Saturday, April 16, 2022

மேஸ்ட்ரோவின் இசை...

 


             சையைத் தவிர இளையராஜாவிற்கு எதுவும் தெரியாது என்பது இளையராஜாவைப் பற்றிய குறைந்த மதிப்பீடு. இளையராஜா, மிக நுட்பமானவர். பின்னணி இசையில் இந்திய அளவில்கூட அவரளவிற்கு உணர்வெழுச்சியையும், இசைக் கருவிகளின் புனைவுச்ச நெடுமையிலிருந்து உருக்கொள்ளும் கற்பனையையும் சாஸ்திரிய உள்ளடக்கத்துடன் கிராமிய சந்தங்களையும் ஒன்றிணைத்து அதிசயங்களை நிகழ்த்துபவர்கள் யாருமில்லை.

               அவர் இசையமைக்கும் பாடல்களுக்கான காட்சியமைப்பு தவிர்த்து, ஒட்டு மொத்த படத்தின் ஒவ்வொரு காட்சி நிலைமைக்கும் அதிகபட்ச சாத்திய பின்னணி இசையை, அந்தக் காட்சி கொடுக்க வேண்டிய உணர்வொழுங்கை, ஸ்வர கட்டமைப்பை, மிக அநாயசமாக, துரித கதியில்  இசைக் குறிப்புகளாக எழுதும் இசையமைப்பாளர் இளையராஜாவைத் தவிர வேறு யாருமில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கப்போவதில்லை.

                அவர், தமிழில் வந்த மிக முக்கியமான, தமிழ் திரைப்பட வரலாற்றின் மைல் கற்கள் என்று சொல்லக்கூடிய பெரும்பான்மையான படங்களுக்கு இசையமைத்தவர். அத்தகைய படங்களில் குடும்பம், அரசியல், பொருளாதாரம், கம்யூனிஸம், மனப்பிறழ்வு, காதல், மசாலா என சகல கதைக் களன்களையும்,  கதை மாந்தர்களையும், அவர்களின் உணர்வு நிலைகளையும், உணர்ச்சி பதற்றங்களையும் தன்னுள் உள் வாங்கி அதற்கான, அத்தகைய காட்சிகளுக்கான இசைக் கோவைகளை மிகக் பொருத்தமாக உருவாக்கியவர்.

                 திரைப்படம் என்பது மக்கள் சமூகத்திலிருந்துதான் உருவாகின்றது. எனவே ஒரு எழுத்தாளனுக்கு இணையாக, ஒரு இயக்குநருக்கு தோன்றும் காட்சிப் புலத்திற்கான உணர்வொழுங்கை, அந்தக் காட்சியமைப்பிலிருந்து இசை வடிவத்திற்கு மடைமாற்றுவதென்பது எளிதானதில்லை. கூடவே இவை எதுவும் தெரியாமல், ஒரு சமூகத்தில் மனித வினையாற்றலை மிக எளிய, ஆனால் அழுத்தமான இசை வடிவமாக மாற்றுபவர் ஒரு துறையில் சிறந்தவர், மற்ற ஏதும் அறியாதவர் என்பதற்கு உதாரணமாக்க முடியாது.

                    இளையராஜாவிற்கு எது சரி, எது தவறு என்று நன்றாகவே தெரியும். அதாவது தனக்கு எது சரி, எது தவறு என்று நன்றாகவே தெரியும். எனவே அவர் மோடியை ஏன் அம்பேத்கருடன் ஒப்பிடுகிறார்? பா.ஜ.க ஆட்சியை நல்லாட்சி என்று ஏன் முன்னுரை வழங்குகிறார் என்றால், அவருக்கு இதுப் பிடித்திருக்கிறது. அதனால் அம்பேத்கரைப் பற்றிய பிம்பங்களின் இத்தனை நாள் நிலைப்பாடுகளை இத்தனை வருடங்களுக்குப் பிறகு மறுவுருவாக்கம் செய்கிறார். அம்பேத்கரையே இந்த ஆட்சி நல்லாட்சிதான் என்று சான்றளிக்க வற்புறுத்துகிறார். அல்லது அப்படி ஒன்றை அனுமதிக்கிறார். "தான்" என்ற அகங்காரத்தை ஒழித்தவரே ஞானி. ஆனால் ஒரு படைப்பாளி "நான்" மூலமே உருவாகிறான். ஆனால் இரண்டும் சாத்தியப்படும் இடம் ஒரு போலிதான். அது எதேச்சையாக ஒளி வீசுகிறது. அல்லது அதை மாபெரும் கருணை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அரசியல் நிலைப்பாடுகளில் தான் மாட்டிக் கொண்டேன் என்று வருத்தம் அடைவதில்லை. தன் இசையை இத்தனை நாட்களாக அதை நோக்கியே முன்னெடுத்தார் என்பது வரம்பற்ற செயல்பாடுகளால் நிரூபிக்கிறார்.  இதை நாம் மறுத்தால் அவரது இசையை முற்றாக மறுத்தாக வேண்டும். ஆனால் நமக்கு வேறு நாதியில்லை. வாய்த்ததே நல்வாய்ப்பாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இது தமிழ்நாட்டின் நிலை மட்டுமல்ல. இது இந்தியாவின் நிலை மட்டுமில்லை. இது உலகம் முழுக்க நிலவும் சனாதன நிலை.

           நீதி தேவதையின் தர்க்கம் பாரபட்சமற்றது. அதுவே சாக்ரட்டீஸை விஷம் நிரம்பிய கோப்பையை காற்றில் ஏந்தி சமத்துவம் காண முடிந்தது. தான் பெரிய சிந்தனையாளன் என்பதால் நீதியின்பால் விதிவிலக்கை அவர் அனுமதிக்கவில்லை. சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது மக்களாலேயே வலுவான உரையாடல்களின் மூலம் மறுதலிக்கப்படுகிறது. இங்கே, அம்பேத்கர் எவ்வாறு ஓர் இனக்குழுவின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் போராடினாரோ அதையே ஒரு பேரினத்தின் விடுதலை போன்ற பாசிசத்திற்கு ஒப்பு வைக்கப்படுகிறது. எல்லோரும் சந்தர்ப்பவாதிகளாக மாற்றமடைந்துவிட்டதை நம்ப மறுக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையை வளர்த்தெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாலேயே அக்குழந்தையின் பால் பாலியல் செயல்பாடு உரிமையுடையது என ஒரு தகப்பனின் நம்பிக்கைக்கு ஒப்பான கொடுமை இது.

                  எனவே, இனிமேல் அறிவு தளம் என்ற "ஒன்றை" நிலைத்த ஒரு வரையறைக்குள்ளே வைத்திருப்பது மொழியின் பெலஹீனம். அல்லது சமூகத்தின் பெலஹீனம். அல்லது கருத்தியல் பெலஹீனம். இது புதிய மனோபாவம். புதிய மனப் பழக்கங்களைக் தேர்ந்து கொண்டவர்கள் சுய சாதிப் பிரச்சனைகளுக்கு அந்த நிலைக்காகப் போராடியவரையே விட்டுக் கொடுக்கும் கருத்துவரைக் கொண்டு செல்வது, அல்லது அதற்கான காரணங்களைக் கொண்டிருப்பது வியப்பானதில்லை என்ற அறமற்ற நிலைக்கு வந்துவிட வேண்டும். தர்க்கம் கருத்தைக் கடந்ததாக இருக்கிறது. அது ஒரு கொலையாளியின் கையை மட்டுமே தண்டிக்க வகை செய்கிறது.

           ஊறுகாய் வேண்டுமா, சோறு வேண்டுமா என்பதற்கு நாம் முதலாவதையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

            நொடிக்கு ஆயிரம் வாகனங்கள் கடக்க, விபத்து நடந்த அந்த ஒரு வாகனத்தைப் பற்றியே கவனம் திரும்புவதே ஆரோக்கியமான மனநிலை. மீந்த தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது வாகனங்களை கவனம் கொள்ளாதது இயல்பு. ஆனால் அந்த ஒரு வாகனத்தை பொருட்படுத்தாமல் கடப்பது மானுட வர்க்கத்திற்கே துரோகிப்பது போல. ஆனால் கருத்தை முதன்மைப்படுத்தாமல் கருதுகிறவர்களை பொருத்திப் பார்ப்பதை தர்க்கம் எளிதாக்குகிறது. இனி தங்க ஊசிகளைக் கண்களில் குத்திக் கொண்டு அம்மனுக்கு குலவை சொல்ல வேண்டியதுதான் மிச்சம்.


Friday, April 15, 2022

மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும்

இன்று அம்பேத்கர் ஜெயந்தி. 
(14-02-2022)

பா. ஜ.க வினர் தென் அழகாபுரம் பகுதி காவாத்துத் திடலில் அம்பேத்கரின் பேனருக்கு மாலையிட்டு மரியாதை செய்து கொண்டிருந்தனர். எனக்குக் கொஞ்சம் புரியாமல் இருந்தது. அம்பேத்கருக்கும் பா.ஜ.க விற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. 

