Thursday, March 14, 2024

ஆஸ்காரின் அரசியல்

 

ஹாப்பன்ஹைமரும் கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன் திரைப்படமும் மிக நீண்ட படங்கள், மூன்று மணி நேரத்திற்கும் மேலானவை.


2024ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான ஆஸ்காரை க்ரிஸ்டோபர் நோலனின் ஹாப்பன்ஹைமர் பெற்றிருக்கிறது. 


இரண்டு படங்களுமே வரலாற்றின் மறக்க முடியாத துயரத்தைத்தான் புதிய உத்திகளின் மூலம் திரை மொழியில் கட்டமைக்கின்றன.


உண்மையாலுமே மார்ட்டின் சி. ஸ்கோர்செசியின் கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன் படத்திற்கே விருது சென்றிருக்க வேண்டும். 


ஓர் அணு விஞ்ஞானியான ஹாப்பன்ஹைமர், கருத்தளவில் இருக்கும் ஓர் அறிவியியல் தொழில் நுட்பத்தை ஒரு கருவியாக்கி, அதை உலகம் கண்டு அஞ்சும் அணு ஆயுதமாகச் சாத்தியமாக்குகிறார். படம் கிட்டத்தட்ட இவரது எண்ண ஓட்டத்திலேயேதான் நிகழ்கிறது. இவரது இருப்பில்லாத லெவிஸ் ட்ராஸாக வரும் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் காட்சிகள் கருப்பு வெள்ளையில் காட்டப்படும் ஓர் உத்தியாக பயன்பட்டிருக்கும். 


ஹைமர் ஓர் ஆர்வமுள்ள விஞ்ஞானியாதலால், அணுச் சிதைவு என்ற பிரபஞ்சத்தின் அடிப்படை செயலை, தூண்டுவதோடும் இல்லாமல் அது ஓர் எல்லையில் நின்றுபோகுமா என்பதே அந்த மன்ஹாட்டன் திட்டத்தில் அதீத ஈடுபாட்டைக் கொடுக்கிறது. 


திட்டத்தின்  யுரோனியத்தால் ஆன மாதிரி அணுகுண்டு வெடிக்கப்படுவது மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதன் நாசகாரத்தை ஹைமர் பார்ப்பதில்தான் திருப்பமே ஏற்படுகிறது. லிட்டில் பாய் என்ற யுரோனிய குண்டும் ஃபேட் மேன் என்ற ஃப்ளூட்டோனிய குண்டும் மூன்று நாள் வித்யாசத்தில் 1947 ஆகஸ்ட் 6ம் தேதியும் ஜப்பான் தனது சரணை அறிவிக்கும் முன்பே, 9ல் இரண்டாவது குண்டும் போடப்படுகிறது. அப்படி ஒரு நிர்பந்தம், ஃப்ளூட்டோனியம் குண்டின் செயல்பாட்டை உறுதி செய்ய நிர்பந்தமாக வீசப்படுகிறது.


ஆனால் படத்தில் அந்த போரழிவு நிகழ்வுகள் காட்சிகளாகக் காட்டப்படுவதில்லை. ரேடியோ செய்தியாகத்தான் ஒலிக்கும். 


நோலனின் திரைக்கதை நுட்பம் இதுதான். அந்த போரழிவுகளை ஹைமர் விரும்பவில்லை. அவரின் மனப்போக்கை அடிப்படையாக திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் இயங்குவதால் அவை யாவும் படத்திற்கு அப்பால் இயங்குகின்றன. 


பகவத் கீதையின் நானே மரணமாய் இருக்கிறேன் என்ற கிருஷ்ணனின் கூற்றை முன்மொழியும் ஹைமர், உண்மையான மரணத்தை சோதனைக் குண்டின் வீர்யத்தில் பார்த்துவிடுகிறார். 


இந்த மெய்மையே அவரை ரஷ்யாவின் உளவு நிறுவனத்திற்கு தொழில் நுட்பத்தைக் கசியவிட்டார் என்ற விசாரணைக்குக் கொண்டுபோகிறது. 


ஆனால் கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன்   திரைப்படம் குரலற்ற ஒரு குற்றத்திற்கான குரலாக ஒலிக்கிறது. 


மார்ட்டின் சி. ஸ்கோர்செசி படத்தை மிக நேர்த்தியாகக் கட்டமைத்து, ஓசேஜ் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அமெரிக்கர்களின் நய வஞ்சகத்தையும் நுட்பமாக கிட்டத்தட்ட நாவலின் படியே பார்வையாளர்களுக்கு ஆழமாகக் கடத்துகிறார். 1920 களில் வெள்ளையர்களின் நய வஞ்சகத்தின் உச்சமான கோர முகத்தைக் காட்டும் படம் என்பதாலேயே ஹைமர் முந்திவிட்டது.


லியோனார்டோ டிகாப்ரியோ கிட்டதட்ட மார்லண்ட் பிராண்டோ போல முக பாவனையும் கறை படிந்த பற்களுமாக அசத்தியிருக்கிறார். 


ரொபேர்ட் அந்தோனி டி நீரோ, ஆடுகளத்தில் வரும் பேட்டைக்காரன் போல. மிக லாவகமான வில்லனாக வருகிறார். 


ஓசேஜ் பழங்குடி பணக்கார பெண்ணாக வரும் லில்லி கிளாட்ஸ்டோன் உண்மையிலேயே ஒரு பழங்குடி என்பதாலோ என்னவோ, தனது முகத்தில் அத்தனை பாவனைகளையும் ஒரு அடங்கிய முகபாவத்துடன் பெண்களின் சூழ்நிலை நிலைப்பாடுகளை அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


உண்மையாலுமே, சிறந்த படம், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, சிறந்த துணை நடிகர்கள் என்று 

லில்லி கிளாட்ஸ்டோன், லியோனார்டோ டிகாப்ரியோ, ரொபேர்ட் அந்தோனி டி நீரோ, கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூனுக்குதான் கிடைத்திருக்க வேண்டும்.


1988ல் வந்த மிஸிஸிபி பர்னிங் படத்தைப்போல, 1964ல் நடந்த உண்மை சம்பவம், மூன்று இனவெறி கொலையைத் துப்பு துலங்க வரும் FBI ஏஜண்டுகளுக்கு மிஸிஸிபி உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். காரணம் அந்த வெள்ளை அதிகாரிகள்தான் அந்த கொலைகளை செய்தவர்கள். இந்தக் காரணத்திற்காகவே படம் ஆஸ்கார் விருது போட்டியில் மட்டுமே இருந்தது. சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை மட்டுமாவது அப்போது கொடுத்தனர். 


ஆனால் ஹாபன்ஹைமர் ஒரு விஞ்ஞானியின் மனவோட்டத்தைத் துள்ளியமாகக் காட்சிப்படுத்த தவறவில்லை.


சரியான போட்டி என்பதுபோல, ஆஸ்கர் கமிட்டி என்பது ஒரு விருதை வழங்குகிறது என்றால், அது விருது மட்டுமல்ல. அதற்கு பின்னால் பெரும் அமெரிக்க வெள்ளை அரசியல் இருக்கிறது.


கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன் என்ற பெயரே மொத்த கதையையும் சொல்லிவிடுகிறது.


எண்ணை வளம் மிக்க ஒட்டஹாமா ஓசேஜ் பணக்கார பழங்குடி மக்களை வெள்ளையர்கள் நய வஞ்சகமாக ஏமாற்றி, அவர்களது சொத்துக்களை பிடுங்கிக் கொள்கின்றனர்.


ஒன்று ஓசேஜ் இன பெண்களை மணத்து கொண்டு, பிறகு அவர்களைக் கொன்றுவிட்டு சொத்திற்கு அதிபதியாகின்றனர். அல்லது ஓசேஜ் இன் ஆண்களுக்கு கார்டியனாக இருந்து கொண்டு, அவர்களை தற்கொலை செய்து கொண்டதுபோல கொன்றுவிட்டு, இன்சூரன்ஸ் மூலம் பணத்தையும் சொத்தையும் அடைகின்றனர்.


இந்த கதைக்கு எப்படி, விருது கிடைக்கும்?


இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வெறுமனே ஒரு படத்தின் தொழில்நுட்பம், கதாபாத்திர செதுக்கல் என்று இருந்தால் மட்டும் போதுமா?


இல்லை எடை தட்டு, அதன் ஆன்மாவிற்கே செவி சாய்க்க வேண்டும். கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன் இந்த விஷயத்தில் ஹாபன்ஹைமரைவிட பல மடங்கு எடையுள்ளதாக இருக்கிறது.


செவ்வியல் தன்மையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசும் திரைப்படம்தான், தனது உண்மையான ஆன்மாவைக் கொண்டிருக்கிறது.


தளபதியும் குணாவும் 1991ல் தீபாவளிக்கு வந்தாலும் கிட்டத்தட்ட 33 வருடங்கள் கழித்தும் குணா தனது நவீனத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் உண்மையான சினிமா.








Tuesday, December 19, 2023

குணாவில் ஒரு தூக்கம்

              



குணாவில் ஒரு காட்சி. பாடான பாடுபட்டு, தன் அன்பை, மனிதர் உணர்ந்து கொள்ளாத அதையும் தாண்டிய புனிதக் காதலால் அபிராமியின் அன்பைப் பெற்று அவளே தாலி கட்டச் சொல்லி தாலிகட்டுவான் குணா. எரியும் அக்கினியை சாட்சியாக அந்தக் கல்யாணம் நடக்கும். அது ஒரு அற்புதமான இரவு. இதற்கு அடுத்தக் காட்சியில் குணா தூங்கிவிடுவான். குறட்டை விட்டு தூங்குவான். புது மணமகன் தூங்குவதாகக் காட்டப்படுவதை ஒரு பார்வையாளன் எளிதாகக் கடந்துவிடக் கூடும்.


ஆனால் க.நா. சுப்ரமணியத்தின் ஒரு கதை. அதன் தலைப்பே "தூக்கம்தான்". கதை இதுதான். தன் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். மனைவி அங்கேயே இருந்து பார்த்துக் கொள்வாள். அந்தத் தகப்பன் என்ன ஆனதோ என்று அன்று இரவு தவியாய் தவித்தபடி இருப்பான். மறுநாளும் குழந்தை வீட்டுக்கு வராது. மருத்துவமனையிலிருந்து வரும் சகோதரனும் இவரிடம் வந்து எதையும் சொல்லாமல், பக்கத்து வீட்டுக்காரரருடன் பேசிக்கொண்டிருப்பான். ஒரு கணம்தான். அவன் வந்து பார்க்கும்போது அவர் தூங்கிவிடுவார். ஆழ்ந்தத் தூக்கம்.


இந்த இரண்டு புள்ளியும் இணையுமிடம் மிக அபூர்வம். மனதின் தாங்க முடியாதத் தன்மையானது தனக்குத்தானே தற்காப்பு நிலைக்குச் சென்றுவிடுகிறது. வலியை ஒரு அளவுக்கு மேல் தாங்க முடியாது, மயக்கம் போடும் மனத்தின்,  பிரக்ஞையின் ஒரு தப்பித்தல் தன்மையிது. மிக நுட்பமான இது, குணாவில் தான் அடைந்த சாதனையை தாங்கொணா சந்தோஷத்தில் தூக்கத்திற்குப் போய்விடுகிறது, கா.நா.சுவின் தூக்கம் கதையில் துக்கம் தாளாது, தன் இயல்பினில் தப்பித்தலுக்குப் போகிறது மனது.


கமல் க.நா.சுவை வாசித்திருக்க வாய்ப்பிருந்தாலும் அதை மிகச் சரியான இடத்தில் மிக நுட்பமாகப் பயன்படுத்தியது வியக்காமல் இருக்க முடியாது.

