிரிப்பு சிரிக்கும். அது என்னை விசித்திர மனநிலைக்குக் கொண்டு சென்றது என்றாலும் எண்பதுகளிலேயே மைக்கேல் ஜாக்சன் தனது Thriller பாடலின் இறுதியில் வெடித்த சிரிப்பொன்றை வைத்திருப்பார். இதன் பாதிப்பிலேயே Dracula வில் அந்தச் சிரிப்பும் உருவாகியிருக்கலாம்.

ஆனால் இரண்டும் ஒன்றல்ல. 

Thriller சிரிப்பு நிறவெறிக்கும் அதன் மூலம் அடையும் Mortality - க்குமானது. Dracula சிரிப்பு Mortality - க்கும் வஞ்சகத்திற்கும் ஏன், அதன் குற்றவுணர்வுக்குமான ஒரு அழுத்தமான சிரிப்பாக்கக்கூட சொல்லலாம்.

இங்கே வேறு விஷயத்திற்கு வருவோம்.

Missed Movies என்ற காணொளி வலைத்தளம் ஒரு வருடத்திற்கு முன்பே சீனிவாச ராமானுஜத்தின் இரண்டு பேட்டிகளைப் போட்டிருக்கிறது. அது மிகக் கவனமாக கேள்வி கேட்கப்பட்டு மிக கவனமாக நெறிப்படுத்தபட்டிருந்தது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசியல், அறிவியியல், கலை இலக்கியம், தத்துவம் என்று சகலத்தையும் அதன் எதிரிடைகளைக் கொண்டு புதிய திறப்பைக் காட்டியிருக்கிறது.

இந்த பேட்டியினிடையே ஒருமுறை சீனிவாச ராமானுஜம் சிரிக்கிறார்.

ஆனால் தன்னறம் காணொளியில் இடையிடையே அடிக்கடி தேவையில்லாத ஒன்றாக அல்லது எடிட் செய்திருக்க வேண்டிய ஒன்றாக அந்தச் சிரிப்பு நமக்கு தோன்றினாலும் இறுதியாக அவர் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, மேற்சொன்ன இரண்டு சிரிப்புகளைப்போல அந்தக் காணொளி முடிந்துபோகிறது. அதேபோல மிக அதிக அழுத்தத்தையும் அது அடைந்துவிடுகிறது. 

இந்த இடம்தான் ஏன் தன்னறம் அந்த சிரிப்புகளை காணொளி முழுக்க அனுமதித்தனர் என்பதற்கான தீவிர எண்ணம் புரிகிறது. 

மேலும் மேற்சொன்ன இரண்டு சிரிப்புகளைப்போல இல்லாமல் இது குழந்தையின் சிரிப்பைப்போல மிக அதிக திறம் வாய்ந்ததாக, யாராலும் புறந்தள்ள முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. 

நாமும் சிரித்தே ஆகவேண்டும். 

அது 'குணா' வில் குண்டடிப்பட்டு கடைசியில் குணாவின் மடியில் உயிர்விடும் 'அபிராமி' யின் ஒருகண சிரிப்பாகத்தான் இருக்கக்கூடும்.

அடுத்து, 

நேற்று 2026 சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டிற்கு ஒருவரும் வராததால்  

'தழல்' கிருஷ்ணமூர்த்தி (யாவரும் இணைய இதழாசிரியர்) மிகுந்த மனவேதனையுடன் தனது முகநூல் பக்கத்தில் அதைப் பகிர்ந்திருந்தார்.

ஓரளவுக்கேனும் மேற்சொன்ன சீனிவாச ராமானுஜத்தின் பேட்டியில் இதற்கான மன வலு நம்மெல்லொருக்கும் கிடைக்கக்கூடும்.

இது நம்மை வேறுவொரு இடத்திற்குக் கூட்டிச் சொல்வதை தவிர்க்கவும் முடிவதில்லை.

இப்போதெல்லாம் காணொளிகளில் Podcast என்பது மிகுந்துவிட்டது. குறிப்பாக தன்னம்பிக்கை சார்ந்தவைகளில் 'கிருஷ்ணா' வின் Karkakasadara காணொளிகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

அதில் ஒன்றுதான், 'The Courage to be Disliked' பற்றிய Book summary.