ஏனென்றால் சேலம் தென் அழகாபுரம் என்பது தலித்துகள் பகுதி. அதை ஒட்டித்தான் காவல்துறையின் காவாத்துத் திடல் இருக்கும். வலைக்கட்டி எப்போதும் குழுக்களாக விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ இரங்கல் பேனர்கள் தொங்கும். 

தீண்டாமை மிக்க இந்து மதமே வேண்டாம் என்று பெளத்தத்திற்கு மாறிய, நூறாண்டுகள் ஆன அம்பேத்கரை மீண்டும் இந்துத்துவா சக்திகள் தங்களில் ஒருவராக அவரைக் காட்டிக் கொள்வதில்தான் பா.ஜ.க வின் அரசியல் வியூகத்தின் நுட்பம் அடங்கியிருக்கிறது. 

அரசியல் தலைவர்கள் தவிர்த்து பெரிதாக தலித்துகள் இல்லாத எந்த இனக் குழுவும் அம்பேத்கரின் பிறந்த நாளை பொது வெளியில் கொண்டாடுவதில்லை. இந்த விஷயம்தான் பா.ஜ.க வின் ஆயுதமாக மாறுகிறது. அவர்கள் பல்வேறுபட்ட தங்கள் எல்லைக்கு அப்பால் இருக்கும், அதாவது இஸ்லாமிய, கிருத்துவ விஷயங்களைத் தவிர்த்து, ஏன் வருங்காலங்களில் அதையும் தங்கள் இனமாகக் காட்டுவதன் மூலமாக பொது புத்தியின் நுண்மையை மழுங்கடிப்பார்கள். இதுவே அவர்களின் அரசியல் பலம். இது மற்ற கட்சிகள் செய்யாத எல்லை. 

இந்த செயல்பாட்டை, காங்கிரஸோ, திமுகவோ கையிலெடுத்திருக்க வேண்டும், தமிழ் நாட்டைப் பொறுத்து.
இதுபோன்ற விஷயங்களில் தவறவிடும் அரசியல் கட்சிகள், காங்கிரஸைப்போல பொது கவனத்திலிருந்து துடைத்தெடுக்கப்படும். 

பதிவிட்டிருக்கும் படத்தில் பா.ஜ.வின் பேனருக்குப் பின்னால் அந்தப் பகுதி தலித்துகளின் சிறிய அளவிலான பேனர் மையப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஆபத்து. பூர்வர்களையும் அதாவது உரிமை கோருபவர்களையும் இனி இல்லாமல் செய்துவிடக்கூடிய ஓர் உத்திதான் இந்த பிறந்த நாள் கொண்டாட்ட நாடகம். 

இதன் உப விளைவாக எங்களின் தலைவன் என்ற போர்வையில் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க, அல்லது பெரும்பான்மை அடைந்துவிட்டு, அதன் பிறகு தேர்தலையே புறக்கணிக்கக் கூடிய ஒரு நிலைமையும் வரக்கூடும். 

எந்த நிலை நாட்டிற்கு வரக் கூடாது என்று போராடினார்களே, அவர்கள் உயிரோடிருந்தால் காந்தியைப் போல இல்லாமல் செய்தும், அவர்கள் இல்லாமல் இருந்தால், அவர்களை தம்முடையவர்களாக மாற்றும் இந்த வஞ்சக நாடகம் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டே வருகிறது. மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஓர் அரசியல் கட்டம் இது. 

ஜெய் பீம்.

Wednesday, April 13, 2022

ழ ....

 


            டிப்படை கருத்தாக்கங்களின் அடியாழங்களில் நிகழும் மீயழுத்த வெடிப்புகள் காலத்தின் அடுத்த தலைமுறைக்கான, புதிய வெளிகளுக்கான உந்து சக்தியாக இருக்கிறது என்பதைவிட,  அது இயற்கையின் ஒரு கால இடைவெளியின் சடுதி மாற்றமாக இருந்துவிடுவதையும், அதற்கான திட்டங்களையும் யாரும் கணித்துவிடுவது எளிதல்ல.


     எனக்கு இளையராஜாவின் இசை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஏ. ஆர். ரஹ்மானின் இசையும்.
ஏ. ஆர். ரஹ்மான் இளையராஜாவிற்கு அடுத்ததாக தமிழ் திரை இசையில் ஒரு Trend Setter என்பதில் எந்த எதிர் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இளையராஜாவின் கற்பனை வறண்டபோது அல்லது ஒரு படைப்பாளியின் தரிசன எல்லை ஒரு கால வரையறைக்குள் அடங்குவதுதான அவகாசம் முடியும்போது அடுத்த இசை தரிசன சாத்தியம் ஒன்று உருவாகிறது. அதுதான் ஏ. ஆர். ரஹ்மானின் இசை. இங்கே இவரைப் பொருத்தவரை, இசை மட்டுமல்லாமல், அது அவரது தனிப்பட்ட ஆளுமையையும் சார்ந்ததாக மாறுகிறது. எப்படி என்றால் இளையராஜா இசையில் தனது சாதனை உச்சத்தை அடைந்தார் என்றால், ஏ. ஆர். ரஹ்மான் அதைத் தாண்டி தன்னை நிறுவிக் கொள்வதற்கான தேர்ந்த வழிகளை கையாண்டார் என்பதை கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். வழக்கமாக ஏ. ஆர். ரஹ்மான் தனது அபூர்வமான நேர்காணல்களில் ஆங்கிலத்தில்தான் பேசுவார். தமிழுக்குப் பிறகு அவரது இலக்கு ஹிந்தி. ஆனால் ஹிந்தி என்பது அவருக்கு ஒரு இடைவெட்டுத்தான். அது அவர் ஹாலிவுட்டிற்கு நுழைவதற்கான ஒரு படி.
கிட்டத்தட்ட "கருத்தம்மா"விற்கு கிராமத்துக்கான இசையே அவரது எதிர்காலமும் இளையராஜாவிற்கான அசலான ஒரு மாற்றும் என்ற கருத்து அப்போது நிலவியது. ஆனால் எதிர்ப்பார்ப்பை ஏ. ஆர். ரஹ்மான் சமாளித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த இசை எந்த அளவிற்குத் தாக்குப் பிடிக்கும் என்று யோசிக்கும்போதே, ஹிந்தியில் ஹிட்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அவரது "வந்தே மாதரம்" ஆல்பம் மிக பெரிய எழுச்சியை அடைந்தது. ஆனால் அதற்குப் பின்னால் இருந்த ட்ரம்ஸ் மணி, ரஞ்சித் பரோட் போன்றவர்களின் மாபெரும் உழைப்பு என்பதை இளையராஜா போல ஏ. ஆர். ரஹ்மான் மறைக்கவில்லை. குறிப்பாக "வந்தே மாதரம்" இரண்டாவது ஆல்பம் "ரஞ்சித் பரோடின்" இசையமைப்பில் மிகச் சிறப்பாக வந்திருந்தது. ஏ. ஆர். ரஹ்மானின் "வந்தே மாதரம்" அவரது ஒரு சில திரைப் பாடல்களின் சாயலில் அமைந்ததுதான். இவ்வளவு ஏன்? "ஜெய்ஹோ"வே மற்றொரு அவரது பாடலின் தன்னகல்தான். அப்போதே அவருக்கு வறட்சி வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் "ரஞ்சித் பரோட்டின்" பாடல்கள் வேறு தரத்தில் பாரம்பரிய இசையின் Fusionனில் கலக்கியிருந்தார். அதை சி. மணிக்குப் போட்டுக் காட்டியபோது சாஸ்திரிய இசையின் கட்டட்ற தன்மையை நினைவு படுத்தினார். ஆனால் எனக்கு Fusion இசைதான் ஆகச் சிறந்த சாதனையாகப்பட்டது. நிறைய படங்களுக்கு ஏ. ஆர். ரஹ்மானின் இசைப் பணியை ரஞ்சித் பரோட்தான் பார்த்திருக்கிறார்.