Wednesday, October 4, 2023

ஒலியில்லாத உலகம் எவ்வளவு அபத்தமானது?

 

"லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே லஜ்ஜாவதியே

என்ன அசத்துற ரதியே ராட்சசியோ

தேவதையோ ரெண்டும் சேர்ந்த

பெண்ணோ அடை மழையோ

அனல் வெயிலோ ரெண்டும்

சேர்ந்த கண்ணோ...."


2004 வாக்கில் வெளி வந்த 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாளப்படத்தின் தமிழ் மாற்றுப் படப்பாடல்தான் இது.


ஜசி கிஃப்ட் இசையமைத்து பாடிய பாடல் அக்காலத்தில் மிகப் பிரபலம். பரத்தும் கோபிகாவும் நடித்திருப்பார்கள். கோபிகா உண்மையிலேயே ஒரு தேவதை போலவே இருப்பார். பரத் விடலைப் பையன்.


இந்தப் பாட்டின் காட்சி வடிவத்தை நான் முதலில் சி. மணி வீட்டில்தான் பார்த்தேன்.


CRT TV. Sony என்று நினைக்கிறேன். அவ்வளவு பெரிய அளவில் அகண்ட காட்சி. அவரது அறையை கால்வாசி நிறைத்திருக்கும். Turbo Speaker. ஒலி அளவைக் கூட்டினால், தியேட்டர் போல இருக்கும். ஆனால் சி. மணி 2 அல்லது 3 புள்ளிகளுக்கு மேல் வைக்க மாட்டார்.


நிறைய சமயங்களில் BBC, NDTV  சில மூவி சேனல்கள் ஓடும். 


நான் உட்கார்ந்திருக்கும்போது முக்கியமான செய்தி ஏதாகிலும் வந்தால் அவரது கவனம் சட்டென மாறும். ஆனால் ஒலி அளவை பெரிதாகக் கூட்ட மாட்டார். மிக உன்னிப்பாகக் கேட்டால்கூட புரியாது. சி. மணியின் வீடு பிரதான சாலை ஓரமே இருந்ததால் போக்குவரத்து சத்தம் TV ஒலியைத் தின்றுவிடும். 


நான்தான் தடுமாறுவேன். சி. மணி இன்னும் இன்னும் குறைத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.


"கொஞ்சம் செளவுண்ட் வைங்க" என்று சொல்ல முடியாது. எனது வீட்டிற்குப் போய் அட்டகாசமாக வைத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவரது குறைந்த ஒலியளவின் இரகசியம் மிகப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.


அதன் மூலம் அவர் ஒரு தியான முறைபோல அந்தக் கேட்டலை மாற்ற முயன்றிருக்கிறார். தனது கவனத்தை அசாத்தியமாகக் குவிப்பதற்கான பயிற்சியின் வெற்றிதான் அது என்று அவர் புத்தகங்களை படிக்கும்போதும் புரிந்து கொண்டேன். வேகமாகப் புரட்டுவார். ஆனால் படித்துவிடுவார்.


அவர் ஏன் அந்தப் பாடலை விரும்பிக் கேட்க வேண்டும்? 


அது ஒரு புதிய முயற்சி. கேண்டிட் கேமராவை வைத்து, அகண்ட கோணத்தில் எடுக்கப்பட்ட ஒரு துள்ளல் பாடல். காட்சி வடிவில் அது அதன் அடுத்த நகர்வை எப்படிக் காட்டும் என்பது ஒரு மர்மமான ஒளிப்பதிவு. 


சி. மணியின் 'நரகம்' நீள் கவிதை இதை போன்ற ஒரு காட்சி வடிவத்தைத்தான் வாசிப்பனுபவத்தில் தரக்கூடும். அந்த உருவாக்க மனம்தான் அந்தப் பாடலை வரும்போதெல்லாம் மிகக் குறைந்த ஒலியளவில் மீண்டும் மீண்டும் கேட்க வைத்திருக்கிறது.


ஆனாலும் எனக்கு மட்டுந்தானா, கோபிகா அற்புத தேவதையாக அந்த Headband அணிந்து வருவது என்று தெரியவில்லை.


ஒரு நாள் சி. மணி சொன்னார். "எந்த நடன பாடலாக இருந்தாலும் ஒலியை Mute செய்துவிட்டுப் பாருங்கள்".


ஒலியில்லாத உலகம் எவ்வளவு அபத்தமானது? பைத்தியக்காரத் தனமமானது?


அவர் வீட்டில் ஒரு அறை முழுக்க LP Recordகள் இருக்கும். அந்த ஃப்ளேயர், அதன் ஊசி முனைதான் எவ்வளவு கூர்மையானது? எவ்வளவு நிசப்தமானது?


இன்று சி. மணியின் பிறந்த நாள்(03-10-2023). 

அவர் நினைவு கடும் நினைவு.

Thursday, September 14, 2023

சிறந்த சினிமா...

 




சமூக, பண்பாட்டு, தனிமனித கூறுகளை வேறு எப்படியும் பெரும்பாலும் சொல்ல முடியாத ஒரு கோணத்தில் திரைப்படத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே நவீன திரைப்படக் கலை.


பாலுமகேந்திராவின் 'வீடு' படத்தில் ஒரு காட்சி வரும். படத்தின் முக்கிய பாத்திரமான சொக்கலிங்க பாகவதர், ஒரு மழை வரும் மாலை வேளையில் இன்னும் கட்டி முடிக்கப்படாத தனது வாரிசின் வீட்டைப் பார்க்கப் போகிறார்.


இறுதி வேலைகள் முடிக்கப்படாத கட்டியும் கட்டாத செங்கல் அடுக்காக இருக்கும் அவ்வீட்டை அடைந்துவிடுகிறார். சிமெண்ட் பூசப்படாத புழுதி நிறைந்த நடையுடன் கூடிய அந்த வீட்டிற்குள் நுழையும் அவர், தனது செருப்புகளை வீட்டிற்கு வெளியிலேயே கழற்றி விட்டு உள்ளே செல்வார். இது போகிற போக்கில் இளைய ராஜாவின் 'How to Name it' இசைத்தொகுப்பின் ஓர் இசைக்கு மறைந்துபோகக் கூடிய ஒரு காட்சிதான். 


ஆனால், தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனத்தில் 'ஒரு வீடு' பற்றிய பண்பாட்டு ஒழுங்குமுறை காட்சியாக, வேறு எதுமாதிரியும் சொல்லிவிட முடியாத தனிமனித ஒழுங்கை, பாலுமகேந்திரா வெகு அநாயசமாகச் சொல்லியிருப்பார். ஒரு நெடும் இசைக்கு இடையில் சட்டென தோன்றும் கணநேர அமைதிபோல இது பாலுமகேந்திராவின் எந்த குறுக்கீடுமற்ற தன்னியல்பான ஒரு காட்சியை அந்தத் திரைப்படத்தின் ஆன்மாவாக மாற்றும் மிகச் சிலரில் முக்கியமானவராக எனக்கு காட்டியது. 


அந்தப்படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஒரு காட்சிக்கான விருது மட்டும்தானா அது? இல்லைதான்.


இந்திய 69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


சிறந்த பிராந்திய மொழி படமாக 'கடைசி விவசாயி' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்ச்சி.


சொக்கலிங்க பாகவதருக்குப் பின் யாராவது இருப்பார்களா என்று ஏங்கிய எனக்கு, நல்லாண்டி பெரிய ஆற்றுதலை அளித்தார்.


வீடு படத்தின் மையச் சரடாக வரும் அது போன்ற காட்சியே படம் முழுக்க வந்தால் எப்படி இருக்குமோ அதுவே 'கடைசி விவசாயி'. 


ஒரு கலைப்படம் தனக்கான உச்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு காட்சிதான் விஜய் சேதுபதிக்கு உணவு பரிமாறும்போது இல்லாத ஒருவருக்கான மூன்றாவது தட்டு உணவு. பண்பட்ட முதிய ஆன்மாக்கள் இயற்கையின் சகல சாத்தியங்களையும் அவதானிக்கும் ஒரு பக்குவத்தை அடைவதுதான், 'மயிலை யாராவது கொல்லுவாங்களா?' என்ற கேள்வி.


நீதி மன்றத்தின் தேவையையே கேள்விக்குள்ளாக்கும் இந்தக் காட்சி.


சிறந்த திரைப்படத்திற்கான விருது 'ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்' (ஆர். மாதவன்) கிரிஸ்டோபர் நோலனின் 'ஆபன்ஹைமர்' வரிசையில் ஒரு முக்கியமான படத்திற்குக் கிடைத்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியோ அதே அளவு மகிழ்ச்சி வடிந்துபோனது

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது

தி காஷ்மீர் பைல்ஸுக்குக் கொடுத்திருப்பது.


சிறந்த படைப்புகளுக்கான விருது வழங்குவதன் மூலம் மக்களை பண்படுத்துவது அரசின் கடமைகளுள் ஒன்று. இந்திய அரசு எப்போதும் தனது பெலஹீனத்தை அல்லது வாய்ப்பை வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை.

Saturday, September 2, 2023

நெருக்கமான இடைவெளியைத் தாண்டும் கலை


 Netflixல் The Hunt for Veerappan டாக்குமெண்டரி பார்த்தேன். மிக நுட்பமாக எழுதப்பட்ட Script. முத்துலட்சுமியின் அங்க அசைவிலும் பேச்சிலும் வீரப்பனைப் பார்க்க முடிந்தது. தான் கொண்ட பாவனையை இயல்பாக்கிய வீரப்பனின் முடிவு சிவசுப்ரமணி எடுத்த புகைப்படங்களிலும் காணொளிகளிலும் நிகழ்ந்துவிட்டது தற்செயலானதில்லை. ஆனால் ராஜ்குமாருக்கான பிணையில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுக்க அரசு உடன்பட்டதைக் கேள்விப்பட்டதும், வீரப்பன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரைக் கலந்து அதனுடன் ஏதோ ஒரு காட்டிலையைக் கசக்கி, சாரை அதில் விட்டதும் அந்தத் தண்ணீர் கட்டியாகிவிட்டது என்று சொல்லக் கேட்கும்போது, ஓர் அபூர்வ அனுபவ மூளையை சிதறடித்தது ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. படத்தின் மற்றொரு முகத்தை இப்படிக் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் மற்றொரு பரிமாணத்திற்கான இடத்தைக் கொடுத்து, மாற்றான ஒரு புள்ளியை போகிறபோக்கில் சொல்லிச் செல்வதே கலையின் முன்மாதிரியாக்குகிறது, படம்.


இங்கே ஓர் ஒப்பீடு தானாக உருவாகிறது. மாமன்னன் படம் விக்ரம், KGF போன்ற படங்களின் பாவனையை கலைப் படைப்பாக்க முயன்ற ஒரு போலி முற்போக்குப் படமாகத்தான் இருக்கிறது. குறியீடுகளை படமாக்குதலில் உண்டான பெலஹீனம்தான், மாமன்னன். அரசியல் ரீதியிலான வெற்றுக் கற்பனைக்கூட இல்லை. 


மாரி செல்வராஜே நினைத்தாலும் மற்றொரு பரியேறும் பெருமாளை எடுத்துவிட முடியாது என்பது மாமன்னனிலிருந்து புரிந்து கொள்ளலாம். அகிராகுருவோவாவின் Dreams படத்தின் பனிமலையேறும் கனவின் ஓர் உத்தியை நாயைக் கொண்டு அற்புதமாக தனது படத்தில் பயன்படுத்தியிருப்பார். எந்த படத்தின் சாயலும் இல்லாமல் தன்னியல்பாக ஒரு படம் எடுக்கும்போதுதான், அந்த இயக்குநரின் ஆகிருதி வெளிப்பட்டுவிடுகிறது. மையமான ஒரு சிந்தனையிலிருந்து அந்தப் படைப்பை உருவாக்குவதற்கும், ஒரு Discussionல் உருவான செயற்கைக்கும் இருக்கும் விபத்தே இதுபோன்ற ஆக்கங்கள்.