ஜப்பானிய அட்லேரியன் தத்துவ எழுத்தாளரான Fumitake Koga ன் பிரபல நூல் இது. இதைப்பற்றி ஓரிரு வரிகளில் சொல்ல வேண்டுமானால், 

1. பிராய்ட் - ஒரு மனிதனின் கடந்த காலமே அவனை வழிநடத்துகிறது.

2.  யூங் - நமது ஆழ்மனமே எல்லாமுமாக இருக்கிறது.

3.  அட்லர் - நீயே தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருக்கிறாய்.

ஆனால் இந்த புத்தக அறிமுகத்தில் ஏதோ ஒரு மூலையில் மட்டுமே இந்த, 'விரும்பப்படாதிருக்க கொள்ளும் தைரியம்' இருக்கிறது. 

ஆனால் jonathan Haidt ன் ' Anxious Generation' புத்தக அறிமுகம் மிக முக்கியமானதாக இருக்கிறது. 

ஒரு காணொளியில் கிருஷ்ணாவே சொல்வதைப்போல ஒரு கட்டத்தில் அவர் தேடிப்போடும் புத்தகங்கள் அதிக விருப்பங்களையும் வெகுசன தீனியாகவும் இல்லாமல் ஆனால் மிக முக்கியமான ஒன்றை பேசுவதாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வந்ததே அவர் காணொளி போடுவதற்காக படித்த நூல்கள்தான் என்றால் அது எவ்வளவு மேன்மையானது? இந்த தைரியத்தைப்போல?

நண்பர்களே, சிரிப்பு என்ற ஒன்றை கொண்டிருக்கும் ஒரே இனம், நாம்தான். ஆனால் ஒரு சிரிப்பு சந்தோஷத்தை மட்டுமா குறிப்பிடுகிறது?

இந்த பொங்கல் நன்னாளில் நமது உழவுக்கு துணையாயிருக்கும் சூரியனும் மாடுகளும் இந்தப் பண்டிகையை எதிர்ப்பார்த்தா இருக்கின்றன?

இல்லை. நாம்தான். 

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.


( இணைப்பு சுட்டிகள்)

1. https://youtu.be/MINp1XjLqB8?si=ruXmx5e3gS-MW-ek

2. https://youtu.be/R2jMZbonDWQ?si=wT50z9_yQPQQ2b3b

3. https://youtu.be/4OXXaljtRlY?si=qwvq06U-9O7FOBdm

4. https://youtu.be/KbWHs80-FXI?si=6r6LPG-OP8rehaIy

Saturday, October 4, 2025

சி. மணியும் ஜேன் குடாலும்

 


EVERY INDIVIDUAL MATTERS.

EVERY INDIVIDUAL HAS A ROLE TO PLAY. EVERY INDIVIDUAL MAKES A DIFFERENCE.

 - Jane Goodall 


             மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் என்ற எதுவுமே அண்ட முடியாத, ஜேன் குடாலுடைய இந்த மூன்று வரிகள்.

இந்த முழு விஷயத்திற்குமானது அவருடைய நெடிய வாழ்வு. தமிழைப் பொருத்தவரை இந்தத் திண்மையை வேறு எப்படியும் சொல்லிவிட முடியாது. அது இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்வதாக முடிந்துவிடும். 

மேம்போக்காக பார்த்தால் இது மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ மட்டுமே பொருந்துவதாகக்கூட தோன்றலாம். ஆனால் இது அப்படியில்லை. அல்லது சமாதானமாக ஒரு முடிவுக்குக்கூட வரலாம். இதைத் தொடர்ந்து சில நினைவுகள் எழுகின்றன.

சி. மணியுடன் தொடர்ந்த சந்திப்பில் இருந்தபோது அவர் இந்த பிரபஞ்சத்திலேயே தனியான தன்மையுடன் இருக்கும் ஓர் ஆளுமை என்றே நினைத்திருந்தேன். வேறு எங்கும் அப்படி ஒரு தன்மையை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. 