    ஏ. ஆர். ரஹ்மானின் அடுத்த இலக்கான ஹாலிவுட் கனவு என்பது வெறும் இசையமைப்பு என்பதைத் தாண்டி, விருதுகளின் பக்கமே சாய்ந்தது. ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட வேண்டுமானால், அது குறைந்தது 40 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும். ஆஸ்கர் விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளியானதாக இருக்க வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் 7 நாள்களுக்கு ஓடியிருக்க வேண்டும். வெளிநாட்டு மொழித் திரைப்படம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. ஆவணப் படம் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாமல் நியூயார்க்கிலும் ஓடியிருக்க வேண்டும் என்ற கூடுதல் விதி இருக்கிறது. வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான பிரிவில் ஒவ்வொரு நாடும் ஒரேயொரு படத்தை மட்டும் பரிந்துரை செய்ய முடியும். இந்த விருதை சிறப்பு நிபுணர்கள் குழுவினர் அறிவிக்கிறார்கள். எனவே ஆஸ்காருக்காக ஹாலிவுட் பட வாய்ப்புக்கு வழி வகுத்துக் கொண்டார். இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்தார். இந்தியாவே வியந்தது. இதில் பன்னாட்டு நிறுவனங்களின் சதி இருப்பது மறை பொருள். 1994 லில் "ஐஸ்வர்யா ராயி"க்கு உலக அழகிப் பட்டம் வழங்கப்பட்டது, வெறுமனே ஒரு போட்டி நிகழ்வு இல்லை அது. அதற்கு பிறகுதான் இந்தியாவில் அழகுக் கலை குறித்த பெண்களின் அக்கரையும் வீதிக்கு வீதி அழகு நிலையங்களும் அழகு சாதன பொருட்களின் சந்தையும் சூடுபிடிக்கத் துவங்கியது எனலாம். அதே போலத்தான் ஏ. ஆர். ரஹ்மானுக்கான ஆஸ்கர் விருதும். இதை 2011ல் ஹிந்தி இசையமைப்பாளர் இஸ்மாயில் டார்பர், இது "வாங்கப்பட்ட" விருது, ஏ. ஆர். ரஹ்மானின் "ரோஜா"வுக்கோ, "பம்பாயி"க்கோக் கிடைத்திருந்தால் சந்தேகிக்கத் தேவையில்லை. இது ஆஸ்கருக்கான தகுதி இசையே இல்லை என்றார். ஆனால் "வாங்கப்பட்டது" என்பதற்கான விளக்கமளிக்க மறுத்துவிட்டார். இதன் உள் நிகழ்வு என்ன என்று கணிப்பது உலகலாவிய ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் திட்டம்தான்.

      இது இப்படியிருக்க, ஆஸ்கார் விழா மேடையில் எல்லோரும் போற்றும் வகையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்ற வசனத்தோடு நிறுத்திக் கொண்டார். நாமும் ஆஸ்கார் மேடையில் தமிழ் என்று மயிர்க்கூச்செரிந்தோம். அது உலகமே ஒற்றைக் கண் கொண்டு பார்த்த ஒரு நிகழ்வு. அங்கே அவர் இப்போது பேசுவதுபோல தமிழுக்காக, தமிழில் இல்லை, தமிழுக்காக ஆங்கிலத்தில் ஒரு சில வரிகளைப் பேசியிருக்கலாம். அதாவது 45 நொடிகள். அது இலங்கைத் தமிழர்களுக்கான ஓரிரு வார்த்தைகள். ஏனென்றால் "ஸ்லம்டாக் மில்லியனர்"(2008) படம் 2009 பிப்ரவரி மாதம்தான் ஆஸ்கார் அறிவிக்கப்பட்டு விழா நடக்கிறது. அதே காலக் கட்டத்தில்தான் "முள்ளி வாய்க்கால்" இன அழிப்பு 2009 மே மாதம் முடிவுக்கு வருகிறது. போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். இலங்கை இனப் போரின் முழு வடிவமும் உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் முழுமையாகத் தெரியாது. அது ஒரு அற்புதமான சந்தர்ப்பம். மீண்டும் நிகழ முடியாத அறிய வாய்ப்பு. அங்கே, விழா மேடையில் ஏ. ஆர். ரஹ்மான் இலங்கைப் பிரச்சனையை கோடிக்காட்டி, இன அழிப்பை அடையாளங்காட்டி இருக்கலாம். அது சர்வதேச நிலையில் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அவர் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று பிடில் வாசித்துவிட்டார்.

       வறண்டு போன தமிழ் அல்லது இந்திய திரையிசை வெளியில், ஏ. ஆர். ரஹ்மானுக்கான வடநாட்டு ஆதரவும் பாகுபாடும் பார்த்துக் குறைய ஆரம்பிக்கவும், தமிழ், தமிழ் நாடு என்று இப்போது அவருக்கு அக்கரை வந்திருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்புக் குரலாவது அவரின் உண்மையான மொழி உணர்வின் வெளிப்பாடாக இருக்கட்டும்.

      அதே போல மலையாள திரை இசையமைப்பாளரான சேகரின் மகன் திலீப், தனது தந்தையை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார் என்றால், ஆதரவற்ற அந்த மூளை தன்னியல்பாக இப்படித்தான் சிந்திக்கும். அல்லது அந்தத் தலைமுறையின் சாங்கித்யம் அதுதான்.

        இங்கே இளையராஜா தான் இசையமைத்த சிம்பொனியே என்ன ஆனது என்று இன்று வரை சொல்லாமல் இருக்கிறார். அல்லது இது போன்ற விஷயங்கள் பொது வெளிக்கு அப்பால் ரகசியங்களுடையதாக இருந்தாலும் இளையராஜாவும் ஏ. ஆர். ரஹ்மானும் ஜாம்பவான்கள்தான்.

       இப்போது இந்திய திரை இசையில் ஒரு தேக்க நிலை நிலவுகிறது. குறிப்பிட்ட ஒரு ஆளுமை அல்லது Trend Setterக்கான phenomena ஏதும் உருவாகவில்லை. அல்லது இதுதான் அடுத்த ஒரு நிலையோ என்றும் தோன்றுகிறது. ஒரு மையமற்ற நிலை. இந்த நிலை என்பது லட்சிய வாதம் என்பது மறைந்துபோய், Entertaining என்றாகிவிட்டது. அதுவும் உலகத் தகவல் தொடர்பின் சலுகையால் அசல் இசை என்ற ஒன்றுக்கான தேவையே அற்றுப் போய்விட்டது. கற்பனை வற்றிப்போன வெற்று கூச்சலாக இருக்கும் திரையிசை என்பது தன்னுள் தொழில் நுட்பத்தையும் அடக்கிக் கொள்கிறது. இது ஒரு படைப்பாளியை வர்த்தகனாக உற்பத்தியில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

     எனக்கு இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் இசைப்பிடிக்கும். ஆனால் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரைப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

பொருளாதார உலகில் பொருளே பிரதானம்.

(நன்றி : "தமிழணங்கு" சந்தோஷ் நாராயணனுக்கு)

Wednesday, April 6, 2022

மேற்கத்திய இரு பெரும் தத்துவத்தைக் கவிதையில் கடந்த சி. மணி



சி. மணியின் 12 வது நினைவு தினம், 06-04-2022 இன்று.


அவருடனான ஒரு மாலையில் மொழியின் செயல்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அது ஒரு ஞாயிறு. அன்று சர்வராஜ் இல்லை. அவர் திங்கள், வெள்ளி மட்டும்தான் மணியைப் பார்க்க வருவார்.

சிந்தனையே மொழியின் ஒரு உப செயல்பாடுதான். அது எத்தகைய மொழியாக இருந்தாலும். அதாவது சைகை மொழியாக இருந்த போதும். மெளனம் என்பது மற்றுமொரு மொழியாகவே செயல்படுகிறது. எல்லா மொழிக்கும் அது பொதுவான ஒரு கூறாக இருக்கிறது என்று எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது, அந்த பொதுவான மொழியைக் கையாண்டு கொண்டிருந்தார்.

கடைசியாக, விட்கெண்ஸ்டைன் பற்றி ஒரு குறிப்பைப் பற்றிச் சொன்னேன்.

"இதுவரைத் தொகுப்பின் சிந்தித்தல் கவிதையைப் படித்தீர்களா? என்றார்.

" அதை முன்பே வாசித்துவிட்டேன்"

அப்போதுதான் எனக்குப் பொறி தட்டியது.

தத்துவ சிக்கல்கள் மொழிச் சிக்கலால் உருவானவை. மொழியைச் சரியாகப் பயன்படுத்தினால் இந்த சிக்கல்களைக் கடந்துவிடலாம் என்ற சிந்தனையைக் கொண்டவர் விட்கெண்ஸ்டைன்.

தற்போது கிரியாவினால் அவரைப் பற்றிய புத்தகம் வந்திருக்கிறது. வாசிக்க வேண்டும்.

நிச்சயமாக மணி விட்கெண்ஸ்டைனை வாசித்திருப்பார் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு நாளும் அது பற்றி பேசியதில்லை. எனக்குத்தான் எல்லாம் புதிதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தன.

சி மணியின் கவிதையைப் பார்ப்போம்.

சிந்தித்தல்
@@@@@@@

சிந்திப்பதற்கு

மிகச்சிறந்த முறைஎது என்றால்

சிந்திக்காமல்

இருந்து விடுவதுதான்.

சந்தேகமா?

சரி,ஒரு தொடக்கமாக, நீசிந்திக்க முயன்று பார்க்கலாம். மொழியைப் பயன்படுத்தாமல்.

மேலும், மொழியைப் பயன்படுத்த வேண்டுமானால் உனக்குத் தெரியாத மொழியை

உபயோகி.

கணையாழி ஜூன் 94
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மணி விட்கெண்ஸ்டைனை தாண்டி ஓடிவிட்டதாகவே எனக்குப்பட்டது. சிந்தனையின் எல்லையே மொழியின் எல்லைதான் என்று விட்கெண்ஸ்டைன் சொல்லும்போது, மணி அதை பயன்படுத்தாமல் சிந்திக்கச் சொல்வது ஏதோ ஒரு தப்பித்தல் போல முதலில் தோன்றியது.