The Predator படத்தில் கடைசியாக ஒரு யுத்தம் நிகழும். அது தனது அதி நவீன ஆயுதங்களை துறந்துவிட்டு ஒற்றைக்கு ஒற்றையாக, நிராயுத பாணியான கதாநாயகனுடன் சமரிடும் அந்த predator. அது, தான் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையிலிருந்து தவறும்போது, தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். இந்த மனித வீர கற்பனையே உயிரினங்களின் விடாத Servival of the fitness தன்மையின் வெளிப்பாடு. அதுவே யுத்தம். 


ஆனால் மனித அறிவு வித்தியாசமானது. அது இயற்கையை ஏதோவொரு விதத்தில் மறுத்து, தன்னியல்பை பெற்றுவிடுவதிலேயே இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு கட்டுப்படாததது போல தன்னை நிறுவிக் கொள்கிறது. ஆனால் தனது நிலையின்மையின்மேல் அவ்வளவு அசட்டையானது வேறு ஒன்று இல்லவே இல்லை, இந்த பிரபஞ்சத்தில்.


எனவே, கலை என்பது, தன்னை முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்திக் கொள்வதிலேயே, அது எப்போதைக்குமானதாக தன்மை ஒன்றைக் கொண்டதாக இருக்க வேண்டுமாகிறது.

Monday, February 27, 2023

அசகவதாளம் என்னும் மகத்தான விடுபடல்

அசகவதாளம் என்னும் மகத்தான விடுபடல்

- சாகிப்கிரான்


 "அனுபவ சுவாரஸ்யம், ஓசையின் ஒழுங்கற்ற தன்மையில் இடையறாது நிகழும் முடிவில்லாத இசையின் சாத்தியப்பாடுகளின் வழியே நிகழ்த்திக் கொள்ளும் துல்லிய விடுபடலே கவிதையாக உணரப்படுகிறது."


தொகுப்பில் உள்ள ஒரு சில கவிதைகளை மட்டும் விரிவாக வாசிப்பதன் மூலமாக இத்தொகுப்பிற்கான முழுமையான ஒரு பார்வையை அடைய முடியும் என்று நம்புகிறேன். மேலும் எல்லாக் கவிதைகளையும் எடுத்தாள்வது என்பது பொழிப்புரைபோல அமைந்துவிடும். வாசகன் தனக்கான ஒரு நோக்கில் கவிதைகளை விடுவித்துக் கொள்ளச் செய்வதே முழுமையான ஒரு வாசிப்பனுபவமாக அமையும். ஆனால் இக்கட்டுரை ரசனை சார்ந்தில்லாமல், பகுப்பாய்வு நோக்கியதாக இருப்பதால், இது எனது தனிப்பட்ட கருத்தாகக் கருதிக் கொள்ள தொகுப்பு இடம் தந்ததை வியக்காமல் இருக்க முடியாது.


கவிதையை முதலில் வாசிப்போம்.


எடிசன் புன்னகைக்கிறார்

********************************


நள்ளென் யாமத்தில் உறக்கம் கலைந்து தட்டுத்தடுமாறி சுவரில் கைவைத்துத் தடவியபடி அறையின் விளக்கை எரியவைக்க முயல்பவனிடம்


அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது 

அந்த நேரத்தில் போய்


சரி தவறு என்றெல்லாம் கணக்குப் பார்ப்பதில்லை இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம்

போனால் போகட்டுமென

தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும்

அதுதான்

தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு.

*


பெரு. விஷ்ணுகுமாரின் கவிதைகள் என்றில்லை, நவீன கவிதை சுவாரஸ்யத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டவைகளாகவே பெரும்பாலும் இருப்பதான ஒரு பார்வையைத் தருவதும், திடுக்கிடச் செய்யும் அதன் உத்தி, அல்லது அதன் சாத்தியப்பாடு மிகப் புதியதாக இருக்கிறது. தற்காலக் கவிதையின் போக்கு தத்துவங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக அறிவித்துக் கொள்கின்றது. அதைத் தாண்டி, மறுக்கும் கவிதையின் கச்சிதத் தன்மை, கட்டமைக்கப்பட்ட அறத்திற்கான நையாண்டி, எளிமையாக இருந்தாலும் அதன் தெரிவுகளும் செயல்பாடுகளும் ஒரு மையமற்ற பிரக்ஞையைப் பிரதானப்படுத்தும்  தன்மை, பிடி கொடுக்காத அல்லது எளிதில் புரிந்து கொள்ள முடியாத மதிப்பீடுகள், இயல்பிலிருந்து தன்னை முற்றிலுமாக பீய்த்துக் கொள்ளும் தன்மை என நவீன கவிதை தன்னை இப்படியாகவே நிறுவ முயலுகிறது.


நவீன கவிதையின் பிரதான நோக்கமே, தத்துவத்திலிருந்து விடுவித்துக் கொள்வதுதான் என்றாலும் உண்மையில் எந்த ஒரு படைப்பும் தத்துவத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்ளும் இயல்புத் தன்மையைக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தத்துவத்தின் தர்க்கத்தின் மூலமாகவே நவீன கவிதையை முழுமையாக, தனிப்பட்ட கவிதை என்றாலும் ஒட்டு மொத்தத் தொகுப்பானாலும் அதன் Core Thoughtயை, அல்லது அதன் மையத்தை இத்தகைய உத்தியைக் கொண்டே ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது. கவிதை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதை, தத்துவத்தின் அறிவு சார்ந்த உபாயத்துடன் அனுபவத்தில் உள்ள வெவ்வேறு வகையான உள் பார்வையால் பூடகமான தர்க்கத்தை முன்னெடுப்பதன் மூலமே, ஒன்று உடன்பட்டோ, அல்லது எதிர்வினைப்பட்டோ தன்னுள் செயல்படும் ஞானத்தை,  அது புறக்கணிக்கத்தக்கதாக இருந்தாலும், அதுவே அந்தப் படைப்பின் அடிப்படையாகிறது. தத்துவத்திலிருந்து வெளியேறுவதும் வகைப்படுத்தப்படாத ஒரு தத்துவமே.


கருத்து முதல்வாதத்தின் தந்தை என்று சொல்லப்படும் பிளேட்டோவின் காலம், கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்னால். இவர் தனது குருவான சாக்ரடீஸிடமிருந்து "மனிதனின் அறிவுதான் நற்பண்பு" என்ற மையச் சரடிலிருந்து "அறிவு" என்பதை புரிந்து கொள்ள முயல்கிறார். எது "அறிவு" என்ற கேள்விக்கு ஒருவன் வருகிறான் என்றால் அவன் முதலில் எதுவெல்லாம் "அறிவு" இல்லை என்ற நிலைக்கு வர வேண்டும். "காணக்கூடிய" அல்லது "உணரக்கூடிய" எதுவும் அறிவு இல்லை என்கிறார்.  "அபிப்பிராயம்" எப்போதும் அறிவாகக் கொள்ள முடிவதில்லை என்கிறார். அப்படி என்றால் அறிவு என்பதை எதைக் கொண்டு புரிந்து கொள்வது? இங்கே அறிவு என்பதை மனித அடிப்படை பண்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரறிவு உயிரி, ஈரறிவு உயிரி போல நாம் ஐந்தறிவு உயிரி. மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சகலத்தையும் இதன் வழியாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இதன் அடுத்தக் கட்டமே மெய்யறிவு.


"கருத்துருக்களின் அறிவு வழியாக அடையப்படும் அறிவே, உண்மையான அறிவு" என்கிறார் பிளேட்டோ. இங்கே கருத்துருக்கள் என்பவை Concepts என வரையறுக்கிறார். அவை நிரந்தரமானவை, பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அறிவின் தனிப்பட்ட கூறு. எடுத்துக்காட்டாக, பூ என்ற (concept) கருத்துருவை எடுத்துக் கொண்டால், அது முல்லை, மல்லிகை, ரோஜா, தாமரை என தன்மைகளினாலும், வடிவ அமைப்புகளாலும் வேறுபட்டாலும் "பூ" என்ற பொதுத் தன்மையை நாம் அவைகளைப் பூ என்ற தன்னியல்பு நிலையின் புத்தியிலேயே உணர்ந்தறிந்து கொள்கிறோம். பூ என்ற கருத்துருவில் அர்த்தப்படுத்தும் தன்மையே உண்மையான அறிவு என்கிறார்.  இது பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைக்கும் பொருந்தும். இது நமது மனித மனத்தின் அடியாழங்களில் புரிதலின் அடிப்படைக் கூறாக இருக்கிறது. இதுவே புரிதல் என்ற செயல்பாட்டின் தோற்றப்பாடு. இந்தத் தோற்றப்பாட்டிலிருந்துதான் இலக்கியம் மனோரஞ்சிதத்தை பூ என்று குறியீடாக மாற்றுகிறது. மிகக் குறைந்த பொருத்தப்பாட்டில் அது அவ்வாறு புரிந்து கொள்ளப்படுவதே நம்முடைய நிலைப்பாடுகள் கருத்துருக்களின் சாயல்களே. அல்லது பிரதிபலிப்புகளே. ஏனொன்றால் மனித அறிவு என்பது உண்மையைத் தேடும் ஒன்று. அது அவ்வாறு கண்டடைவது 

மொழியை என்றில்லாமல் நம் நினைப்பே இத்தகைய தோற்றப்பாட்டின் உள் நிகழ்வால்தான் ஒன்றை புரிந்து கொள்கிறது. இதை மொழியியலார் தங்கள் வழியாகக் கட்டமைப்புக்குள் வகைப்படுத்துகின்றனர். ஆனால் இத்தகைய தத்துவத்திற்கு பின்னால்தான் பிரக்ஞை என்ற ஒன்று தன்னை உணர்ந்து கொள்கிறது. இதில் ஏதாவது சிக்கல் என்றால் மனித புரிதல் அபத்தமாக, ஒரு பைத்திய நிலையாக மாறிவிடுகிறது.


பெரு. விஷ்ணுகுமாரின், "அசகவதாளம்" கவிதைத் தொகுப்பிலிருக்கும் பெரும்பாலான கவிதைகள் இத்தகைய கருத்துருக்களை உடைப்பதன் விளைவாக புரிதலின் புதிய சாத்தியங்களுக்குக் கவிதைகளைக் கொண்டு செல்கின்றது. இவ்வாறே இந்தத் தொகுப்பினைத் திறந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.


"எடிசன் புன்னகைக்கிறார்" கவிதையில், "தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு", பற்றி வருகிறது.


இக்கவிதையில் மின் விளக்கின் கருத்துருவை கவிதைச் சிதைக்கிறது. அதாவது மின் விளக்கு என்பது அதற்குரிய பொத்தானை அழுத்தினால்தான் எரியும் என்பது கருத்துரு. ஆனால் இக்கவிதையில் வரும் விளக்கானது தாட்சண்யம் மிக்க ஒன்றாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் எப்போதைக்குமான இப்பிரபஞ்சத்தின் கருத்துருவின் வினைத் திறனை உடைப்பதன் வழியாக புதிய உள் அர்த்தத் திறப்புகளுக்கு வகை செய்கிறது.


நவீன கவிதை என்பது வழக்கமான கவிதைக்கான கூறுகளிலிருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டுவிட்டது என்பதை பொதுவான புதுக் கவிதை புரிதலாகக் கொள்வதற்கான நவீன வரையறையாகக் கொண்டோமானால், அதன் தர்க்கப் பூர்வமான சிந்தனைக்கும் ஓரிடம் உண்டு என்பது இக்கவிதை மறுக்கிறது.