எல்லா மனிதர்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும்கூட சொல்லலாம் ஒரு தனிப்பட்ட நடத்தையைக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். நடத்தை என்பதைவிட அதை ஒரு தன்மை என்று புரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக இதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும் தன்மை. மற்றது சமூகத்தோடும் இந்த இயற்கையோடும் தொடர்பு கொள்ளும் போக்கு.

வழக்கமாக நாம் எல்லோருமே ஏதோ ஒருவகையில் சில அர்த்தமற்ற தொடர் செய்கைகளை நமது சிந்தனை இடைநிறுத்தங்களில் நம்மையும் அறியாமல் செய்வோம். 

தலை சொறிவது, மூக்கைத் துடைத்துக் கொள்வது, முடியைக் கோதுவது, கால்களை ஆட்டுவது அல்லது வெறுமனே விரல்களைக் கொண்டு எதையாவது செய்வது என்று எத்தகைய நிலையிலும் ஏதாவது ஒன்று வெளிப்பட்டுவிடும். எங்கள் ஜீனோகூட உணவு தயார் செய்யும் அந்தச் சிறிய காத்திருப்புக்குள், பல கொட்டாவிகளையோ அல்லது முன் கால்களைத் தளர்த்தவோ செய்வான்.

ஒன்று சிந்தனைத் தீவிரம் அல்லது சிந்தனையற்ற ஒரு வெற்று அல்லது குறிப்பிட்ட ஒரு நிலைமையை கைக்கொள்ள இயலாதத் தன்மையால் இது நிகழக்கூடும்.

இது ஒரு விஷயத்தைச் சொல்லுகிறது.

ஒரு நிலையில், மூளையின் உடல் கட்டுப்பாடு சார்ந்த, அதாவது தேவையான செய்கைகளை மட்டும் செய்து ஆற்றலை வீணடிக்காத இயற்கையின் அடிப்படை சறுக்கிவிடுகிறது. இதுவும் ஏதோ காரணமாகக்கூட இருக்கலாம். ஆனால் மூளையின் பகுத்தறிவிற்கு அப்பால் தன்னியல்பாக உடல் செயல்படும் ஒரு நிலையென்பது ஒரு கட்டத்தில் உடலே மூளையைக் கட்டுப்படுத்த அந்த மூளையே சம்மதித்துவிடுகிறது.

இதை டோப்பமைன் விளைவாகவும் வரையறுக்கலாம். ஆனால் அதையும் தாண்டி நாம் ஒரு புரிதலுக்கு வரலாம். 

கோயில் திருவிழாக்களில், பெருந்திரளான கூட்டங்களில், ஏன் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடிவிடும்போது அங்கே மிக அதிகமாக பகுத்தறிவு மழுங்கிப்போகிறது. அதைவிட நாம்மைப் போன்ற பரிணாமத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு மனத்தின் நடைமுறை செயல்களைக் கணக்கிலெடுக்கும் பிரக்ஞை தவறிவிடுகிறது. இது சில பரிணாமத்தின் ஆதிகால பேராபத்தை எதிர் கொள்ளும் ஒரு கூட்ட மனோபாவ செயல்பாடகவும் இருக்கலாம். அதன் எச்சம் இன்று அந்த பரிணாமத்தின் ஆதார செயல்பாட்டு கருத்தாக்கத்திற்கே கேடாக முடிகிறது.

சரி. சி. மணியின் இந்த நிலையின் தன்மையென்ன என்று யோசித்தால், அவர் எதற்கும் பெரிதாக வினைபுரிந்ததில்லை. இது ஒரு மந்த புத்தியாக இருக்குமோ என்று யோசித்தால், அதுதான் இல்லை.

அவர் தனது முழு கட்டுப்பாட்டில், முழு முதலாக பிரக்ஞையுடன் இருந்தார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதுவே அவரை எந்த சார்பும் இல்லாத, அல்லது முகஸ்துதிகளை தூக்கித் திரியும் விபத்திலிருந்து காப்பற்றியிருக்கிறது.