ஆனால் மணி விட்கெண்ஸ்டைனைக் கடந்து அடுத்தக் கட்டத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தேன். அதுவும் நமக்குத் தெரியாத ஒரு மொழியை எப்படி பயன்படுத்துவது?

இங்கே விட்கெண்ஸ்டைன் சொல்வதுபோல மொழிச் சிக்கலாலேயே தத்துவச் சிக்கல் வருகிறது என்பதை மணி Bypass செய்வது புரிந்தது.

மொழியில்லாமல் அல்லது தெரியாத மொழியில் சிந்திப்பது என்பது மனித மூளையின் சவால். அப்போது மொழியில்லாமலும், சிந்தனை என்ற அடிப்படை phenomena தன்னியல்பாக நடக்கக் கூடியதான ஒன்றுதான் என்று புரிந்தது. மொழிக்கு எல்லை என்ற ஒன்று இல்லை என்றும் புரிந்தது. அப்படியென்றால் சிந்தனைக்கும் எல்லை இல்லை என்றே தோன்றியது. அதற்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸை எடுத்துக் கொள்ளலாம்.

மணி, மூளையில் நடக்கும் வேறு ஒரு நிகழ்வை அர்த்தப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு வந்தேன். அது மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு Enlightenment என்பதாகவேத் தோன்றியது.

அது ஓர் உணர்வு நிலை. இதை கீழைத்தேய மூளையால் மட்டுமே உணர முடியும் என்று புரிந்தது. ஹைடேக்கரின் phenomenon தத்துவத்திற்கும் விட்கெண்ஸ்டைனின் philosophy of language க்கும் சி. மணி விடை கண்டு விட்டார் என்றே அன்று உணர்ந்தேன். அது கவிதையாக மிக்கக் கச்சிதமாக வந்திருப்பதை வியக்காத நாளில்லை. இப்படி தத்துவத்தை கவிதையில் சாதித்தவர்களில் சி. மணி மிக முக்கியமான தத்துவவாதி என்றே இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இது பற்றி நிறைய பேச வேண்டும்.

சி. மணியின் புகழ் ஓங்கட்டும்

Tuesday, May 4, 2010

கவிதையும் மக்களின் கடவு சொற்களும்

கவிதைக்கு அப்பால், பிரபஞ்சத்திற்கு உள்ளே . . .


        ஏப்ரல் பதினைந்து 2010 சென்னை சென்ரலில் இறங்கினேன். மாலை 4 மணி. மழைத் தூறல் இருந்தது. செனரலிலேயே விசாரித்தேன். எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு 17C ஏற வேண்டும் என்றனர். ஏறினேன். அங்கிருந்து 17D அல்லது 17E ஏறியாக வேண்டுமென்று சொன்னாகள். ஒருமணி நேரம் நின்றேன். குறிப்பிட்ட பஸ் வரவே இல்லை. சரியென்று ஒரு வாழைப்பழ வண்டிக்காரரின் அறிவுரைப் படி நடக்க ஆரம்பித்தேன்.  

       அருங்காட்சியகத்திற்கு எதிரில் ICSA அரங்கம் இல்லை. யாருக்கும் தெரியவில்லை. நடையாக நடந்து ஒரு வழியாகக் கண்டடைந்தேன்.


லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு
எதிரான கண்டனக் கூட்டம்.

           அரங்கு மிகுந்த வெளிச்சமாகவும், கூட்டமாகவும் இருந்தது. நண்பர்களும் சிவப்பாடை தோழர்களும் நிறைந்திருந்தனர். எனக்கு தலைவலி அதிகமாக இருந்தது. ஒரு ஓரமாக சென்று அமர்ந்து கொண்டேன். விளக்கு வெளிச்சம் கண்களைக் கூச வைத்தபடி இருந்தது.

           அ. மார்க்ஸ் பேச ஆரம்பித்தவுடன் செவ்வாடை தோழர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் கேள்வி நேரம் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்போது அதை வைத்துக் கொள்ளலாம் என்றார். ஆனால் அவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை. மிகப்பெரிய வாக்குவாத்ததின் இறுதியில் செவ்வாடை தோழர்கள் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

           பிறகு கூட்டம் அமைதியாக நடந்தது. அ. மார்க்ஸ் ஒரு விஷயம் சொன்னார். இந்தக்கூட்டம் லீனாவின் கவிதையை விமர்சிப்பதோ அல்லது அதற்கு அர்த்தங்களைச் சொல்வதற்கோ இல்லை. ஒரு படைப்பாளியின் மீதான இத்தகைய எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான ஒரு கண்டனக் கூட்டமே இது என்றார். எனக்கு அதில் உடன்பாடில்லாமலிருந்தது. பிரச்சனையே அவரது கவிதை பேசும் அல்லது அவர்கள் அவ்வாறு கற்பித்துக் கொள்ளும் பொருள் குறித்துத்தான். ஆனால் அதைப் பேசாமல் எப்படி கண்டனத்தை ஆழமாக நிலைநாட்டமுடியும்? அதில்லாமல் நான் வாசிப்பதற்கு ஒரு கட்டுரையையும் எடுத்து வந்திருந்தேன் அது லீனாவின் கவிதைகள் குறித்த ஒரு சிறு கட்டுரை.

           எல்லோருமே பேசினார்கள்.
         
          வராதவர்கள் அனுப்பிய கட்டுரைகளையும் வாசித்தனர்.

          மீனா என்ற தோழி லீனாவின் கவிதைகள் வாசித்தப்பின் தனக்குண்டான அனுபவத்தைக் கூறினார். தனதுடல் பற்றிய கூச்சம் விலகியதாகக் கூறினார். அது மிக முக்கியமான பதிவாக இருந்தது. ஆணைப் போலில்லாமல் ஒரு பெண் எப்போதும் தனதுடல் சார்ந்த தயக்கத்துடன் கூச்ச உணர்வை அனுபவித்தபடியே இருக்கிறாள். இதுவே லீனாவின் கவிதைகளில் பொதிந்துள்ள ஆழ்மன ஒழுங்கென்றும் கொள்ளலாம்.

            யூமா வாசுகி போசும்போது, இத்தகைய அடிப்படை விஷயங்களுக்கெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்றார். இது போன்ற அடிப்படைகளை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஒன்றுபட வேண்டும் என்றார்.

            மணல் வீடு அரிகிருஷ்ணன் பேசும்போது, கிராமங்களில் வாய்ச் சண்டைகளின் உச்சமாக ஆடை தூக்கி காண்பிப்பது போன்ற ஒரு எழுத்து செயல்தான் லீனாவின் கவிதைகள் என்றார். தான் அத்தகைய கவிதைகளைத் தொடர்ந்து இனியும் வெளியிடப் போவதாகவும் கூறினார். பிரச்சனைக்குரிய லீனாவின் கவிதைகள் அவரது மணல் வீடு சிற்றிதழில்தான் வெளிவந்தன.

              இப்போது நான் எடுத்து வந்தக் கட்டுரையை வாசிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். தலைவலி அதிகமாகிவிட்ட நிலையில் வேண்டாமென்று முடிவெடுத்து அமைதியாக இருந்தேன்.

             கண்டனக் கூட்டம் நடந்து முடிந்தது.


               நான் உடனே ஆட்டோ பிடித்து கோயம்பேடு வந்து பஸ்லில் உட்காந்தேன்.

              ஏன் நம்மால் சில உடன்பாடுகளை செய்துகொள்ள முடியவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். இலக்கிய உலகம் ஒருவிதத்தில் மேடைப் பேச்சைப் போலவே ஆகிவிட்டது. கூட்டத்திற்கு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த நிறையபேர் வரவில்லை. என் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும் நான் கிளம்பிவிட்டேன். இப்போது ஒரு மனநிறைவு என் மனதில் தோன்றியது.

             ஆனால் அந்தக் கட்டுரையை கூட்டத்தில் வசிக்கவில்லையே என்ற குறை எனக்குள் இருந்தது. எனவே அதை எனது வலைப்பூவில் போடலாமென்று முடிவெடுத்தேன். கூடவே சில பின் இணைப்புகளையும் இணைத்துள்ளேன் அது மிகுந்த பொருள் பொதிந்ததாக இருக்கும்.

கவிதைக்கு அப்பால், பிரபஞ்சத்திற்கு உள்ளே . . .
(கண்டன கூட்ட்த்திற்கு வாசிக்க எடுத்து வந்த கட்டுரை)

              கவிதை பற்றிய விமர்சனம் தற்போது இலக்கியத்திற்கு வெளியிலிருந்து வரத் துவங்கியிருக்கிறது. கவிதை விமர்சனம் என்பதைவிட எது கவிதையை விமர்சிக்கிறது என்பதே இங்கே பிரச்சனையை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. கவிதைப் பிரதியானது மொழியின் அர்த்த அடுக்குகளின் இருண்ட சிக்கலான இடுக்குகளில் பயணிப்பது. அதற்கு நேரடியான பொருள் கொள்ளும் அபத்தமே முதல் பிழையாக கவிதை விமர்சனத்தில் வழக்கமாக நடக்கிறது.