இயற்பியலின்படி ஒரு செயலுக்கான பின் விளைவானது இந்த பிரபஞ்சத்தில் மாறாத தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சுட்சைத் தட்டினால்தான் அந்தக் குறிப்பிட்ட கருவி இயங்கும், அதாவது செயல்பாட்டின் பிரக்ஞையானது மனித அனுபவங்களின் செயல்களுடைய பின் விளைவுகளின் விழிப்புணர்வு மனோபாவத்தைத் தேவையாக்குகிறது. ஆனால் கவிதையில் கவிஞர், தவறான சுட்சுக்கு எரிந்துவிடும் ஓர் அற்புதத்தை முன் வைக்கிறார். அப்படி ஓர் அவசியத் தூண்டலின் நியதி என்ன என்ற புதிய மனோபாவத்திற்கு வாசகனைக் கொண்டு செல்வது ஏதோ எதேச்சையாகவோ, அதிசயத்திற்கோ அமைந்துவிட்ட ஒன்று இல்லை. இதன் வழியாகவே தொகுப்பை நாம் திறந்து கொள்ள வேண்டும்.


அதாவது இங்கே நிகழ்தகவின் அசாத்தியம் மூலமாக அறிவியலின் ஆன்மமற்ற தன்மையை, அறமுடைய ஒரு நிகழ்வாக மாற்றுவதன் மூலம், ஓர் அணுகுண்டை பிறந்த நாள் "பாப்பர்ஸாக", வெடிக்க வைக்கும் குதூகலமாக்குகிறது. இயந்தர மயமாக்கப்பட்ட உலகில், நிச்சயமாக்கப்பட அழிவை, ஆக்கமாக மாற்றுகிறது. மனிதனுக்கான இயற்கையின் அசலான கனிவன்பாக மாற்றுகிறது. இங்கே மனித பிறவிக்கு மட்டுமே அறமென்ற ஒன்று சதா வாழ்வை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், கனிவன்பை மாறாத கருத்துருவை உடைப்பதன் வாயிலாக, பிரபஞ்சத்தின் விதியை மறுபரிசீலனை செய்கிறது. அதை அதன் பாரபட்சமற்ற தன்மையிலிருந்து கனிவன்பின் சாத்தியத்திற்கு கற்பனை செய்கிறது. அல்லது வற்புறுத்துகிறது. இவ்வாறே ஒரு படைப்பாளி தனக்கான அல்லது இந்த உயிர்த் தொகுப்புக்கான உலகைப் படைக்கிறான். 


இந்தக் கவிதையில் வேறு சில சாத்தியங்களும் இருக்கக்கூடும். அது ஒரு "ஸ்மார்ட் பல்ப்பாக" இருக்கும் பட்சத்தில், அசைவறிதல் (Motion Detection) என்ற தொழில்நுட்பத்தின் மூலமாகத் தானாகவே மனித நடமாட்டத்தை வைத்து அந்த பல்ப்பு எரியக்கூடும். ஆனால் தூக்கத்தின் விளிம்பில் பழைய ஞாபகத்தில் சுட்ச் போர்ட்டைத் தடவியிருக்கலாம்.


அல்லது அந்த மனிதன் சுட்சைப் போடும் நிகழ்வுதகவானது முதல் தேர்வே சரியான சுட்சைக்கூட அது அழுத்தியிருக்கலாம்.

 

ஆனால் கவிதையின் பிரதான கதையாடலானது கருத்துருவை சிதைப்பதே அதை மேன்மையான ஒரு புரிதல் நிலைக்குக் கொண்டு செல்கிறது. அதற்குத் தக்கவாறு அந்தப் படைப்பின் சாராம்ச பூர்வமாக அமைத்துக் கொள்கிறது. இதுவே அதன் ஆகச் சிறந்த நற்பண்பாகக் கருத இடமளிக்கிறது.


தொகுப்பின் மற்றொரு கவிதையான, 


புகழ்பெற்ற வாள்

********************

வயது முதிர்ந்த வாளொன்று


நடை திணறிச் சுவரோடு சாய்ந்து நிற்கிறது முன்பெல்லாம் வேண்டாமென்றாலும் கைப்பிடித்துக்

கூட்டிப்போக

அரசனே காத்திருப்பான்


ஆசைதீரப் போர்க்களம் கண்டு சலித்துப்போன இந்நாள்வரை அதன் கூர் நுனியோடு மோதுவதற்கு யாருக்கும் துணிவில்லை இவ்வுலகில் தெரியும் யாவும் தனித்தனித் துண்டுகளால்

ஆனதெனக்

கண்டறிந்த வாள் அது


அப்பேர்பட்ட அதன் முன்னே "எங்கே தைரியமிருந்தால் என்னை

இரண்டாக்கு" என்கிறது ஒரு செங்குளவி கைப்பிடிச் சுருங்கிப்போன வாளிற்கோ சிரிப்பு தாங்கவில்லை எல்லாம் தன் நேரமென ஒதுங்கி நின்றாலும் விடாமல் மோதி உசுப்பேற்றும் குளவி அதன் காலைத் தடுக்கி நிலைகுலையச்

செய்கிறது


தொடர்ந்து அதன் தாக்குதலைச் சமாளிக்க முடியாத அப்புகழ் பெற்ற வாள்


ஒருகட்டத்தில் கீழே சாய்ந்தபோது கேட்க வேண்டிய இரும்பொலிக்குப் பதிலாக வேறேதோ சத்தம் கேட்டது


இப்போது இதில் உண்டான அதிர்ச்சியைவிட இத்தனை நாட்களாக அந்த அட்டையால் தலை துண்டான வீரர்களெல்லாம்

இன்று வசமாய் மாட்டிக்கொண்டனர்.

*************************


இக்கவிதையிலும் வாள் என்ற தன்மையின் கருத்துரு சிதைக்கப்பட்டு, கவிதை திறந்து கொள்ளும் வெளியானது வீரத்தின் கருத்துருவையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 


பல போர்க் களங்களைக் கண்ட புகழ் மிக்க வாளானது தனது முதுமைக் காலத்தில் வெறுமனே மூலையில் சாய்த்து வைக்கப்பட்டு, ஒரு குளவியின் சவாலுக்கு அழைக்கப்படுகிறது. அது குளவியின் அறியாமையைக் கண்டு சிரிக்கிறது. ஆனால் தீரம் மிக்க குளவி அந்த வாளை தன் இடையறாத முயற்சியினால் சாய்த்து விடுகிறது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்கிறது. அது அட்டைக் கத்தியென்பது அதன் சத்தத்தில் வெளிப்படுகிறது. இவ்வாறு வாளின் தன்மையின் கருத்துருவை உடைப்பதால் நிகழும் மறுபரிசீலனையாக இக்கவிதை இருக்கிறது. அதிகாரத்திற்கான உண்மையான இயல்பென்பதை சாதகமான திறன்களைப் புறக்கணித்து, அதன் முகமூடி ஒரு கணத்தில் கழற்றப்படுகிறது. அதே சமயம் பலியான வீரத்தின் ஏமாற்றம் அடைந்த தோற்றுவாயைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இது வரலாற்றை மறுபரிசீலனை செய்கிறது. வரலாற்றின் வெற்றி தோல்விகளை கிளரும் பேருரைகளை முன்னெடுக்கிறது. இதற்கான இலக்கிய உருவம் மிகச் சிக்கலானதலிருந்து கவனமிக்க சிந்தனைகளை உருவாக்க வைக்கிறது. இதுவே ஒரு படைப்பின் ஆகச் சிக்கலான கூரிய உள் பார்வையையும் அரசியல் தெளிவையும் நோக்கித் திருப்புகிறது. நகைச்சுவை வழியாக ஒரு கட்டியங்காரன் கூத்தின் தன்மையை பிரக்ஞையின் இடையீட்டில் மெய்ம்மைப்படுத்தும் செயலே இப்படைப்பின் இயல்பூக்கமாகிறது. இவ்வாறே பல்வேறு வழிகளில் கவிதை தன்னை அர்த்தப்படுத்திக் கொள்வது, அந்தக் கருத்துரு உடைப்பின் வழியாகவே நிகழ்கிறது.


அதே போல மற்றொரு கவிதை...


சரீரா

******


அவ்வளவு எளிதாய்ச் சொல்லிமாளாது


பசியாற்றிக்கொண்டிருக்கும் இந்த மக்காச்சோளத்தை வேகவைக்கப்பட்ட சிரமங்களை


அச்சமயம் இதைத் தூரத்திலிருந்து கண்டபோது அச்சு அசலாக ஒரு பிணமெரிக்கும் காட்சிபோல் இருந்ததாக நகைச்சுவைக்கின்றான் நண்பன்


மேலே தென்பட்ட வெளிச்சங்களைத் திருப்தியாகத் தற்சமயம் எரியும் சிதையில் எறியவிருக்கும்

தின்ற பின்பாக

சோளமற்ற உடலே,


உண்மையாகவே இனி நீ ஒன்றுக்கும் ஆகமாட்டாயா மனம் ஒப்பவில்லையே . . .


இப்போதும் ஒன்றும் தாமதமில்லை


யாருக்கும் தெரியாமல் ஒரே ஒருமுறை எனக்கு உன் பெருவிரலை அசைத்துக்காட்டு போதும் இதிலிருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன்

******


இது மற்ற இரண்டு கவிதைகளைப் போலல்லாமல் அந்தக் கருத்துருவை மிக நுட்பமாகத் தன்னுள் விகசித்து, பின்னர் நொறுக்குவதன் மூலம், கவிதையை திடுக்கிட வைக்கும் அபூர்வ புறமியாக (Subject) மாற்றமடைய வைக்கிறார் கவிஞர்.


மால்களில் அமெரிகன் கார்ன் என்றும், மலை பிரதேசங்களிலும் மக்காச் சோளக் கருதை அனலில் வாட்டி விற்பதைப் பார்த்திருக்கலாம். கவிதை இப்படி ஒரு காட்சியைத்தான் பேசுகிறது. 


ஆனால் வெறும் மக்காச் சோளக் கருது என்ற கருத்துரு இங்கே நொறுக்கப்பட்டு கம்யூனிசத்திற்கு குறியீடாக மாற்றப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அரிவாள் - சுத்தியல்தான். அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு சின்னம் அரிவாள் - சோளக் கதிர். இதை முற்றிலுமாக மக்கா சோளக் கருதாக மாற்றியமைக்கிறது கவிதையின் கருத்துரு. பிளேட்டோ சொல்வதைப்போல கருத்துருக்கள் இந்த பிரபஞ்சத்தின் மாறாத தன்மையுடையவை. அவற்றின் பிரதிபலிப்புதான் நாம் உணர்வது அல்லது பார்ப்பது. நிழல் ஒன்று எவ்வாறு பறக்கும் ஒரு பறவையாகக் காட்சிப்படுகிறதோ, அதைப்போல சோளக் கதிர், மக்காச் சோளக் கருதாக சிதைக்கப்படுகிறது. அதாவது சிதைவு என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றாகக் காணக்கிடைப்பது. 


முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் "துரோகத்தால்" சின்னாபின்னமாகியது என்று 2016 ல் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இந்த இடம்தான் கவிதை தன்னை உருமாற்றிக் கொள்ள தோதாக்குகிறது. 