'எழுத்து' சி.சு. செல்லப்பா ஞானக்கூத்தனின் படைப்புகளை மறுதலித்தப்போது, சி. மணி கொண்டாடினார். கொஞ்சமேனும் அதற்காக தனது, 'நடை' இதழை களமாக்கினார், சி. சு. செல்லப்பாவை எதிர்த்து. அதுவே இலக்கியத்தை, நவீனத்தை பின்நவீனத்திற்குக் கொண்டு சென்றது.

சி. மணி கடைசிவரை தனக்கான நிலையான நிலையாக எதையும் வைத்துக் கொள்ளாமல் இருந்ததற்குக் காரணம் அவர் ஒருமுறைகூட எனக்குத் தெரிந்து வெடித்துச் சிரித்ததில்லை. தலை சொரிந்ததில்லை. வெறுமனே காலாட்டியதில்லை அல்லது கட்டுக்கடங்காமல் கிளர்வுற்றதில்லை. அதுவே அவரை நிலையான உயர் பரிணாம உயிரியாக தக்கவைக்க உதவியது.

அவர் காலத்து இலக்கியவாதிகள் அவரைத் தவிர்த்தது சி. மணி கொண்டிருந்த தன்மையைக் கொண்டிருக்கவில்லையோ என்றே எண்ண வைக்கிறது. ஆமாம் ஞானக்கூத்தனோ, அசோகமித்திரனோ சி. மணியை எப்போதும் நினைவுகூறியதே இல்லைதான்.

ஆனால் நகுலனின்மேல் சி. மணியின் உடலிலிருந்து எழும் மணமே எழுவதாக எனக்குத் தோன்றும்.

நிற்க.

இன்று இந்த தமிழ்ச் சூழல் இருவேறு நிலைகளை ஒரு பகுத்தறிவின் முழுமையாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. அல்லது உலகமே அத்தகைய ஒரு தன்மையை நோக்கித்தான் செல்வதாகத்தான் தோன்றுகிறது.

அதாவது பகுத்தறிவை தனக்கும் முட்டாள்தனத்தை மற்றவர்க்கும் ஆக்கும் இந்த செயலுக்கு, முட்டாள்தனத்தை விளக்க பகுத்தறிவையும் பகுத்தறிவை விளக்க முட்டாள்தனத்தையும் கையிலெடுக்கிறது.

இதற்கு நாம் பகுத்தறிவு பேசிய, பேசும் அத்தனை சிந்தனையாளர்களையும் கடிந்து கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இந்த முட்டாள்தனங்கள் எல்லாமே அந்த பகுத்தறிவின் மேலேயே கட்டி எழுப்பப்படுகிறது.

ஜேன் குடால் சொல்வது இதைத்தான். 

நாலாபக்கமும் எறும்புகள் இழுத்துச் செல்லும் உணவு எப்படியோ இறுதியில் அதன் வசிப்பிட வாயிலுக்குச் சென்றுவிடுவதைப்போல, இதுவும் நிகழும். அந்த ஒரு எறும்பு மட்டும் தன் திசையை எப்போதும் மாற்றாது. அப்படி செல்லும் வழித்தடத்தின் சிக்கல்களும் இந்தத் திசைப் போராட்டத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது. கூடவே அந்த ஒற்றை எறும்பு பெரிய ஆசுவாசமடைந்துவிடுகிறது, இறுதியில். 

உயிர்களின் கூட்டு வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் எல்லாமும் முக்கியம். 

சி. மணி அவர் வீட்டு வாசலில் வந்து சாக்கடையை துலாவும் பன்றிகளை என்றுமே அவர் விரட்டியதில்லை. எனது இருசக்கர வாகனத்தில் சாக்கடை தண்ணீரை தெளித்துவிடும் என்பதற்காக கொஞ்சம் தள்ளி நிறுத்தச் சொல்லுவார்.

இன்று சி.மணியின் எண்பத்து ஒன்பதாவது பிறந்த தினம்.

02-10-2025

விட்டல்ராவ் கதைகளின் எளிமையின் அடியாழங்கள்.

ஒரு படைப்பாளியின் அறமும் அனுபவங்களும் படைப்பாகும் கணம் என்பது ஒருவகையில் அந்தப் படைப்பாளியின் சிந்தனைகளும்  அதன் உள்ளடுக்குகளும் ஒரு மொழி வழ...