             லீனா மணிமேகைலையின் உலகின் அழகிய முதல் பெண் கவிதை தொகுப்பும் அதைத் தொடர்ந்து வந்த சில கவிதைகளும் மிகுந்த பரபரப்பிற்குள்ளானது. லீனாவின் முதல் கவிதை தொகுப்பான ஒற்றை இலையென வழக்கம்போல பெண் கவிஞர்களின் கவிதை உலகை பிரதிபலிப்பதாகவே இருந்தது.

            அது கவிதை அப்போது சாத்தியப்படுத்தியிருந்த ஒடுக்கப்பட்ட உணர்வுகளும் ஒதுக்கப்பட்ட சொற்களையும் கையாள்வதாக இருந்தது. அந்த நிலையே எல்லா பெண் கவிஞர்களும் தங்கள் நிலைப்பாடாகக் கைக்கொண்டனர். அது ஒரு கட்டத்திற்குமேல் மிகுந்த இலக்கியச் சோர்வை ஏற்படுத்தத் துவங்கியது. வார்த்தைகளை நிறமிழக்கச் செய்யுமளவுக்கு பயன்படுத்தப்பட்ட அவை அழகியலையும் படிமங்களையும் அந்தரங்களையும் பேசின. ஒரு விதத்தில் அவை பெண்ணியத்திற்குள் இயங்கினாலும் அவை தனது பாடுபொருளை அத்தகைய பெண்ணிய சித்தாந்தங்களின் மிக பெலகீனமான தளத்திலிருந்தே எதிர்கொண்டன. அல்லது அது ஒரு தொடக்க நிலையாகக்கூட அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

            ஆனால் லீனாவின் இரண்டாவது தொகுப்பான உலகின் அழகிய முதல் பெண் கவிதைத் தொகுப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு தொனியைக் கொண்டிருக்கிறது. அத்தகைய சொற்களைத் தாண்டி, அவை கொண்டிருந்த அந்தரங்கங்களையும் சுகிப்புகளையும் ஒரு செயலை, அதற்கு எதிரான கதியில் இயக்கும் மற்றொரு தொனியில் கையாண்டுள்ளார். அது தாய்வழிச் சமூகத்தின் நேரடி மன ஒழுங்காக அமைகிறது. அது எத்தகைய மனத்தடையையும் தன்னில் கொண்டிருக்காமல் அந்தரங்கங்களை பேசுவதில் மட்டுமே திருப்த்தி கொள்ளாமல் அவற்றின் உள் பொருளை பேசுகின்றன. அவை எந்தக் கருத்தையும் அல்லது உணர்ச்சியையும் அல்லது ஒரு சித்தாந்தத்தையும் அடைவதாக இல்லாமல் வேறு ஒரு நிலைமாற்றத்தை அடைவதாக இருக்கின்றன. அது ஒரு நிலையை அதாவது state – யை கைக்கொண்டிருக்கின்றன. இதை பொருட்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிலைமாறும் புள்ளியாகக் கருதலாம். அதாவது திடப்பொருளொன்று திரவமாக மாற்றமடையும் அந்த வெப்பநிலை புள்ளியில் அந்த திடப்பொருள் அடையும் ஒரு நிலைப்பாட்டை ஒத்த state of consciousness – ஆக, ஒரு அரூப நிலையடைவதையும், மனதின் மிக ஆதி உணர்வு நிலையின் தொக்கிய வடிவமாக ஆழ்மனம் செயல்படுத்தும் ஒரு செயல்பாடாகவும் நிற்கின்றன.

             அந்த நிலையானது பல வடிவங்களுக்கு சாத்தியமாகின்றது. அதில் ஒன்றே அதன் அரசியல் நிலைப்பாடு. லீனாவின் கவிதைகள் வெகு நேரிடையான சொல்லல் முறையால் இத்தகைய அரசியலை கவிதையில் ஓர் ஒற்றைத் தன்மையுடனே வாசகனைப் பார்க்க வைத்திருந்தாலும் அது கவிதையில் பேசப்படும் உத்தி வடிவிலான பெலகீனங்களை கொண்டிருக்கவே செய்கிறது. இது நவீன கவிதை வடிவ அமைப்பில் அவரது பின்னடைவுதான் என்றாலும் அத்தகைய ஒரு பதட்டமானது தனக்குள் ஒரு எளிமையை வைத்திருப்பது கிராமங்களில் நடக்கும் கைகளப்பற்ற ஒரு வாய்ச் சண்டையின் உச்சபட்சமான ஆடை தூக்கி அந்தரங்கங்களை பகிரங்கப்படுத்தும் ஒரு உச்ச செயலாகக் கூட கருதினாலும் அது ஒரு கணம் மட்டுமே நிகழும் அரூபமாகவே இருக்க வேண்டும். அதுவே வலுவான ஒரு செயலாக மாற்றமடைகிறது. அல்லது இதை கொரிய பெண்ணியக் கவிஞர் கிம் ஹை – சன் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில்போல லீனா தனக்காக வடிவமைத்துக் கொண்ட ஒரு மொழியமைப்பாகக்கூட கருதிக்கொள்ளலாம்.

              அது பெண்ணரசியலை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் மிக அந்தரங்கத்தில் ஒடுக்குமுறையின் குறியீடாக மாறிவிட்ட பாலியல் நடைமுறையானது இயல்பில் மிக அந்தரங்கமாக எதிர்த்தரப்பினால் வலுவற்ற செயல்பாடாகவே இருக்கிறது. அது தோல்வியின் சாத்தியமற்ற ஒரு பாதுகாப்பான அணுகுமுறையால் மறுக்கப்படுகிறது. இது விவாதப் பொருளாக்கப்படும்போது செயலின் குறைபாட்டு வடிவம் தனது அந்தரங்கம் வெளிப்படுவதை அனுமதிப்பதில்லை. அதற்கான செயல்வடிவம் பண்பாட்டு வடிவிலான ஒரு தடையைக் கைக்கொள்ளக் கற்றுக் கொள்கிறது.

                லீனா மணிமேகலை தனக்காக அறம் ஒன்றை அல்லது தனது படைப்பிற்கான அத்தகைய அறம் ஒன்றை கொண்டிருப்பதில்லை. மிக நுண்ணிய பொருளில் சொல்வதானால் எந்தப் படைப்பும் தனக்கான அறம் ஒன்றை கொண்டிருப்பதில்லை. படைப்பு, இயற்கையிலும் சரி இலக்கியத்திலும் சரி மிக இயல்பாக, எத்தகைய முன் முடிவுடைய தீர்க்கங்களையும் வைத்திருப்பதில்லை. இடையறாத ஒரு இயக்கம் மட்டுமே சாத்தியமாகியபடி இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் சமூகமே அதற்கான அறத்தை தான் கட்டமைத்த ஒரு வடிவத்தில் பிரதிபலிக்கிறது. இந்த வடிவம் எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஆதியிலிருந்து அது தனது கைகளில் விஷத்தையும் சிலுவையையும் வைத்துக்கொண்டுதானிருக்கிறது. ஆனால் அதன் வன்மம் மிக இயல்பானதும் கிட்டத்தட்ட எல்லா சமூக அமைப்புகளும் ஏற்று கொண்ட ஒன்றாகவே அமைகிறது.

            தனது கவிதைகள் பற்றி லீனாவே இப்படி குறிப்பிடுகிறார் தனது உலகின் அழகிய முதல் பெண் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் . . .
ஒழுங்குகளை மீறும் களிப்பை நான் ஆற்றலாக்கும்போது கவிதை என்னை எழுதச் சொல்லிக் கேட்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கும் என் முடிவற்ற இயக்கமாக கவிதை வினையாற்றுகிறது. ஏற்கனவே உள்ள அர்த்தங்களை மறுதலிப்பதும், சிதைப்பதும், புலன் கடந்த அணுகுமுறைக்கு மாற்றுவதுமான கலகமாக என் கவிதை விளைகிறது. சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்து, மாற்று அழகியலுக்கான களமாக என் கவிதை முயற்சிக்கிறது.

             தொகுப்பில் ஒரு கவிதை. தவளையின் பாடல். கவிஞர் இரவுகளில் தொடர்ந்து தனது இணையை அழைப்பதற்கான தவளையின் கத்தல்களை கேட்கிறார். அது ஒரு பாடலாகக் அவருக்கு தோன்றுகிறது. தொடர்ந்து பாடப்படும் அத்தகைய பாடல் ஒன்று எத்தகை அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும்? ஒரு பெண் தவளை எதைச் சொல்லி ஆண் தவளையை அழைக்கும்?