அமெரிக்கன் கார்ன் என்று குறியீடாக்கப்படும் சோஸலிசம் பிணம் எரிவதைப் போலத்தான் கவிஞருக்குத் தெரிகிறது. கருதின் கட்டமைப்பில் அமைந்துள்ள அத்தனை சோளப் பற்களும் சுட்டு, துரோகத்தால் அல்லது பன்னாட்டு நுகர்வு கலாச்சார சூழ்ச்சியால் கபளீஸ்வரம் செய்யப்பட்டு, சோஸலிசம் என்ற வெறும் கருத்துக் கட்டமைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அது கவிஞருக்கு பெரும் வேதனையையும் ஏக்கத்தையும் தருகிறது. உடனே அவர், அந்த வெற்றுக் கட்டமைப்பைப் பார்த்துக் கேட்கிறார். 


//மேலே தென்பட்ட வெளிச்சங்களைத் திருப்தியாகத் தற்சமயம் எரியும் சிதையில் எறியவிருக்கும்

தின்ற பின்பாக

சோளமற்ற உடலே,


உண்மையாகவே இனி நீ ஒன்றுக்கும் ஆகமாட்டாயா மனம் ஒப்பவில்லையே . . .//


என்று அந்த சித்தாந்தத்தைப் பார்த்து ஏங்குகிறார். உன்னால் இன்னும் உயிருடன் இருப்பதற்கான தன்மை இருக்குமானால், உன் ஒரு கட்டை விரலை அசைத்துக் காட்டு, போதும் என்கிறார். மிகச் சிலிர்ப்பான இடம் இது.


படைப்பாளி ஒரு சித்தாந்தத்தின் மீது கொண்டுள்ள பற்றையும் அதை மீட்டுருவாக்கம் செய்ய, தான் ஒரு மீட்பராக மாறுவதற்கு ஆயத்தமாகிறார். மிகையில் கோர்பச்சோவ் அதை இவ்வாறு தனது பேட்டியில் சொல்கிறார்.


"எங்கள் முதுகுக்குப் பின்னால் துரோகம் இழைக்கப்பட்டிருந்தது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க அவர்கள் வீட்டையே கொளுத்தி கொண்டிருந்தனர். அந்த முயற்சி அதிகாரத்தை பெறுவதற்காக மட்டுமே. ஜனநாயக வழிமுறைகள் மூலம் அவர்களால் அதனை பெற முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு குற்றமிழைத்தனர். அதுவொரு ஆட்சி கவிழ்ப்பு" என்று  கூறுகிறார்."


ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியை, துரோகத்தின் மூலம் நடந்த நாடகத்தை அல்லது மேற்கொண்டு நிலைபெற முடியாத அளவிற்கு சிதைந்துவிட்ட ஒரு சித்தாந்தம், அதன் மூல எண்ணத்திலிருக்கும் நற்பண்புகளால் மீள உருவாக்கம் கொள்ளுமா என்பது கவிதையின் உள் வெட்டு. வெளிப்படுத்தப்படாத நோக்கங்கள் என்பவற்றிற்கும் ஒரு விளைவு வெளிப்புறமாக இல்லாவிட்டாலும், உட்புறமாக அதன் ஒழுங்கு செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும் என்பதற்கான நெகிழ்வானக் கவிதை இது.


இங்கே கவிதையின் தலைப்பன, "சரீரா", என்பதும் மற்றொரு கருத்துரு சிதைப்பின் சுவாரஸ்யம்தான். இதை கண்டடைவதே படைப்பனுபவத்தின் மற்றொரு சாத்தியம்.


ஒரு தொகுப்பின் கவிதைகளின் வகைமை பற்றிய புரிதலை அடையும் வாசக மனமானது, தன்னையும் அறியாமல் கருத்து முறையிலும், கலை முறையிலும் கவிதைகளின் குணாதிசயங்களை தொடர்ந்து அந்தத் தொகுப்பு முழுமைக்குமான ஒரு சரடை பின்ன முனையும். அதன் தொடர்ச்சியில் உண்டாகும் நெருடலை முடிந்த வரையிலும் அறநெறிகளின் பால் புரிந்து கொள்ளவும், அதன் புதிய சிந்தனைப் பழக்கத்தை அடையாளம் கண்டு கொள்ளவும் முயல்வதே தீவிர வாசிப்பாகிறது.


தொகுப்பின் மற்றுமொறு கவிதை...


புரைபோகும் கதவு

***********************

வெறிபிடித்தாற்போல் தட்டிக்கொண்டே இருக்கின்றான் 

கதவிற்கோ பயங்கரமாய்ப் புரைபோகிறது 

துணைவியோடு நான் துகில் மறந்து தூங்கும் இந்நேரம் ஏறக்குறைய இருபதுமுறையாவது தட்டியிருப்பான்


திறக்கவேயில்லை என்பதால்


கதவின்மேல் நெருப்பு நெருப்பென்று எழுதிவைக்கத் துவங்கினான்


எரியும் வீட்டிலிருந்து பாதி இறந்துபோய் வெளியேவந்த நான் அவனையும் கைப்பிடித்து உள்ளே இழுத்தேன் அவனோ 'அப்படியெனில் இந்நேரம் உன் மனைவியும் அறையில்

நிர்வாணமாகத்தானே கிடப்பாள்' என்று துள்ளிக் குதித்தபடி உள்ளே போனான் அதற்குள் நல்லவேளையாக அவள் முழுவதும் எரிந்துவிட்டாள்.

*************************************


இக்கவிதையில் கதவு என்ற கருத்துருவுடன் நின்றுவிடாமல் பல கருத்துருக்கள் உடைக்கப்படுகின்றன. ஆனால் அதன் மையக் கருத்தானது தொகுப்பின் சுவாரஸ்யத் தன்மையைத் தக்க வைத்தாலும் பிற்போக்கு கருத்தியல் ரீதியிலான அம்சங்களை நீக்க முடியாத சிக்கல் எழுகிறது. 


இந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்கு ஹேராமின் அபர்ணாதான் ஞாபகத்திற்கு வருகிறாள். ராமின் மனைவி அபர்ணா. பகலில், கரிந்துபோன உணவைப் பொருட்படுத்தாது, கலவியில் கலைத்துப்போய் கிடக்கும் அவர்களை ஒரு தீவிரவாத கும்பல் கதவு, ஜன்னல் வழியாக உள் நுழைந்து, ராமை கட்டிப்போட்டுவிட்டு, அபர்ணாவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து பிறகு கழுத்தை அறுத்துவிட்டு ஓடி விடுகின்றது. இது திரைப்படத்தின் காட்சி. 


ஜடப்பொருளான கதவுக்கு, விடாமல் தட்டுவதால் புரை ஏறுகிறது என்பதால் தட்டுபவன் Zomotoவோ, Swiggyயோதான் என்று தோன்றுகிறது. மனைவியோடு துகில் மறந்து தூங்குவதென்பது ஹேராமில் வரும் காட்சியை ஒத்த மனப்பான்மையையே நமக்கு ஏற்படுத்துகிறது. கவிதையில் டெலிவரி பாய், தட்டி தட்டி கோபமுற்று, இந்தக் கோபம் அந்த நியூக்ளியர் குடும்பம் நுகர்வு கலாச்சாரத்திற்கு எதிராகத் திரும்பிவிட்டதோ என்று அக்கலாச்சாரத்தின் தூதுவனாகக் கோபம் அடைந்து புரையேறியக் கதவின் மேல் நெருப்பு நெருப்பு என்று எழுதி ஒட்டிவிடுகிறான். வீடே பற்றி எறிகிறது. கவனிக்க, இந்த அமைப்பு, நெருப்பு என்று எழுதினாலே அது உண்மையான நெருப்பாகி வீட்டை எரிக்கத் துவங்குகிறது. அதன் வலிமை அபரிதமானதாக இருக்கிறது. எரியும் வீடு என்பது வாசகனின் மனதில் ஏற்படுத்தும் தாக்கமானது மிக வலுவானது. அது தார்க்கோவ்ஸ்கியின் பற்றி எரியும் வீடு காட்சியமைப்பின் எண்ண வலுவை ஞாபகப்படுத்தாமலில்லை. அப்போது பாதி எரிந்த நிலையில் கதவைத் திறந்து, டெலிவரி பாயையும் எரியும் வீட்டினுள் இழுக்கிறான். அவனது நிர்வாண கோலம் கண்டவன், நிலைமையை ஊகிக்கிறான். சந்தர்ப்பவாதியான நுகர்வு கலாச்சாரத்தின் பிரதிநிதி ஒரு கணம் சலனமுற்று, 'அப்படியெனில் இந்நேரம் உன் மனைவியும் அறையில்

நிர்வாணமாகத்தானே கிடப்பாள்' என்று துள்ளிக் குதித்தபடி உள்ளே போகிறான். அதற்குள் நல்ல வேளையாக அவள் முழுவதும் எரிந்துவிட்டாள் என்று எரியும் கவிஞன் சமாதானமடைகிறான். இதுவரை கருத்துரு உடைப்பின் சாதகத்தில் மேன்மையடைந்த கவிதையானது வாசகனை மேற்கொண்டு இதே மனப்போக்கில் முன்னேற முடியாமல் தடுமாற வைக்கிறது. இங்கு கற்பு என்ற சாயல் எடுத்தாளப்படுகிறது. சதி போல கவிஞன் அவன் மனைவியை முற்றிலுமாக எரித்துவிடுகிறான். சதியில் கணவன் இறந்து பிறகே அவன் சிதையில் மனைவியைத் தள்ளி எரிப்பார்கள். ஆனால், கவிதையில் இன்னும் சாகாத கணவனே, மனைவி முழுவதுமாக எரிந்துபோயிருப்பாள் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவது, கருத்துரு உடைப்பைப் புறந்தள்ளி ஒரு கொடூரனாக, மனநோயாளியாகக் காட்சியளிக்கிறான். இங்கே கவிதையின் கருத்தியல் என்பது சுவாரஸ்யத்தைத் தந்தாலும் பிற்போக்குத் தனத்தின் பிரதியாகத் தோற்றம் அளிக்கவே செய்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கையில் முற்போக்கு சிந்தனையின்பால் இந்தக் கவிதையை நகர்த்த முயன்றால், அது தற்கால ஒரு கணவனின் சமூக மன அமைப்பைப் பிரதிபளிப்பதாகக் கொள்வதென்றாலும் அதுவும் கவிதை, அதற்கு எதிர்ப்புறமாகச் செயல்படும் தன்மையைத் தரவேண்டிய சிக்கலை ஏற்படுகிறது. 


படைப்பின் வீர்யம், முற்றிலும் நற்பண்பைக் கொண்டிருக்காவிடினும் நிகழ்காலத்து வாழ்க்கையின் மெய்மையைப் பிரதிபளிப்பதாக மட்டுமல்லாமல் அத்தகைய நோய்க்கூறுகளின் அபத்தத்தையும் அது எவ்வாறு இந்த மனித இன தொடர்ச்சிக்கு இடையூறாக இயற்கையின் சமநிலையைக் குலைத்து அதிகாரத்தின், ஆணாதிக்கத்தின் ஆணவக் குரலாக வென்று வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.


பெரு. விஷ்ணுகுமாரின் அசகவதாளம் கவிதைத் தொகுப்பு கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு விடுபடல் என்பதைக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் முற்றாக விளங்கிக் கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். 


ஒரு படைப்பாளியை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தப் படைப்பாளியின் சின்னஞ்சிறு லட்சியங்களை மதிப்பிடுவதில் அவர்களது உயர்ந்த படிநிலை அல்லது தத்துவ கருத்தாக்கம் முன்னிலை பெறுகிறது.


தொகுப்பில் "சாகாவரம்" கவிதை ஜென் தத்துவத்தின் சாயலைப் பேசுகிறது. "பதற்றத்திலிருந்து வெளியேறியக் காட்சிகள்" கவிதை மரபார்ந்த மதிப்பீட்டின் புனிதத்தை உடைக்கிறது. "கும்பகர்ணனின் தலையணை", "இரை", என்று கவிதைகளை நாம் திறந்து கொள்ளும் கருத்தாக்கம், வழக்கமான சொல்லாடல்களால் வழக்கத்திற்கு மாற்றான ஒவ்வொரு வாசகனுக்குமான தனிப்பட்ட விடுபாடாக அமைவது மிக சுவாரஸ்யமானதுதான்.


கடைசியாக ஒரு கவிதையை எடுத்தாள்வதன் மூலம் இந்தக் கட்டுரையை, இந்தக் கவிதைத் தொகுப்பை இறுதியான சிருஷ்டி நிலை குறித்த கருத்தாக்கத்தினால் மனித மெய்ம்மையை கவிஞர் எப்படிப் பார்க்கிறார் என்ற நிலைக்கு வந்துவிடலாம்.


அந்தக் கவிதை,


சிறுகோட்டுப் பெரும்பாடல்

********************************

சுவரில் உண்டானால் விரிசல் 

பாறையில் என்றால் பிளவு 

வானத்தில் என்றால் வேர் 

அகன்று நின்றால் தூண் 

காகிதத்தில் கோடு 

வரைபடத்தில் பாதை 

பூவில் காம்பு 

விளக்கில் திரி 

நெளிந்தால் புழு 

மீட்டினால் தந்தி 

தேகத்திலோ நரம்பு ·.· 

அதென்ன அநியாயம்? 

எவ்வளவு நேரமானாலும் 

தீப்பந்தத்தின் நுனியைவிட்டு நகராத நெருப்பு தீக்குச்சியில் மட்டும் அத்துமீறுகிறது 

வேறுவழியின்றி இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் நண்பா 


ஒருபோதும் நம்மால்

ஒரு நேர்கோட்டைத் தலைகீழாய் வரையமுடியாது.

********


//ஒருபோதும் நம்மால் ஒரு நேர்கோட்டைத் தலைகீழாய் வரையமுடியாது.// என்பதுதான் அந்த மகத்தான விடுபடலாக இருக்கிறது. 


ஆனால் மனிதனின், தன்னுடைய புரிதல் எல்லைக்குள் எல்லாவற்றையும் வரையறுத்து, அதன் கருத்தாக்கங்களின் பயன்பாட்டு சாத்தியங்களின் இசைவை நோக்கியதொரு தன்மையானது அந்தக் கோட்டிற்கு A, B என்ற புள்ளிகளாக வரையறையை பாவிக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட ஒரு நுண்ணறிவு. இதன் செயல்பாட்டுத் தன்மை என்பது அதீத இயற்கையின் தன்மையைத் தன்னுடைய ஆக்கக்கூறுகளுக்குத் தேவையானதாக 

மடைமாற்றும் தேவை என்பதுகூட இயற்கையின் ஓர் அம்சமாகத்தான் இருக்கிறது.


இது அந்தத் தலைகீழற்ற கோட்டை தனது தேவைக்கேற்பத் திருப்ப முடிகிறது. அதன் மூலம் இந்த வாழ்க்கையை எவ்வாறு தனக்குச் சாதமாக மாற்றுவது என்பதன் மூலம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த அதி இயற்கைக்கு எதிரான தனது பயணத்தைத் திருப்புவதால் நடக்கும் எதிர்விளைவுகளையும் அதற்கான அதிகபட்ச சிதைவின் வரம்பெல்லையை வரையறுப்பது என்பதை தப்பித்துக் கொள்ளுதல் என்று எவ்வாறு நம்பமுடிகிறது?


தொகுப்பு இந்த இடத்தில்தான் தன்னை நிரந்தரமான பிரபஞ்சத்தின் கருத்துருக்களிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்வதாகக் கொள்ளலாம். எப்படி முடிவற்ற கோடாயிருக்கும் ஒரு புள்ளியை, பல புள்ளிகளின் மூலம் குறிப்பிட்ட எல்லைகளுக்கு நிகழ்த்திக் காட்ட முடிகிறதோ அதேபோலத்தான், அந்தக் கருத்துருக்களின் ஒருவகையான பிரதிபலிப்புக்கு ஆட்பட்டு, அதுவே சாஸ்வதம் என்று மொழியை, கருத்தாக்கங்களை மெய்மை என்று நின்றுவிட்ட ஓரிடத்தில்தான் கவிஞர் அவற்றை அதிர்ச்சிகரமான உத்திகளாக அன்றாடங்களின் வழியாக புதிய கருத்தாக்கங்களின் தன்மையிலிருந்து விளங்கிக் கொள்ள முடியாத மதிப்பீடுகளாக முன்வைக்கிறார். இந்த உத்தி தமிழுக்கு புதியது. இதை விளங்கிக் கொள்ள வாசகன், அதன் சுவாரஸ்யத் தன்மையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். இந்த விடுபடலே கவிதையைத் தர்க்கங்களை நோக்கித் திருப்புவதன் மூலம் தனிமனிதன் சாராத செயல் தன்மையுடைய தத்துவத்தைக் காட்டுவதாக அமைகின்றன.


நிச்சயமாக இத்தொகுப்பு மிக சுவாரஸ்யம் மிக்கதாகவே இருக்கிறது.


"சாகாவரம்" கவிதை இப்படி முடிவதே அதன் சாதகம்தான்.


***************************************

நீரில் எறியப்படும் 'தவளைக்கற்கள்' அணைக்கட்டின் மார்பை அமிழ்த்தி அமிழ்த்திச் சோதனையிடுகின்றன. மூழ்கவேண்டிய நேரம் வந்தால் உடனே மூழ்கிவிடும் எத்தனையோ கற்களுக்கு மத்தியில்


இந்த வயதிலும் திராவகத்தில் நடந்துபழகும் சாக்கில் தன் சாவையே ஒத்திப்போடும் லாவகம் இங்கே எத்தனை பேருக்கு வாய்த்திடும்


ஆனால் இன்னமும் நாம்


நீருக்குள் நுழையும் வழிமறந்த கற்கள்தான் சலனத்தின் மேற்பரப்பை முட்டிமுட்டித் திறக்கின்றோம். மூழ்கினாலும் நனையாமலிருப்பதற்கு

*******************************************


எளிமையான கவிதைகளை கடினமான ஒரு மொழியில் விளங்கிக் கொள்வதென்பதும் ஒரு கருத்துரு தகர்ப்புதான்.

                                      - சாகிப்கிரான்

******************************************
கல்குதிரை இதழில் வெளியான கட்டுரை

Sunday, August 21, 2022

நகுலனின் முழுமையடைந்த தன்னலம்

 

நகுலனின் முழுமையடைந்த தன்னலம்

-           சாகிப்கிரான்


”வாழ்க்கை பற்றிய ஆய்வறிவின் விளைவு, யதார்த்தம் பற்றிய அந்த படைப்பளியினுடைய கலாபூர்வமான பிடிப்பேயாகும்”

-           கான்ஸ்டாண்டின் ஃபெடின்

நகுலனின் கவிதைகளை வாசிக்கும்போது திரட்சியாகத் தோன்றும் எண்ணமும் இதுதான்.

நகுலனின் கவிதைகளை, எட்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1.         எழுத்து காலக் கவிதைகள்

2.         இரு நீண்ட கவிதைகள்

3.         மூன்று கவிதைகள்

4.         ஐந்து கவிதைகள்

5.         கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

6.         சுருதி கவிதைகள்

7.         இறுதி பத்தாண்டு கவிதைகள்

8.         மஞ்சள் நிறப் பூனைக்குட்டி

 

1          எழுத்துக் காலக் கவிதைகள்

வெறுமையான பாதுகாப்புணர்வைத் தவிர ஒரு மனிதனுக்கு அவன் உணரக்கூடிய வகையில், அடியாழங்களில் எதுவுமே இல்லாத சூன்ய நிலையே அவனுக்கான நம்பிக்கையாக இருந்துவிடுகிறது. இது ஒரு வகையில் படைப்பாளியின் மனநிலையாக இருக்கலாம் என்பதைவிட, படைப்பாளி என்பவன் தன்னை திணித்துக் கொள்ளும் ஒரு பொந்தாக நாம் கற்பனை செய்து கொள்ளலாம். பொந்தின் இரு முனை சாத்தியம் என்பது ஒரு பக்கம் இயல்பு வாழ்வு எனும் இயற்பியலும் மறுபக்கம், சூன்யமான பொந்திருட்டும் அவனுக்கான சுய தரிசனமாக மாறிப்போன அதீதமும் அவனைத் தவிர யாரும் அடைந்துவிட முடியாத ஆழ்ந்த உள்ளடக்கமானது எப்போதும் அதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தை அல்லது நமக்கு தோதான வகையில் அதை மாற்றிக் கொள்ளும் எளிய வழி முறைகளையையே பின்பற்ற வைப்பதை விட்டு யாரும் விலகிவிட முடியாத ஒரு பொந்துதான் எல்லோருக்குமானது.

அது

காதலுக்குப் பின்

தொழிலின் இறுதியில்

உலகைவிட்டுப் பிரிகையில்

சாவுக்கு அப்பால்

முதலுக்கும் முடிவுக்கும்

முன்னும் பின்னும்

முழுவதுமாகப்

பின்னிப் பிணைந்து

நில்லாமல் நிற்பது

இல்லாமல் இருப்பது

தெரியாமல் தெரிவது

சொல்லாமல் சொல்லிக் கொள்வது

எல்லோரும் நினைப்பது

யாவரையும் கடந்தது

புலனுக்குப் புரியாதது

பொருளுக்குச் சிக்காதது

என்றுமே கேள்வியாக

எஞ்சி நிற்பது

அது அதுவே.

 

ஜீவராசிகள் என்றுமே காலத்துக்கானவை. மனிதனும் அதிலிருந்து தப்ப முடியாது. நகுலனின் எழுத்து காலகட்ட கவிதைகள் யாவும் “எஞ்சி நிற்கும் அது அதுவே” என்பதைத் தேடியே நிற்கின்றன. இது அந்த இரண்டாம் உலகப்போரும் அதைத் தொடர்ந்து மனிதன் தனது சுயத்தைத் தேடும் இத்தகைய சிதைவுக்குத் திரும்பும் செயலும் இயல்பான காற்றைப்போல பொருந்திக் கொண்டது, தமிழ் இலக்கியத்தில் மிகச் சிலரே. அதில் நகுலன் மிக முக்கியமானவராக இருக்கிறார். சி. மணி இதை வேறு தளத்திற்கு கொண்டு சென்றார். அந்த வித்தியாசமே நகுலனின் உள்ளிணைந்த சாத்தியம்.

இந்த மனோநிலையின் பின் விளைவுகளே, நகுலனின் பிற்பாடு நிகழ்ந்த அனைத்து படைப்பு செயல்களிலும் லயிப்பு நிலைக்கு அப்பால் அவரைக் கொண்டு சென்று, அதன் தன்மையாக அவரை பதிலீடு செய்கின்றது. எல்லா படைப்பாளியும் எல்லைக்கு உட்படாத பிரக்ஞையிலேதான் தனது வாழ் களம் அமைந்திருப்பதாக நம்புகிறான். ஆனால் அது ஒரு பாவனையே. ஒருவன் படைப்பாளியாகும்போதே அவன் அந்த எல்லையை பிரக்ஞையின் பூரண வடிவமாக கருதிக் கொள்கிறான். அத்தகைய பூரணத்துவம் என்பதை அந்த விழிப்புணர்வின் எல்லையில், தான் இல்லை என்பதை மீட்டெடுக்கும் மற்றொரு மையமே அது.