என் யோனி
            தளிர் பச்சை
            ஊதா நிறப்பூ
           மேயும் ஆட்டுக் குட்டி
           இடையனின் முத்தம்


            ஒரு செத்த மிருகத்தை இழுத்து தைக்கும்வரை
            பழுதடைந்த கம்பி வலையையும் கூடவே
            நாற்றம் கீறிய தொண்டை பிளந்து
             உடைகள் இரத்த சகதியில் நனையும்வரை


என் யோனி
             நாற்றுப் பாடல்
             மழைப்பூச்சி ரீங்காரம்
             காட்டிருட்டின் இசை
             தாலாட்டும் சந்தம்
           
             துப்பாக்கியின் குழலை நுழைக்கும்வரை
             நுளம்பு துளைத்து இதையம் உதிரும்வரை
             வெடிப்பார்களா எரிப்பார்களா பிய்த்து எறிவார்களா
             பொசுங்கிய மூளையின் புகை ஓயும்வரை
             துடைப்பானின் கட்டை லத்தி சிகரெட்
             முகமூடிகள் போத்தல்களையும் செலுத்தும்வரை

கவிதை இவ்வாறு நீண்டு கொண்டுபோய் கடைசியில்

யோனி பச்சை பூ யுத்தம் ரீங்காரம் மிருகம் கம்பி நாற்றம் லத்தி
சிகரெட் தாலாட்டு மழைப்புச்சி சித்திரக்காரி துப்பாக்கி கருப்பு
யோனி பிணம் கடற்கரை வெயில் கன்னிமார் மாமிசம் விந்து
யோ னி மீ ன் தொ ப் பூ ள் நா டு அ ர சு
கு ழ ந் தை க ள் பா ம் பு தோ ணி
வா ரி சு ம யி ர் கொ டி
யோ னி . . . . .

            இணையை அழைக்கும் தவளை ஒரே கணத்தில் இருவிதமான பாடல்களைப் பாடுகிறது. அது தனது நிலையாமையை அல்லது ஒரு நிலைத்தன்மையின் அபத்தத்தை காட்சிப்படுத்துகிறது அது உறுதியாக ஒரு சிதைந்த அழகை, சிதைந்த இயல்புநிலை ஒழுங்கை பாடலாக வரிக்கிறது. இங்கே இரண்டு விஷயங்கள் ஒரே சமயத்தில் அல்லது இணையாகப் பேசப்படுகின்றன. ஒன்று இந்த உலகில் உயிர்கள் நிலைத்திருப்பதற்கான கலவிக்கான அழைப்பு. மற்றொன்று அத்தகைய இயற்கை செயல்பாட்டை சீர்குலைக்கும் அல்லது அந்த சங்கிலித் தொடரை சிதைத்துக் கொண்டு வரும் சகல செயல்பாடுகளும். அந்தத் தவளையின் பாடலானது எச்சமாக, ஒரு செயலின் எச்சமாக மாறுகிறது. அந்த எச்சமே நிலையாமையின் கூறாக வெளிப்பட ஆரம்பிக்கிறது. அது அதிகார சக்தியாக இருக்கிறது. அது கடைசியில் இரண்டையும் செயல்படுத்தி முடிக்கிறது. அதாவது கலவி, கற்பழிப்பாக அல்லது வன்புணர்ச்சியாக்கப்பட்டு அந்த அழகு சிதைக்கப்படுகிறது. சிதைவே எல்லா இடங்களிலும் அதிகாரத்தை, அரசியலை நிலைநிறுத்துவதில் வெற்றி பெருகிறது. கவிதையும் இந்த இடத்திலேதான் வெற்றியடைகிறது..

             அது பிணத்தைக் கூறுபோடுகிறது. அந்த பிரேத பரிசோதனை சிதைவுகளை ஆராய்கிறது. அதன் தடம் சிதைவற்ற இடங்களுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆனால் அதன் நாற்றத்தை நாம் பொறுத்துக் கொள்வதில்லை. அத்தகைய பிரேத ஆராய்ச்சியானது முகம் சுழிப்பிற்கு இட்டுச் செல்கிறது. நம்மிடமிருந்து கிளம்பும் நாற்றமே நம்மை தடுமாறச்செய்கிறது. இங்கே கவிஞர் உயிர்களை உற்பத்தி செய்யும் ஆதர புள்ளியே அதற்கான அழிவுப் புள்ளியாகவும் இருப்பதாக கடந்துபோகிறார்.

            லீனாவின் கவிதைகள் நாற்றத்தைப் பேசுகின்றன.

           அது சகிக்க முடியாத்தாக இருக்கிறது. ஆனால் நாம் நாற்றத்தையும் அம்மணத்தையும் தடைசெய்யவும் அதைக் கைதுசெய்யவும் முயற்சிக்கிறோம். இது நம்மை புனிதத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. புனிதங்கள் பண்பாடுகளால் பாதுகாக்கப்படுகின்றன. பண்பாடு பிணங்களின் குவியலுக்குமேல் வைக்கப்பட்டிருக்கின்றன.


பின் இணைப்புகள்

பின் இணைப்பு ஒன்று

           



                நான் ஒரு சூன்யக்காரி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் கொரிய பெண்(ணிய) கவிஞரான கிம் ஹை – சன்னின் நேர்காணலின் ஒரு பகுதி. இது பாலி புரட்டாசி 2007 சிற்றிதழில் வெளிவந்தது. தமிழ் மொழிபெயர்ப்பு கே. நர்மதா. இதழாசிரியர் ராணிதிலக்

            கொரிய கவிதைகளில் பெண் மரபு உறுதியாகவே இருந்திருக்கிறது, என்றாலும் வெறும் போகப்பொருளாகக் கருதப்படுவதை சகித்துக் கொள்ளவும் அவர்களது செல்வாக்கின் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தாங்கிக் கொள்ளவும் வேண்டியிருந்தது. இதனால்தான் பெண் கவிஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவோ, கவிஞராக முக்கியத்துவம் பெறுவதற்கோ கடினமாக இருக்கிறது. பெண் கவிஞர்களுக்கு தோள்கொடுக்க யாருமில்லாத நிலையையும் தனக்கென்று புதுமொழியை உருவாக்க முடியாத நிலையையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று மிக வலுவாக பெண் நிலைவாதத்தைக் கூறும் கொரிய பெண் கவிஞரான கிம் ஹை – சன் தன்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அளித்த பதில் இங்கே மிகப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் அதையும் இத்துடன் இணைத்துள்ளோன்.

கொரிய கலாச்சாரத்தைப் பற்றிப் பரிச்சயம் இல்லாதவர்களுக்குச் சி யோன்யோ, அஜும்மா என்றால் என்ன என்று விளக்க முடியுமா? எவ்விதமான கோரிக்கைகள் அவர்கள் மீது வைக்கப்பட்டன?

          சி யோன்யோ இருவிதங்களாக வழங்கப்படுகிறது. அது திருமணமாகாத இளம் பெண்களைக் குறிக்கிறது. ஆனால் அது கன்னிப் பெண்களைக் குறிக்கும் சொல். அதாவது அவர்கள் எந்தப் பாலுறவு அனுபவமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். இதுதான் ஆண்கள் சி யோன்யோவிடம் வற்புறுத்துவது. அஜூம்மா தனக்கென்ற வாழ்க்கையை வாழாதவளாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறாள். அவள் தன்னை ஒரு தாயாக மட்டுமே அடையாளம் காணவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறாள். வீடும் குடும்பமும் மட்டுமே அவளது உலகம். கொரியாவில் இவ்விரு மாபெரும் பாத்திரங்களைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. ஆகவே ஒரு பெண் சி யோன்யோவாக, பிறகு அஜூம்மாவாக, இறுதியில் ஹால்மோனியாக (பாட்டி) இருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறாள். முதலில் அவள் தந்தைக்கும் பின்பு அஜூம்மாவுகும்போது கணவனுக்கும் கடைசியாக ஹால்மோனியாகும்போது மகனுக்கும் கீழ்படிய வேண்டும். வரையறுக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களைத் தாண்டி வாழ்கிற இந்த விதியை மீறுகிற பெண்கள் ச்சாய்யோ (வேசி) என அழைக்கப்படுவாள். ஒரு பெண்ணாக தென்கொரியாவில் நான் இந்தக் கணம் ஒரு அஜூம்மா, ஆனால் சமயங்களில் நான் சி யோன்யோ, ச்சாங்யோ மேலும் ஹால்மோனி . . . அப்புறம் சில நேரங்களில் மேன்யோ (சூன்யகாரி) மேலும் ‘பைத்தியக்காரி’. எனவே ஏன் என்னிடமிருந்து ஒரே ஒரு அடையாளத்தைக் கோரவேண்டும்? மக்கள் என் அடையாளம் எதுவென்று கேட்கும்போது நான் எதுவுமில்லை என்பேன். ஆனால் அதே நேரம் மேற்கூறிய அனைத்தும் என்பேன்.

உங்களுக்கு எந்த முன்மாதிரியோ அல்லது பெண் மொழியோ பின்பற்றுவதற்கு இல்லை என்று முன்பு கூறினீர்கள். அதைப்பற்றி விரிவாகக் கூறமுடியுமா?