 

2. இரு நீண்ட கவிதைகள்

மழை: மரம்: காற்று கவிதையில்

எப்போது நான் அவைகளைப் பார்க்க விரும்புகிறேனோ

அப்போது இந்தச் செய்தி என்னைச் சாகடிக்கும்.

எனவே, எனக்கு ரஷை, நான் நினைக்கிறேன்

எனது இயல்பான நிலைக்கேற்ப

ஜன்னலின் கண்ணாடிச் சாளரத்தில்

என் கண்களால் பார்க்கப் பார்ப்பது

எங்கே மற்ற ஜீவன்கள்

தங்கள் கண்களை வைக்கின்றனவோ

அங்கே கதிரவனின் ஒளிக்குக் கூசாமல்.

 

இரு நீண்ட கவிதைகளின் சாராம்சம் இதுவே. நகுலன் தன்னை, பறவையே தன்னைப் பார்க்கிறதுபோல, ஒரு மனிதனே தன்னை வெளியிலிருந்து பார்ப்பதைப் போல, ஒரு பிரக்ஞையே அந்த பிரக்ஞையை தரிசிக்கும் ஒரு அதிநிலையைக் காண்கிறார். ஆனால் அந்த நிலை தன்னைக் கொன்றுவிடும் என்ற அறிவு, அறியப்படுவதிலிருந்து வேறானது. கிட்டத்தட்ட முழு முற்றான எளிமையாக்கலாகும். எழுத்து கால கவிதைகளிலிருந்து நகுலன், புற காரணிகளின் மாயையிலிருந்து விடுபட்டு மாயையிலிருக்கும் புறக் காரணிகளை அடையாளம் காண்கிறார். இத்தகைய உள்பார்வையே தனது உந்தித் தள்ளும் அறிவார்வம் முழுவதையும் இத்தகைய தரிசனத்தை நோக்கி திருப்பினார் என்பதைக் காட்டுகிறது.

 

 

 

3. மூன்று கவிதைகள்

நகுலனே சொல்வதைப்போல வெறும் கெட்டிக்காரத் தன்மையால் ஒரு வகையான புரியாத் தன்மையை சிருஷ்டிப்பது என்பதை படைப்பில் ஒரு போலியாகவே இருக்கிறது. ஆனால் படைப்பின் உச்சகட்டம் என்பது ஒரு அபூர்வ எளிமையே என்கிறார்.

மூன்று கவிதையில் இராவண சோகம் என்ற நெடுங்கவிதையில் தன்னுடைய பார்வையில் ஒரு ராவண காதையைப் படைக்கும் நகுலன், அதற்கு அடுத்ததாக வரும் கவிதையை வெறும் நன்கு வரிகளில் முடிக்கிறார்.

நான்

எனக்கு

யாருமில்லை

நான்

கூட . . .

இதை ஒரு வறண்ட நிலை என்பதை விட, ஒரு நெருக்கடியிலிருந்து வெளியேறுதல், தன்னிலிருந்து ஒரு விளிம்பு நிலைக்கு சட்டென மனம் சென்றுவிட்ட ஒரு அவசம்தான் இது. நிஜ வாழ்க்கையும் பிரச்சனைகளும் தனக்கே உரியதாக ஆகிவிட்டாலும் மன உள்ளமைப்பில் மாறாத ஒரு தரிசன வட்டத்தை அவனுக்கு வழக்கியபடியேதான் இந்த பிரபஞ்சம் இருக்கிறது.

 

4. ஐந்து கவிதைகள்

குகன், வீடணன் போன்ற இதிகாச கதாபாத்திரங்களில் வாழும் நகுலன் தொகுதியின் முடிவில் வைக்கும் ஒரு கவிதை, பூ, ஒற்றை எழுத்து,

 

தெரிந்ததுதான்

இப்போது இன்னும்

தெளிவாகவே தெரிகிறது.

காசியபன் சொல்லவில்லையா?

அல்லது சொல்கிறாரா?

”சொல் ஓர் அடையாளம்

அடையாளத்துக்கு

அடிமைப் படாதே

ஏமாந்து போவாய்”

சொல்லுதல் என்பதுகூட

ஓர் ஏமாற்றம் என்பதுதான் போலும்

உதாரணமாக

“கூடவே சுமந்து வரும்

என் கடவுளுக்கு.”

காசியபன் சொல்வது போல்

சொற்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா?

அல்லது கவிஞன் செற்களைத்

துகிலுரித்துக் கொண்டே இருக்கிறானா?

ஏதோ ஒரு வெறி

எங்கிருந்தோ ஒரு வேகம்;

’’பூ’’ என்று உதறிச் சென்று

நான் என் பயணத்தைத் தொடர்கையில் கூடா

அந்த சாஷாத் சந்தர்ப்பத்தில் கூடப்

பூ என்னைக் கண்டு

சிரிக்கிறது – தோன்றுகிறது

”சாரலின் கடுஞ்சினத்தில்” கூடப்

“பூ மோகம்” உன்னை விடுவதில்லை

அர்த்தமற்ற பெரு வெளியில்

இதழ் இதழாக

ஒரு பூ விரிவதைக் கண்டு

பூ என்று உதறி எழுந்து

போக விரைந்தவன்

பூ என்று சொல்லி

வாயடைத்து நின்றேன்.

புதுக் கவிதை வரலாற்றில் ஒவ்வொரு கவிஞனும் நெடுங்கவிதைகள் எழுத முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். நகுலனின் காலத்தில் எலியட்டின் பாழ்நிலம் கவிதை இதுபோன்ற ஒரு உத்வேகத்திற்கு காரணமாக அமைந்தது. எலியட்டின் மாதிரியை சி. மணி முயன்று பார்த்தார். ”அதுவே தமிழின் ஆகச் சிறந்த நெடுங்கவிதையாக” சி.சு.செல்லப்பாவால் எழுத்தில் இந்த அடைமொழியோடு வந்தது. ஆனால் நகுலன் அத்தகைய நேரடி முயற்சியைச் செய்யவில்லை. அவர் அசலான தன்னியல்பான நெடுங்கவிதைகளை எழுதினார். பிரமிளும் அப்படியே. ஒரு சந்தர்ப்பத்தில், சி. மணியிடம் கேட்டபோது, “செல்லப்பா சொல்றாருங்க” என்றார். அது தொக்கிய ஒரு கேள்வியாகவே நின்றுவிட்டது.

ஆனால் நகுலன் கவிதைகள் முற்றிலும் வேறானவை. ஒரு கவிதைக்கான மூல எண்ணத்தை வந்தடைவது என்பது அது தனது சொந்த அகவயமான உணர்ச்சிகளையும் மனோபாவங்களையும் புறவயமாகப் பாவிக்கவும், படைப்பாற்றலில் அதன் அழிக்கமுடியாத இடத்தை அடைவது தன்னியக்கமான, பிரக்ஞையினுள் அதை அறிவுபூர்வமாக புரிந்து கொள்வதிலிருந்து விடுபட்டு, சமகால நிலைமைகளால் மேலும் நுணுக்கமடையும் எல்லையில் திடீரென தன்னை செலுத்திக் கொள்வதென்பதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கிறது. இது ஒருவகையில் வழக்கமான உத்திகளிலிருந்து தன்னை முற்றிலுமாக உரித்தெடுத்துக் கொண்டிருக்கும் ஒன்று.

 

5. கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

கேள்வி பதிலாக, அல்லது வெறும் கேள்விகளாக கவிதைகளை உருவாக்குவதென்பது, இந்த மனோபாவம் அவரது தீவிர தர்க்க தூண்டலின் ஒரு வெளிப்பாடாகவே இருக்கிறது. அசாரதணமான இணை முரண்கள் மோதிக் கொள்ளும் தருணத்தின் குறுக்கே உருவாகும் கண நேர செயலின்மையே உள்ளடக்கமாக முடிவற்ற எல்லைகளாகக் கவிதைகளை மாற்றுகின்றன.

தாடி, என்றொரு கவிதையில்,

 

தன்னையே

ஒருவன் தாண்டிச் செல்லும்

நிலை எய்துகையில் இடுப்பிற்கு

மேல் தலைக்குக் கீழ் ஒரு தாடி

காற்றில் அசைகிறது உடல் –

விருஷத்தில் இந்தப் பொந்தில்

ஒரு பறவை வந்தமரும்

விந்தை. தாடியில் அவன்

மறைந்துவிடுகிறான்.

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் நகுலனின் அடுத்த பரிமாணம். இது ஒரு வகையில் பல கவிதைகளை அல்லது அப்படிப்பட்ட அனுபவ வெளிகளை ஒரு கருந்துளைக்குள் சிதறடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது இங்கே மையத்திணிவு ஒன்றைத் தவிர, ஏன் தர்க்க ரீதியாகக் கூட ஒரு வடிவ செறிவு அதன் எளிமையான மொழியாக்கத்தால் வெறும் உள்ளீடற்ற சட்டகங்களின் தொகுப்பால் விளைந்த ஒரு நிலையில்லாத மாயத் தோற்றமாக மாற்ற முடிவது மிக வியப்பானதே. இந்த பிரபஞ்சத்தில் யாவும் மெய்யான இருத்தல் என்ற நிலையிலிருந்து இன்மையாகவே இருக்கின்றன. கோடான கோடி ஓளியாண்டுகள் தள்ளி நாம் பார்க்கும் இக்கணம் இல்லாமலிருக்கலாம். ஆனால் காலம் மற்றும் வெளி என்ற நீட்சி அந்த இருத்தலைச் சாத்தியப்படுத்துகிறது. நகுலனும் இந்த நிலையில்தான் தனது கவிதையில் வந்தடைகிறார். ஒவ்வொரு தர்க்கமும் ஒன்றை மற்றொன்று இல்லாமலாக்கி, கடைசியில் அங்கே புதிர் தன்மை வாய்ந்த ஒரு தரிசனத்திடம் நம்மை கொண்டு செல்கிறார். ஒரு நிலை மற்றொரு நிலையை பிரதிபலிப்பதும், அத்தகைய சாதரண நிலையிலிருந்து பிரதிபலிப்பு நிலைக்குச் செல்லும் தன்மை, கவிதைகளை தர்க்கத்தின் பெலஹீன தன்மைகளிலிருந்து தப்புவித்து வாசகனுக்கு புதிய திறவுகளைத் தருவதாக மாற்றுகிறது.

 

கவிதை 76

இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது

நவீனன் இருந்தபோது

(இப்பொழுது அவன் இல்லை)

நான் ஒருமுறை அவனிடம்

கேட்டதும் அவன் பதில்

கூறியதும்

“ஒரு எழுத்தாளன் என்ற வகையில்

உன் கோட்பாடு என்ன?”

அவன் சிரித்துக் கொண்டே

உத்தர வேதத்திலிருந்து இரு

வரிகளைத் தீர்க்கமாக உச்சரித்தான்:”தவம் செய்வார் தம் கருமம் செய்வார்

மற்றல்லார் அவஞ் செய்வார் ஆசையுட்பட்டு”

 

6. சுருதி கவிதைகள்

படைப்பாளியின் குலைந்துபோய்விட்ட தன்னிலையை ஒரு எல்லை வரை நம்மால் பின்பற்ற முடியும். அது மனித சிந்திக்கும் திறனின் உள்ளியல்பின் ஒரு பக்கவாட்டு சாத்தியம். நகுலன் தொடர்ந்து எழுதியது எதற்காக என்ற கேள்விக்கான விடையாக இக்கவிதைகள் நிற்கின்றன. தான் என்னவாக ஆகவேண்டும் என்று அவர் கவிதைகள் நினைத்தனவோ, அதுவே இக்கவிதைகள்.

 

குரூரம்

 

ஒருவர்

சாவதும்

ஒருவர் இருப்பதும்

வெறும் சாவு

என்பதைவிட

இது

மிகவும் குரூரம்

இதைச் சொன்னதும்

சுசீலாதான்.

தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக, புதுக்கவிதையில் தனது இறுதிக் காலங்களில் எழுதிய படைப்புகள் உச்சம்பெறுவது நகுலனிடம் மட்டுமே. அவர் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்பதைவிடவும் தான் அடைய வேண்டிய எல்லையை எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றிக் கொள்ளவில்லை. அல்லது அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தைத் தவிர்த்தார் என்றோ, அத்தகைய ஆன்ம உணர்வின் சுயம் செயல்வடிவம் கொண்ட மொழியைக் கற்பித்துக் கொண்டது என்றோ கருதிக் கொள்ளலாம்.

ஒரு படைப்பாளி, தனது மத்திய காலத்தில்தான் உச்சம் பெறுகிறான். அத்தகைய பயிற்சியானது, அதாவது தொடர்ந்த செயல்பாடு என்பது இறுதிக் கட்டத்தில் வீரியம் இழந்துவிடுகிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட முடிவற்ற தேடு பொருள் என்று எதுவும் சாத்தியமில்லை. இவை அத்தகைய அனுபவ திரட்சி என்று உள் மனம் கண்டு கொள்வதுதான் தன்னுள் தொடர்ந்த மாறுபாடுகளை உண்டாக்கும் நிலையை அவன் அடைகிறான். இது பொதுவாக சாத்தியமில்லை. ஏனென்றால் உள்ளுக்குள் செயல்படும் ’செயல்படும் தன்மையானது’ முடிவில் செயலற்றுப் போகிறது. ஆனால் நகுலன் பரந்த நோக்கம் பெரும் மனோபாவங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதுவே அவரை தொடர்ந்து அத்தகைய தேடலை அது உடல் சார்ந்து ஏற்படும் ஒரு தினவுபோலல்லாமல், உள்ளம் சார்ந்த எதிர் வினையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு மனோநிலையின் தேர்வு என்று ஆழ்ந்து யோசிக்கும்போது புரிந்து கொள்ளமுடிகிறது.

 

7. கடைசி பத்தாண்டு கவிதைகள்

ஒரு பூ

ரோஜா

என்றுதான்

வைத்துக்கொள்

 

அதன்

இதழ்கள் மணம்

பச்சையில்

சிவந்த முட்கள்

அதைச் சுற்றி

ஒரு வண்டு

அதன்மீது காணும்

மகரந்தப் பொடி

 

காலை மலர்ந்து

மாலை மறையும்

அதன் சாகரம்.

 

சி. மணி கடைசி காலங்களில் எழுதியக் கவிதைகளை க்ரியா ராமகிருஷ்ணன், “இவற்றை கவிதைகள் என்று எவ்வாறு எடுத்துக் கொள்வது?” என்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். மணி என்னிடம் வெடித்துச் சிரித்தார். இருவருமே இல்லை. ஆனால் இந்த நிகழ்வு இருக்கிறது. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமக்கானவையாக, நமக்கு மிக நெருக்கமாகத் தோன்றுபவையே, ஒரு நேரத்தில் கண நேரத்துக்கானது. அதன் ஊசலாட்டம் அதை எதிர் கொள்ளும் நமது அப்போதைய மனோபாவத்தை சார்ந்தே உள் வாங்கப்படுகிறது. ஒரு மனிதனின் அகச்சாரமென்பது மற்றொரு மனிதன் எளிதில் கண்டு கொள்ளப்படும் விதத்தில் இருந்துவிடுவதில்லை. பிரக்ஞையின் தனித்தன்மையில் செயல்படும் தேடல் உணர்வென்பது கணத்துக்குக் கணம் தன்னை இட்டு நிரப்பிக் கொள்கிற ஒரு தன்மையின் அடித்தளமாக உள்ள வியப்பான தூண்டல். இது பெரும்பாலும் நிரம்பிவிடுகிற தன்மையைக் கொண்டிருந்தாலுமே, ஒரு சில ஆளுமைகள் அல்லது மனிதர்கள் அப்பாத்திரத்தில் ஒரு கசிகிற ஓட்டையை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நகுலன். எப்போதும் நிரம்பிவிடாத தொடர்ந்த சமநிலையிலேயே பேணப்படும் அத்தகை தன்மையை, நிறைந்து பொங்கும் ஆத்மாக்களால் புரிந்து கொள்ள முடியாதுதான்.

இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று செயல்திறன் மிக்க வழியில் செயல்படும் மனம். இரண்டு உள் ஒடுங்கிய பித்துநிலை. இதில் முதலாவது அதிமனித அம்சங்கள் உள்ள ஒரு இறுதி நிலை. அல்லது இன்னும் விரல்கள் தொடாத ஆனால் வாசிப்பிலிருக்கும் ஒரு இசைக் கருவியின் தந்திகள். இது கோடான கோடி சாத்தியங்களை உள்ளடக்கியது. இரண்டாவது நிலை என்பது முதல் நிலையின் செயல்படு நிலை. இது வெறும் பார்வைக்கு அர்த்தமற்ற அசைவுகள். ஆனால் அதன் உபவிளைவான இசையில் எழும் கானம் அற்புததிலும் அற்புதம்.

நகுலனின் இறுதி பத்தாண்டு கவிதைகள், சி. மணியுடையதைப் போல கண்டு கொள்ளப்படாமல் போகவில்லை. அந்த விஷயத்தில் நகுலனின் ”நான்” ஒரு முழுமையடைந்த தன்னலம்தான். அவரது தனித்தன்மையானது திடுக்கிடச் செய்யும் பெரிய ஓசைக்குள் நிகழும் கண நேர மெளனம். அத்தகைய மெளனத்திலிருந்து படைப்பு ஒரு அணுவின் காளானாக முகிழ்ந்தபடியே இருக்கிறது.

 

8.        அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி

 

இருத்தலுக்கான வேட்கையில் மறுதலிப்பின் ஒரு பூரண வெளிப்பாடே, இத்தொகுப்பு. இது நகுலனின் அகமியின் படைப்பு வடிவம்.

 

சில பொறிகள்

என்னுடன் புத்தகங்கள் இருக்கின்றன

அடிக்கடி என்னிடமிருந்து நான் போய் விடுவதுண்டு.

பேயாய் உழலும் என் மனமே

நீ

பேசாமல் இரு

ஏன் இந்தச் சிந்தனைகள்?

நான் சொல்வதைவிட நீயே கண்டு பிடித்துக் கொள்வதுதான்

உனக்கு உபயோகமாக இருக்கும்.

எது நாவல்?

என்னளவில் அது

!

?

.

இதையும் கவனி

;

எழுதிக் கொண்டே போகையில்

ஒரே ரீதியில் எழுதிச் சென்றாலும், சீராகச் சென்றாலும் பல

எழுதப்படாமலேயும், சில கீழ் அமிழ்ந்து கிடப்பதில்தான் விஷேசம் இருக்கிறது.

அப்படியென்றால்

’அது’ செயல்படுகிறது.

 

நகுலனின் இரண்டாக பிளவுபட்ட இந்த நிலையை, அறிவார்ந்த, மனவெழுச்சி கொண்ட, சீலம் சார்ந்த படைப்பாளியின் மறு வடிவமைப்பு என்று சொல்லலாம். இங்கே இயற்கை மனிதனிடமிருந்து பின்வாங்குகிறது. மனிதனின் அத்தனை செயல்பாடுகளும் உள்ளார்ந்து இயற்கைக்கு எதிரானதுதான். ”நவீனன்” என்பவன் வரம்பிற்குட்பட்ட செயல்திறனிலிருந்து திசை திருப்பப்பட்டு, அதி நிலையின் சாத்தியப்பாடுகளை நோக்கித் செயல்படுபவனாக இருக்கிறான். இது ஒருவகையில் பிளவு மனநிலையின் செயற்கூறுதான் இது.

கடைசியாக, அவர் கூறுவதையே, இந்த இயற்கைக்கும் மனிதனுக்குமான இடை அம்சமாகக் கொள்ளலாம்.

 

அதெல்லாம் அப்படித்தான். நீயும் பல எழுத்தாளர்களைப் போல கனவு நிலையில்தான் இயங்குகிறாய். கனவு பேய்க் கனவாகும். கனவுகள் சிறாமீனின் பிளந்த வாய்களாகும்

 

அடிக்கடி அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணாவிட்டால் ஒரு மாதிரி இருக்கிறது.

ஏன்?

தெரியவில்லை. என்னுடன் பூர்ண சுதந்திரத்துடன்  பழகினாலும் என்னிடம் அதற்கு ஆசையோ,அன்போ, மரியாதையோ கிடையாது. தின்ன வேண்டியதைத் தின்றுவிட்டு போய்விடும். சில வேளைகளில் கொடுத்தாலும் நிராகரித்துவிடும். சில வேளைகளில் நான் உள்ள இடத்தில் என் கண் காணப் படுத்துக் கொண்டிருக்கும். என்றாலும் அதன் உருவம் என்னை வசீகரிக்கின்றது. (ஒரு முறை என் எதிர் அறையில் கட்டிலுக்கு அடியில் ஒரு அணிற்பிள்ளையைக் கவ்விக் கொண்டு பதுங்கியிருந்தது. என்னைக் கண்டதும் அந்த அணில் பிள்ளையைக் கவ்விக் கொண்டே ஓடிவிட்டது. இதுவும் ஞாபகம் வருகிறது. பின்னாடி தெரிந்தது. இது என் கண் மறைவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பது) என் அதிகாரம் அதனிடம் செல்லாது. இதுபோல் நாம் மனிதர்களிடம் இருக்க முடியுமென்றால்?

ஏன் முடியாது? ஒரு லஷ்ய-அலஷ்ய பாவம். ஒன்றையும் பொருட்படுத்தாது தன்னிடமிருந்தே போய் விடுதல்.

அந்த மஞ்சள் நிறப் பூனை உன்னை விட்டுப் போனாலும் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கத்தான் இருக்கிறது. இந்த நிச்சயம் இருந்தால் போதும் ஓம் என்று சொல்லவும் கற்றுக் கொள்ள வேண்டும். (ஆம் என்பதை அந்த நண்பன் ஓம் என்று உச்சரித்ததும் ஞாபகம் வருகிறது.)

இதைச் சொல்லிவிட்டுச் சச்சிதானந்தம் பிள்ளை சென்றுவிட்டார்.

 

அந்த மஞ்சள் நிறப்பூனை வேறு யார்? அந்த கணத்தில் அது தன்னலமான ஒரு நகுலனின் பிரதிதான். அல்லது இந்த இயற்கை, தன்னை செழுமைபடுத்திக் கொள்ளும் ஞானம் அது.

 

(வாசிப்புக்கு காவ்யா வெளியிட்ட நகுலன் கவிதைகள், நகுலன் 100 சிறப்பு வெளியீடும், சுருதி தனித்தொகுப்பும் காவிரியின் அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி PDF பிரதியும் பயன்பட்டது. காவ்யாவின் வெளியீடு ஒரு தண்டனையாக இருந்தது. நகுலனுக்காக அந்த மஞ்சள் நிறப் பூனையாக அதை ஏற்றுக் கொண்டேன்.)


("கனலி" இணைய இதழில் "நகுலன் நூற்றாண்டு சிறப்பிதழில்" வந்த கட்டுரை. )

விட்டல்ராவ் கதைகளின் எளிமையின் அடியாழங்கள்.

ஒரு படைப்பாளியின் அறமும் அனுபவங்களும் படைப்பாகும் கணம் என்பது ஒருவகையில் அந்தப் படைப்பாளியின் சிந்தனைகளும்  அதன் உள்ளடுக்குகளும் ஒரு மொழி வழ...