            நான் கூறியது என்னைப் போன்ற அடையாளம் அற்றவர்களுக்கென்று எந்தவொரு மொழியும் இல்லை என்று. எனவே நான் எனக்கான மொழியை அதற்கென்ற இலக்கணம், தாளம், கட்டமைப்போடு உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கட்டுரை வாசிக்க 1990 – ல் பெர்லினுக்குச் சென்றிருந்தபோது ஆற்றங்கரையில் அமைந்திருந்த ஓர் அழகான ஓட்டலில் தங்கியிருந்தேன். மிக அழகான இடம் அது. அந்த இடத்தைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அதை எழுதிவிட்டு பார்த்தபோது அது ஒரு (கொரிய) ஆணின் கண்ணோட்டத்தில் ஆணின் மொழியில், ஓர் ஆணின் கவிதையுணர்வில் அமைந்திருந்தது.

அப்படி என்றால் கவிஞராக இருப்பது உங்களைப் பொறுத்தவரை என்ன?

              ஒரு கவிஞர் பசியைப் பொருட்படுத்தக் கூடாது. பணம் சம்பாதிக்கக் நினைக்கக் கூடாது. ஒரு கவிஞர் என்பவர் இல்லாத ஒன்றை இருப்பதாக அடித்துச் சொல்பவர். இல்லாத்தைச் சுட்டிக் காட்டுபவர். கவிஞர்கள் இல்லாத ஒன்றின் மறைவினைப் பற்றிப் பேசுபவர் என்று நான் நினைக்கிறேன். கவிஞர் மதிப்பில்லாதவர், ஒரு தாய்போல. தாய் என்பதன் பொருளை அகராதியில் நீங்கள் பார்த்தீர்களென்றால் அநேகமாக அதில் குழந்தையுடன் இருக்கும் பெண் என்றே இருக்கும். தாய் குழந்தையின் இருப்பை அனுமதிக்கிறாள் (அவள் அங்கே விரைவாகவே காணாமல் போகிறாள்). அவள் தன் குழந்தைக்கும் தனக்கும் இடையில் எங்கோ ஒரு படைப்புலகில் இருக்கிறாள். அந்த உலகம் குடும்பத்தை வழி நடத்துகிற குடும்பத்தலைவர் என்ற முதலாளித்துவ அமைப்பிலிருந்து வெகுதூரத்திலிருப்பது. அதுபோல பெண் கவிஞரின் இடம் மிக அசாதாரணமான ஒன்று.

தற்காலக் கொரிய பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றிப் பரிச்சயமில்லாதவர்கள் அதைப் பற்றி என்ன தெரிந்து கொள்ளவேண்டும்?

            கொரிய கவிதையின் பாரம்பரியம் மிக பிரமாண்டமானது. மக்கள் ஒன்றுகூடும்போதெல்லாம் கவிதை இயற்றினார்கள். இருப்பினும் கொரிய கவிதை பெரும்பான்மையில் ஆணுலகைச் சார்ந்தது. கொரிய ஆண்களின் கவிதையின் தனிப் பண்புகளில் ஒன்று, அக்கவிதைகள் உடல் சார்ந்த விஷயங்களைக் கையாள்வது இல்லை. அவை காட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களையே கையாள்கின்றன. இயற்கை அவர்களைச் சார்ந்து இருக்கவில்லையென்ற யதார்த்தத்தை லட்சியம் செய்யாமல் ஆண்கவிஞர்கள் தமது எண்ணத்தையும், கவியுணர்வையும் பொறுத்து இயற்கையிலிருந்து அவர்கள் விரும்புபவற்றை உருவாக்குகின்றனர். பின்பு அதனுடன் முதுமொழிகளைச் சேர்க்கின்றனர். இதுதான் தற்கால ஆண் கொரிய கவிதையின் குறிப்பிடத்தக்க வடிவம். ஆனால் இந்தச் சக்தி மிக்க ஆண் பாரம்பரியத்தில் கொரிய பெண் கவிஞர்கள் இயற்கையை வேறு வழிகளில் கையாள்கின்றனர். பெண்கள் இயற்கையை அதன் போக்கிலேயே அனுமதிக்கின்றனர். மேலும் அதன் சொந்த இயல்பையும் அதன்படியே இருக்கவிடுகின்றனர். இயற்கையும், அவளது இயல்பும் எப்படி இருக்கிறதோ அப்படியே தனித்து விடப்படுகின்றன. அந்த நிலையிலிருந்தே அவர்கள் தங்களுக்கிடையேயான சந்திப்புகள் மற்றும் எதிர் விளைவுகள் பற்றித் தமது உடல்மொழியால் பேசுகின்றனர். பெண் கவிஞர்கள் சமூக நிலைக்குறித்தும் பேசுகின்றனர். அவர்கள் தங்கள் நிலைமையை அசாதாரணமான மற்றும் வழக்கத்தில்லாத மொழியினால் எதிர்த்தும் தாக்கியும் வருகின்றனர். அவர்களது எதிர்ப்புணர்வு அவர்களது மொழியை இயல்பு மீறிய சர்ரியல் மற்றும் விசித்திர பாணிக்கு அழைத்துச் செல்கிறது. பெண் கவிஞர்களின் மொழி மிகவும் அகவியலானதாக அதே சமயம் அறைகூவல் விடுப்பதாக, புரட்சிகரமானதாக அமைகிறது. ஆனால் ஆண்கள், பெண்களின் இந்த மொழியைப் பைத்தியக்கார பெட்டைநாய்களின் கூச்சலாகவே பார்க்கின்றனர். ஏன் எங்கள் மொழி பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்று அவர்கள் யோசிப்பதில்லை . . . .

உங்கள் கவிதைகள் எதிர்வாதக் கவிதைகள் என்று கருதுகிறீர்களா?

            நான் எழுதுவது மரணத்தின் கொண்டாட்டம், கேளிக்கை என்று நினைக்கிறேன். நான் ஒடுக்குமுறையின் கணத்தை விளையாட்டாகவும், எளிதானதாகவும் மாற்ற முயற்சிக்கிறேன் . . . .

பின் இணைப்பு இரண்டு

            அதேபோல குஷ்பு விவகாரம் சம்பந்தமாக உயிர்மை இதழ் ஏப்ரல் 2010 - ல் மனுஷ்யபுத்திரன் எழுதியிருந்த்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

குஷ்பு விவகாரமும் உச்சநீதிமன்றமும்

            திருமணம் அல்லாத ஆண் - பெண் உறவுகள் குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துகளுக்காகத் தன்மீது ஊர் ஊராகக் கற்பின் காவலர்கள் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனு மீது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் மீது நீதிபதிகள் முன் வைத்த கேள்விகளின் சாராம்சம் இதுதான். ‘குஷ்புவின் கருத்துக்களால் மனம் மாறி உங்கள் வீட்டிலிருந்து யாராவது ஓடிப் போய்விட்டார்களா?‘ என்பதுதான் அது. அதற்கு அவர்கள் ‘இல்லை‘ என்றே பதிலளித்தார்கள். தங்களைப் பாதிக்காத ஒன்று இந்த சமூகத்தைப் பாதிக்கும் என்ற உத்தேசத்தில் போடப்பட்ட இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது. இதுபோன்ற போலி வழக்குகளைப் பதிவு செய்து ஊடகங்களில் அற்ப பிரபலம் தேடுவதுடன் நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடித்ததற்காகவும், ஒரு கருத்திற்காக ஒருவருக்கு இவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் ஒவ்வொருவருக்கும் தலா பத்து லட்ச ரூபாய் அபராதமும் இரண்டாண்டுகள் கடும் காவல் தண்டனையும் விதிப்பது நல்லது.

            வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்கு விருப்பமிருந்தால் திருமணம் இல்லாமலேயேகூட சேர்ந்துவாழ்வது குற்றமல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டியிருப்பது நாம் எந்த யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற குழப்பத்தையே ஏற்படுத்துகிறது..

பின் இணைப்பு மூன்று

              பத்திரிக்கை செய்தி: குஷ்புவின் மீது தொடுக்கப்பட்ட 22 வழக்குகளும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

Friday, January 22, 2010

சாகிப்கிரான் கவிதைகள் - புது விசை டிசம்பர் 2009



சாலையோரங்களில் தென்படும் வயோதிகளும் கூடவே அவர்களது கிழட்டு நாய்களும்


......... வீடு.

அதன் ஒவ்வொரு நிலையிலும்
ஏ தாவ தொரு
விலங்கு
துணையாக இருக்கிறது.

அப்படியே
குட்டிச் சுவராகும் வரை
கூடவேயிருப்பது பூனையோ நாயோ.
தவிர
கிண்ணத்தைத் தட்டினால் ஓடிவரும்
பூனையாகவும்
பந்தை வீசினால் ஓடும்
நாயாகவும்.
வேறெது இருக்கக்கூடும்
இறுதிவரை?

பூவை
காயை
கனியை
பிறகொரு
வெறுமையையும்
காய்க்கிற தாவரம்
கல்மரம் எனப்படுகிறது

என்றைக்குமான.



மொழியற்ற இடத்தில் கவிதையற்ற ஒன்றை

வடித்துச் காட்டும் பித்தன்

நீங்களிரு வரும்
பெயரில் கூட
நிகழ்வின் வெவ்
வேறு முனைகளாக
வே யிருக்கரீர்கள்.

உன் பெயரையும்
அவன் பெயரையும்
ஒன்று . . .
இரண்டு . . .
என இலக்கமிட்டு
திருத்திப் பதிக்கிறேன்.

இப்போது
எனது அலைபேசியின்
பெயரடங்கல் பகுதியில்
நீங்களிருவரும் அருகருகில்
வேறெந்த பெயர்களிலுமில்லாத
வசீகரமும் அர்த்தமும்
மிளிர்கிறது உங்கள்
ஜோடியில்.

நெருப்பை பஞ்சுப்பொதியில்
பொதிக்கிறேன்.
ஆறுகளை வழிமாற்றுகிறேன்.
எல்லைகளைத் திருத்தி
நாடுகளை ஒழுங்குபடுத்துகிறேன்.
கண்டங்களை நகர்த்தி
பூமியை அழகுபடுத்துகிறேன்.
இந்த அழகை
வெப்பம் தணிய
கொஞ்சம் தள்ளி வைக்கிறேன்.
புதிய பாதையில்
குளிர்ந்த பூமி
அன்பும் சாந்தமும்
அடைகிறது.

எல்லாமே
என் வழியாக நிகழ

எத்தனை சாத்தியங்களை
கொண்டிருக்கிறது
இந்த அலைபேசி?

இவ்வாறே
உங்கள் கருவியொன்றை
நான் இறுதியாக
வடி
வமைக்கிறேன்.


அசரீரி கட்டமைக்கும் சமூகத்திற்கான மதிப்புரை


இப்படியாக
ஒரு பழம் உண்டாயிற்று.
அது பச்சை ரத்த நிறமும்
மாம்ச மணமும்
கொண்டதாயிருக்கிறது.

எம் மறைக்கு
அவ்வைக் கிழவி
கொண்டு சேர்க்க
பழத்தைக் கீறும்
சாத்தியத்தில் மூன்று
கத்திகள் மின்னலிட்டன.

ஆனால்
ஓர் அசரீரி:
“பழத்தை------”
என்றது மறையெங்கும்
தோட்டமும் காடுகளுமென
அடர்ந்தன.
பிறகு
“பகிர்ந்துண்டால்------”
என்றதும் இரவாகி
பச்சைமர மொன்று
பற்றியெரிந்தது.
அதுலிருந்து வந்த
அவ்வசரீரி,
“பழத்தின் பலன் கிட்டாது.”
என்று முடித்துக் கொண்டது.

உடனே
எனதறை இந்த மாநகரின்
மையப்பகுதியின்
சிமெண்ட் மரங்களடர்ந்த
பொட்டலின் உச்சியில்
தொங்கலிட்டபடி இருக்கிறது.
நிர்வாண நகரமொன்றின்
ஆணையர் என் வீட்டு
கழிவறைவரை பொருத்திய
காமிரா கண்களால்
யோனிகளையும் தொங்குறிகளையும்
வெறிக்க
எனக்காக இணையம்
இந்த உலகைச் சுற்றிவருகிறது
முதலில்.

எனவே
பழத்தை நான் கை பற்றுகிறேன்.
பழம் நழுவுவதாக இருக்கிறது.
கத்தி என் கைக்கு வருகிறது.
மூவரில் நானே
பழத்தை ஜீராவில்
முக்கவைத்து மென்மையாக
கீனுகிறேன்.
பழம் தொண்டையில் வழுக்குகிறது.

முழு பழமாக மட்டுமில்லை
பல பழங்களை
கத்திபோன்ற ஸ்பூனைக்கொண்டு
ஜீராவுடன், மதுவுடன்,
துரோகத்துடன், கயமையுடன்
பழக்கத்தின்
மிகத் தேர்ந்த பாவனையுடன்
படைப்பின் மென்மையைத்
தின்று கொண்டிருக்கிறது
நகரம்.

அசரீரி
மாற்று கருத்துக்களை
வழங்கியபடி வெளியெங்கும்
தொங்கிக் கொண்டிருக்கிறது.



Thursday, October 22, 2009

சாகிப்கிரான் கவிதைகள்



நினைத்ததைத் தரும் கற்பக விருட்சத்திற்கு அடியில் ஒரு நவீனன்


பசியாற்றி
ஆசுவாசப் படுத்திய
பெண்கள்
சென்ற பின்
புலி வருவதற்கு
முன்

நடுவிலொரு

கோடாரியை வர
வழைத்த
ந்த மரத்தை
வெட்டி யெறிந்தானி
வன்.

அடையாளம் தேடிய
லைந்த புலி
திகைத்தது.

காடு
கல்லாகிக் காத்திருக்கக்
தொடங்கும் கணத்திற்கு
முந்தைய ஒரு
பூவின் யுகம்
தப்பி வண்ணத்துப்பூச்சியாக
இன்னும் பறந்து
கொண்டுதா னிருக்கிறது.



மறைந்திருக்கும் பூதம்

முதலில் நீ
மது வருந்துகிறாய்
பிறகு
மது வுன்னை யருந்துகிறது
இப்போது நீ
யென்னை யருந்த
திகி லுடனு ன்னைக்
கடந்து கொண்டிருக்கிறேன்.

கட்டமைக்கப்பட்டிருக்கும்
பதுங்கு குழிகளுள் உறங்கும்
சாத்தான்கள் உனை
நானறியும் சாத்தியத்தின்
அசலோ வியத்தைச் சுக்கல்களாக்கி
ஒன்று கூட்டும் விளையாட்டி லென்னை
தோற்கடிக்க

மறுநாளும் மறுநாளு
மென்னைத் தேடியலைகின்றன

மது வருந்த.



கொல்லனின் மகள்

பழுத்து விரியும்
அந்த சிவ ப்பிரும்பை
பார்க்க
தினமும் களத்திற்குச்
சென்றுவிடுவேன்.

ஆயுதக் குவியல்களுக் கிடையே
சாம்பல் பூவாக
எனக்கொரு
சிரிப்பை வைத்திருப்பாள்.

ஒருநாள்
பெரிய கூட்டத்தினிடையே
அழுதுகொண்டிருந்தாள்
தலைவெட்டிய சிதைவுடலாக
கிடக்கும் கொல்லனின் மகள்.

பிரிதொருநாள்
அயல் தேசத்து
ஆயுதக்கிடங்கெங்கும்
ஆயுதங்களுக்கு மாற்றாக
பூக்கள்
நிரம்பிக் கிடக்க
சர்வதேச சபைகள்
அம்மனுக்குப் பூ
மிதித்துச் சென்றன.

வாத்துகளை நம்பிய
முயலை மாமிச தின்னிகள்
தின்பதைப்போலவே
வாத்துகள் சிறு
புழுக்களைத் தின்கின்றன

திசைகள்
எல்லாவற்றிற்கும்
எதிராகவே
விரைந்து கொண்டிருக்கின்றன.

திசைகளற்று
சில பூக்களுடன்
பறவை யொன்றும்
பிறகு
ஆயுதக்கிடங்குகள்.



முன்னிலை ஒருமை

எப்போதும் போலவே

நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
விருட்சம் தன்னை
நெகிழ்த்துக் கொண்டு
செம்பச்சை இலை யொன்றை
பளபளக்கச் செய்கிறது.

அந்த இலையே
விருட்சமாக
அந்த இலையே
கிளையாக
அந்த இலையே
காம்பாக
அந்த இலையே
பச்சையமாக
அந்த இலையே
ஒளியாக
அந்த இலையே
காற்றாக
காட்சிப்படுகிறது.

சிமிட்டி மலர்ந்த கணம்
இலை பழுத்து விடுகிறது.
விருட்சத்தை
கிளையை
பச்சையத்தை
பிரிந்தும் விடுகிறது.

இப்போது மரம்
வலுவானதாக மாறுகிறது.
ஒளி கண்களைக் கூச
காற்று மரத்தைப் பெயர்த்து
என் கபாலம் நசுக்க
விரைகின்றது.

நசுக்கினால் நசுங்கி
அறுத்தால் அறுபட்டு
போகவே
எல்லாம் உண்டாக்கப்பட்டிருக்க
நசுங்கும்போது ஒரு
ஓவியத்தையும்
அறுபடும்போது ஒரு
சிலையையும் விட்டுச் செல்வது,

எப்போதும் போலவே
இப்போதும் நடக்கிறது.

பவளக்கொடி இதழ் ஐந்தில் வெளிவந்தவை
(அக்டோபர் – 2009 இதழ்)

விட்டல்ராவ் கதைகளின் எளிமையின் அடியாழங்கள்.

ஒரு படைப்பாளியின் அறமும் அனுபவங்களும் படைப்பாகும் கணம் என்பது ஒருவகையில் அந்தப் படைப்பாளியின் சிந்தனைகளும்  அதன் உள்ளடுக்குகளும் ஒரு மொழி வழ...